ஜனவரி:20
புனித பபியான்
திருத்தந்தை-(கி.பி.250)
கி.பி 236ம் ஆண்டு திருத்தந்தை அந்தீருஸ் இறையடி சேர்ந்தபின் திருச்சபைளின் தலைமைப்பதவியை யாரிடம் அளிப்பது என்று உரோமை குருக்களும் பொதுநிலையினரும் ஒன்று கூடி ஆராய்ந்தனர். அப்போது பபியான் என்ற ஒரு தூயவரின் தலையில் ஒரு மாடப்புறா வந்திறங்கியது. இதுவே பபியான் என்பவரை தலைவராக்குவதற்கு தூய ஆவி அருங்குறியாக எடுத்துக்கொள்ளப்பட்டதென்று புகழ் வாய்ந்த திருச்சபை வரலாற்று வல்லுனர் ஒருவர் குறிப்பிடுகிறார். பெரிய வியாழனன்று புனிதத் தைலம் மந்திரிக்கப்படும் புனிதச் சடங்கினை தோற்றுவித்தவர் பபியானே ஆவார். 14 ஆண்டுகாலமாக திருச்சபையை வழிநடத்தினார். பின்னர் டிசியஸ் என்ற வேதகலாபனைக்காரன் ஆட்சிக்கு வந்ததால் திருச்சபை தாக்கப்பட்டது. வேதகலாபனையில் இவர் உயிர் துறந்தார். இவரது இறப்பினைப்பற்றி புனித சுப்பிரியான் கூறியது. “மறை ஆயர் ஒருவர் மறைசாட்சியின் மரண வேதனைகளை அடைவது அவருடைய சகோதரர்களுக்கு ஊக்கத்தை தருகிறது.” இவர் பொதுநிலையினரில் ஒருவராக இருந்த போது திருத்தந்தையாக தெரிந்து கொள்ளப்பட்டவர்.