Category Archives: இன்றைய தூயவர்

ஜீன்:19 – புனித ரோமுவால்ட்

ஜீன்:19

புனித ரோமுவால்ட்
மடாதிபர் – (கி.பி.952-1027)

இவர் இத்தாலியில் ரவென்னா நகரில் பிரபு குலத்தில் தோன்றியவர்.20 வயதுவரை மனம்போன போக்கில் வாழ்ந்தவர். ஒருமுறை இவரது தந்தை தம் உறவினர் ஒருவரை சொத்து தகராறு காரணமாக இவரின் கண்ணெதிரில் கொன்று போட்டார். இதற்கு கழுவாயாக ஆசீர்வாதப்பர் சபை ஒன்றில் தஞ்சம் புகுந்து அங்கு கடும் தவ முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் அங்கு துறவிகள் எவ்வித கட்டுப்பாடுமின்றி வாழ்ந்தது இவருக்கு எரிச்சலை மூட்டியது. எனவே அந்த மடத்தை விட்டு வெளியேறி முதலில் வெனிஸ் நகருக்கு அருகிலும் பின்னர் பிரனீஸ் மலைப்பகுதியிலும் ஜெபதவ வாழ்க்கையை மேற்கொண்டார்.

இடுத்த 30 ஆண்கள் அளவாக வட இத்தாலி, தென் பிரான்ஸ், தென் ஸ்பெயின் பகுதிகளில் துறவு மடங்களில் ஒழுங்குகளை பற்றுறுதியுடன் கடைப்பிடிக்க வழிகாட்டியாகத் திகழ்ந்தார். தனிமையில் இறைவனுடன் நெருங்கிய தோழமை கொள்ள விரும்பியவர்களுக்கு மனித வாடையே இல்லாத சூழலில் குடிசைகள் அமைத்துக் கொடுத்தார். அதில் ஒரு மடம் தான் கமல்டொலி என்ற இடத்தில் அப்பினைன் மலை உச்சியில் கி.பி.1012ம் ஆண்டு 5 குடிசைகள் கொண்டதாக அமைந்துள்ளது.

புனிதர் தனிப்பட்ட ஒரு துறவு சபையை தோற்றுவிக்க திட்டமிடவில்லை. இருப்பினும் கமல்டொலில் நிறுவப்பட்ட மடம்தான் கடுமையான ஒழுங்குகள் கொண்ட பெனடிக்டின் துறவறசபையாக பெயர் பெற்று காட்சியளிக்கிறது. இதுவே மேலைத்திருச்சபையில் தவ முனிவர்களுக்கான சபையாக மீண்டும் தோன்றியது. இது சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட ஒரு சிற்றூர். இங்கே வாழும் ஒவ்வொரு துறவியும் ஒரு அறை ஒரு பணித்தளம் ஒரு தோட்டம் இவற்றைப்பெற்றுக் கொண்டு அங்கே என்றும் மௌனம், தனிமை இவற்றினிடையே இறைபணிபுரிகிறார். வேளி உலகத் தொடர்பை அவர் நினைத்தும் பார்க்க முடியாது.

இப்புனிதரின் வாழ்க்கை வரலாறு பற்றி விபரிக்கும் புனித பீற்றர் டேமியன் இவ்வாறு கூறுகிறார்: “ரோமுவால்ட்டு உலகம் முழுவதையும் ஒரு துறவற மடமாகவும் ஒவ்வொருவரையும் ஒரு துறவியாகவும் மாற்றும் திட்டம் வைத்திருந்தார்!” மௌனமும் கடும் தவமுயற்சிகளும் தான் இச்சபையின் சிறப்புக் கூறுகள். கி.பி.1086ம் ஆண்டு முதல் பெண்கக்கும் அவர்களின் நிலைக்கேற்ப கமெல்டொலிஸ் மடங்கள் தோன்றத் தொடங்கின. புனிதரின் கல்லறையில் பல புதுமைகள் நிகழ்ந்ததாக குறிப்புக்கள் உள்ளன. இதன் காரணமாக இவர் இறந்து 5 ஆண்டுகளிற்குப்பின் இவரது கல்லறை மீது ஒரு ஓர் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. கி.பி.1466ல் இவரது உடல் அழியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

ஜுன்:13 – புனித பதுவை அந்தோனியார்

ஜுன்:13
புனித பதுவை அந்தோனியார்
மறைவல்லுனர் – (கி.பி.1195-1231)

 

போர்த்துக்கல் நாட்டில் லிஸ்பன் நகரில் பிறந்த இவர் தம் இறுதி நாள்களை இத்தாலி நாட்டில் பதுவை நகரில் செலவழித்ததாலும் இவரது கல்லறை இங்கே இருப்பதாலும் இவர் பதுவை அந்தோனியார் என்று அழைக்கப்படுகின்றார். இவரது திருமுழுக்குப் பெயர் பெர்டினான்ட். இவர் கப்புச்சின் சபையில் சேர்ந்த போது இவருக்கு முன்னோடியாக விளங்கிய தவ முனிவர் (பெரிய) அந்தோனியாரின் பெயராகத் தமது பெயரை மாற்றிக் கொண்டார்.

பிரபு குலத்தில் தோன்றிய இவர் 15 வயதில் அகஸ்டினியன் துறவியானார். 8 ஆண்டுகள் கொயிம்ப்ராவில் தவ முயற்சிகளிலும் மறைக்கல்வி கற்றுக் கொள்வதிலும் செலவழித்தார். கி.பி.1220ல் மொரோக்கோவில் கிறிஸ்துவுக்காக குருதி சிந்தி உயிர் துறந்த பிரான்சிஸ்கன் துறவிகளின் உடல்களை டான்பேட்ரோ கொண்டு வந்ததை புனிதர் பார்த்தார்.

பார்த்த பிறகு அவருக்குள் தாமும் போய் இயேசுவுக்காக குருதி சிந்த வேண்டும் என்ற தணியாத தாகம் ஏற்படவே தற்செயலாக அவரது துறவு மடத்திற்கு வந்த கப்புச்சின் சபையாரிடம் தம்மை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சினார். கி.பி.1221ல் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

மொரோக்கோவுக்கு புறப்படத் தம்மை தயாரித்துக் கொண்டார். புறப்படுமுன் கொடிய நோயினால் தாக்கப்பட்டு ஜரோப்பாவுக்கு திரும்பிவிட முயன்றார். எதிர்மாறாக சிசிலியில் மெசினா நகருக்கு கப்பல் போய்ச்சேர்ந்தது. நேரே அசிசி நகரை அடைந்தார். அப்போது ஃபோர்லி என்ற இடத்தில் ஒரு குருப்பட்டம் நிகழ எல்லாம் தயார் நிலையிலிருந்தது. விழா மறையுரை ஆற்ற ஒப்புக் கொண்டிருந்த டொமினிக்கன் சபைத் துறவி வர இயலாத நிலை ஏற்ப்பட்டது.

மறையுரை ஆற்றும்படி நம் புனிதரைக் கேட்டுக் கொண்டனர். அவர் இசைந்தார். ஆனால் பேசத் தொடங்கியதும் அவரது திறமை ஆழமான மறைநூல் அறிவு, நாவன்மை, மக்களின் நெஞ்சங்களை மேலே எழுப்பும் ஆற்றல் அத்தனையும் கேட்டவர் யாவரையும் ஆழ்ந்த வியப்பில் ஆழ்த்தின.

இதை நேரில் பார்த்த சபைத் தலைவர் லாம்பர்டி பகுதி முழுவதிலும் மறையுரை ஆற்றும் பணிப்பொறுப்பை அவரிடம் அளித்தார். இறையியலும் அவர் துறவிகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியதாயிற்று. பாவிகள் நூற்றுக் கணக்கில் வந்து அவரிடம் அடைக்கலம் அடைந்தனர். பாறை மனம் கொண்ட பாவிகள் ஞான வாழ்வில் அக்கறை காட்டாதவர் யாவரும் அவரை அனுகிய வண்ணம் இருந்தனர்.

புனித அசிசியாரின் இறப்புக்குப் பின் அந்தோனியார் இத்தாலிக்கு வரவழைக்கப்பட்டார். அது முதல் இறுதி நாள்வரை பதுவையில் அவர் தங்கினார். ஒரு காட்டுப் பகுதியில் தங்கி கி.பி.1231ல் தொடர்ச்சியாக மறையுரை ஆற்றி வந்தார். இதனிடையில் இவர் முற்றிலும் உடல் வலிமையிழந்து காணப்பட்டார். பதுவை நகருக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் அனைத்து அருட்சாதனங்களையும் பெற்றவராக புனிதராக காலஞ் சென்றார். அப்போது இவருக்கு வயது 36. (ஜுன்:13, 1231.)

இறந்த மறு ஆண்டே இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. கி.பி.1946ல் திருத்தந்தை 12ம் பத்திநாதர் மறைவல்லுநர் பட்டமளித்து இவரை பெருமைப்படுத்தினார். இன்று திருச்சபையில் இவரை நினைவு கூர்வதற்கு முதன்மையான காரணம் ஏழைகளின் மீது இவர் கொண்டிருந்த பரிவிரக்கம். இவர் பெயரால் இன்றும் ரொட்டிகள் ஆலய வளாகங்களில் ஏழைகளுக்கு அளிக்கப்படும் வழக்கத்தை நாம் பார்க்கிறோம். இழந்த பொருட்களை கண்டுபிடிக்க இவரின் உதவியை மக்கள் நாடுகின்றதைப் பார்க்கின்றோம். பல புதுமைகள் அன்றும் இன்றும் நடைபெறுவதைக் கானும் போது மிக வியப்பாக இருக்கிறது.

இப்புனிதரின் பெயர் கொண்டுள்ள ஆலயங்களில் சமய பாகுபாடற்ற முறையில் இந்துக்களும், முஸ்லீம்களும் பல்லாயிரக்கணக்கில் வருகின்றனர். திருமணத்தை நல்ல முறையில் நடத்திக் கொடுக்க, பிள்ளை வரம் பெற்றுத்தர, காணாமற்போனதைக் கண்டுபிடிக்க, பேய்பிடித்தவரிடம் பேயின் விலங்குகளை அறுத்தெறிய, இவ்வாறு பல நன்மைகளை எதிர்பார்த்து அவற்றைப் பெற்று மகிழ்ச்சியடைகின்ற ஆயிரக்கணக்கான பக்தர்களை நாம் இன்றும் காணலாம். இதற்கு இறைவனுடன் இணைந்து வாழ்ந்து மேலுலகில் இறைவனிடம் ஆற்றல் பெற்றவர் என்ற காரணம் தவிர வேறு எதையும் சொல்வது முற்றிலும் தவறாகும்.
ஆனால் அதேவேளையில் இப்புனிதர் மட்டில் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்கள் அல்லாதவரும் கொண்டிருக்கும் மூடநம்பிக்கை எதுவாயினும் அதைச் சுட்டிக்காட்டவும் நாம் தயங்கக் கூடாது.

ஜீன்:11 – புனித பர்னபா

ஜீன்:11
புனித பர்னபா
திருத்தூதர், மறைசாட்சி

இவர் 12 திருத்தூதர்களில் ஒருவர் அல்லர். இருப்பினும் தொடக்கத்திருச்சபையின் அருட்தந்தையரும் ஏன் நற்செய்தி லூக்காவும் கூட, இவரது அப்போஸ்தலிக்க ஆர்வம் நிறைந்த பணிகளின் பொருட்டு திருத்தூதர் என இவரை அழைக்கிறார்கள். சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். திருத்தூதர்கள் இவருக்கு ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர் என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயர் கொடுத்திருந்தார்கள். அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு வந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார். (தி.ப.4:36-37).

3 ஆண்டுகளுக்குப் பின்னர் மனந்திரும்பிய பவுல் யெருசலேமுக்கு வருகின்றார். சீடர்கள் அவர் மனந்திரும்பியவர் என ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இவ்வேளையில்தான் பர்னபா அவருக்கு துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார்.(தி.ப.9:27)

பின்னர் அந்தியோக் நகரில் திருத்தூதர் பணியின் மூலம் பலரும் மனந்திரும்பினர் என்பதனால் யெருசலேம் நகரில் இருந்து இந்தப் புதுக்கிறிஸ்தவர்களை ஊக்குவிக்க ஒருவரை அனுப்பத் தீர்மானித்தனர். நல்லவர் தூயஆவியால் நிரம்பப் பெற்றவர். ஆழமான விசுவாசம் கொண்டவர் பர்னபா என்று சொல்லி அவரை அனுப்பினர். அவர் அங்கு போய் நேரில் கண்டதும் ஒரே இன்பமும் மகிழ்ச்சியும் கொண்டவராய் பவுலின் ஒத்துழைப்பைப் பெற தார்சிஸ் நகர் சென்று அவரை அழைத்து வந்தார்.

யூதாவிலும் எருசலேம் எங்கும் கடும் பஞ்சம் உண்டாகவே, அந்தியோக்கியத் திருச்சபையிடம் பொருள் உதவி பெற்று பர்னபா சவுல் மூலம் யெருசலேமுக்கு அனுப்பி வைத்தார். லிஸ்திராவில் ஊனமுள்ள ஒருவரை இவர் இயேசுவின் பெயரால் புதுமையாகக் காலூன்றி நடக்க வைத்தார். இதைக் கண்டு வியப்படைந்த கூட்டத்தினர் இவர்கள் இருவரையும் தெய்வங்களாக நினைத்துப் பலியிட முயன்றனர். இது நடைபெற்று முடிந்தவுடன் யூதர்கள் அதே மனிதர்களை பர்னபா, பவுலுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டிவிடவே அவர்கள் கல்லால் எறியப்பட்டார்கள். (தி.பா.14:18-20)

புpன்னர் நற்செய்தியாளர் மாற்கை அழைத்துக் கொண்டு பர்னபாவும் பவுலும் சைப்ரஸ் சென்றார்கள். அங்கு போதித்த பின் பம்பிலியா நோக்கிப் புறப்படும் போது மாற்கு அவர்களுடன் சேர்ந்து போகவில்லை. பவுல் இதனால் வருத்தமுற்றார். இதன் பின்னர் அந்தியோக்கியாவில் விருத்தசேதனம் பற்றிக் கடுமையான கருத்து மோதல் எழுந்தது. இதைத் தீர்த்து வைக்க யெருசலேம் முதல் பொதுச் சங்கம் கூடியது. பர்னபா கூட யூதர்கள் விரித்த வலையில் விழுந்துவிட்டாரே என்று வருத்தப்பட்டார் பவுல். இதனையடுத்து இன்னொரு கருத்து மோதல் பர்னபாவுக்கும் பவுலுக்குமிடையே எழுந்தது. ஏற்கனவே திருச்சபை தொடங்கப்பட்ட இடங்களுக்கு சென்று அவ்விருவரும் பார்வையிட திட்டம் தீட்டிய பொழுது மாற்கையும் அழைத்துச் செல்வோம் என்று பர்னபா சொல்ல பவுல் இசையவில்லை. விளைவு பவுல் தனியே சென்று விட்டார். பர்னபா மாற்குடன் சைப்பிரஸ் சென்றார். இங்கிருந்து பணியாற்றிய பர்னபாவின் முடிவு என்னவென்று திட்டவட்டமாக கூற இயலாது. கி.பி.61ல் உரோமையில் பவுல் சிறைக் கைதியாக இருக்கும் போது மாற்கை தம்மிடம் அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டார். அவ்வேளையில் பர்னபா கல்லால் எறிந்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவருடைய திருப்பண்டங்கள் சைப்ரஸில் சலாமிசுக்கு அருகில் கிடைத்தன என்றும் அந்தக் கல்லறையில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட மத்தேயுவின் நற்செய்தி கிடைத்ததாகவும் நம்பப்படுகிறது.

ஜீன்:06 புனித நார்பெட்

ஜீன்:06
புனித நார்பெட்
ஆயர் – (கி.பி. 1080-1134)

இவர் அரசகுலத்தில் தோன்றியவர். ஆழமான அறிவுத்திறமையுடையவர். ஆழ்ந்த தெய்வபக்தியின் காரணமாக இளமையிலே குருத்துவத்தை இவர் விரும்பினார். ஆனால் இளைஞரானதும் அரண்மனையில் பிரபுக்கள் போன்ற உயர்ந்த குலத்தாரோடு சேர்ந்து உலக இன்பங்களை நாடியதால் குருவாகும் ஆசை குலைந்துவிட்டது. ஒருமுறை இவர் குதிரையின் மீது ஏறி வேறு ஊருக்குச் செல்கையில் எதிர்பாராமால் புயல்காற்று அடித்து இடி மின்னல் உண்டானது. இவருக்கு முன் இடிவிழவே குதிரை மிரண்டு அவரைக் கீழே தள்ளியது. ஆண்டவரே நான் என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்? என்று இவர் அலறினார். உடனே விடை கிடைத்தது. தீமையை நீக்கு. நன்மை செய்யப் புறப்படு. அமைதியைத் தேடி கண்டுபிடி என்ற குரல் கேட்டது. அதன்பின் புனித பவுலைப்போல் இவரும் மனந்திரும்பினார். தம்முடைய வாழ்நாள்களை தேவ ஊழியத்தில் செலவழிக்க உறுதி பூண்டார்.

இறையியல் கற்று குருப்பட்டம் பெற்றார். தமக்குரிய செல்வங்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு அரண்மனையை விட்டு வெளியேறினார். கடுந்தவம் புரிந்து நாள்தோறும் ஒருமுறை மட்டும் உணவருந்தி புனிதராய் வாழ்ந்தார். இறை ஏவதலின்படி ஒரு புதுத்துறவற சபையை நிறுவினார். புனித நார்பர்ட் ஆன்ட்வெர்ப் நகரின் அப்போஸ்தலர் என அழைக்கப்படுகிறார். ஏனெனில் இந்த நகர மக்கள் பலர் ஒரு தவறான கொள்கையை கடைப்பிடித்து வருவதைக் கண்ட இவர் தமது அரும்பெரும் முயற்சியால் அவர்களை நல்வழிப்படுத்தினார். அதன்பின் இவர் மாக்டபர்க் நகரின் பேராயராக நியமனம் பெற்றார். அங்கே தோன்றியிருந்த பல ஊழல்களை நீக்கினார்.

ஜேர்மன் நாட்டு அரசரான லோத்தேர் என்பவருக்கு ஆலோசகராக பணியாற்றினார். மாக்டபர்க் நகருக்கு பேராயராக நியமிக்கப்பட்ட அவர் அந்நகருக்குள் முதன்முறையாக வந்தபொழுது தாழ்ச்சியின் பொருட்டு மிதியடியின்றி பேராலயத்திற்குள் நுழைந்தார். பின்னர் பேராயரின் இல்லத்திற்குள் நுழைய வந்த பொழுது வாயிற்காப்போன் இவர் யாரென்று புரிந்து கொள்ளாத காரணத்தால் இசைவுதர மறுத்தான். ஏனெனில் ஓர் ஏழையைப் போல் இவர் தோற்றமளித்தார். அப்போது வாயிற்காப்போனை நோக்கி உண்மையில் நீ தான் என்னைப் புரிந்து கொண்டாய். எனது நிலையை அறிந்து கொள்ளாதவர்கள்தான் என்னை பேராயர் பதவிக்கு உயர்த்தி இந்த இல்லத்திற்கு வர கட்டாயப்படுத்துகிறார்கள். நானோ தகுதியற்றவன். வறியவன். இப்பதவிக்கு சிறிதும் தகுதியற்றவன் என்றார். வாயிற்காப்போன் புனிதரிடம் மன்னிப்புக் கேட்டான். செக்கோஸ்லோவாக்கியா நாட்டினர் இவரை தங்கள் நாட்டின் பாதுகாவலராகத் தெரிந்துகொண்டுள்ளனர். இவர் ஏற்படுத்திய துறவறசபை நார்பெர்டைன் என்று அழைக்கப்படுகிறது. இவர்களின் தனிப்பெரும் பக்தி திவ்விய நற்கருணை நாதருக்கே உரியது. இப்பக்தியை இத்துறவற சபையை நிறுவிய புனிதரே கற்றுத் தந்துள்ளார். இவர் இறந்த மறு நூற்றாண்டில் இவரது சபையைச் சார்ந்த மடங்கள் 500 ஆக காட்சியளித்தன. பெண்களுக்கும் நார்பெர்டைன் சபை தோன்றியுள்ளது. 3ம் சபையினரும் உள்ளனர். 53 வயதில் காலஞ்சென்றார்.

ஜீன்:02 – புனித மார்சலினஸ், புனித பீற்றர்

ஜீன்:02
புனித மார்சலினஸ், புனித பீற்றர்
மறைசாட்சிகள் – (கி.பி)

இவர்களின் வீரச்சாவு தொடக்கச் திருச்சபையில் எவ்வளவு போற்றப்பட்டதெனில் திருப்பலி வேளையில் பயன்படுத்தப்படும் மாறாத ஜெபங்கள் என்ற பகுதியில் இவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு காலாங்காலமாக நினைவு கூரப்பட்டனர். மார்சலினஸ் குருத்துவ நிலை அடைந்தவர். பீற்றர் திருச்சபை வழங்கும் பேய்களை ஓட்டும் அதிகாரம் பெற்றவராக தொண்டு புரிந்து வந்தார். இருவரும் தங்களின் வேதவிசுவாசத்திற்காக சிறையில் தள்ளப்பட்டனர். அங்கு ஏற்கனNவெ வேதத்தின் பகைவர்களால் தள்ளப்பட்டிருந்த கிறிஸ்தவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தி வந்தனர். சிலரை புதிதாகவும் மனந்திருப்பினர். சிறைக்காவலன் ஆர்த்திமியுஸ் அவர் மனைவி, மகள் ஆகியோர்கூடக் கிறிஸ்துவின் ஒளியை இவர்கள் மூலம் பெற்றுக் கொண்டனர்.

இவர்களின் வீரச்சாவு நாளன்று நாயக்ரா, என்றழைக்கப்படும் காட்டுக்குள் கொண்டு போகப்பட்டனர். இங்கே இவர்கள் தலைகள் துண்டிக்கப்பட்டன. இவர்கள் வெட்டப்படுமுன் இவர்களைப் புதைக்க ஒரு குழி தோண்டப்பட்டிருந்தது. உடனே இவர்கள் புதைக்கப்பட்டனர். இந்த இரகசியத்தை கொலைஞனே வெளிக்கொணர்ந்து விட்டார். இவரும் இறுதியில் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டார்.

லூசில்லா, ஃபிர்மினா என்ற பக்தியுள்ள பெண்கள் இவர்களின் புனித உடல்களை எடுத்து திபூர்சியஸ் புதைக்குழியில் அடக்கம் செய்தனர். மன்னன் கொன்ஸ்தான்தின் கிறிஸ்துவின் ஒளியை பெற்றுக்கொண்டவர். இவர் இக்கல்லறைமேல் பேராலயம் எழுப்பியதுடன் புனித எலேனா என்ற பெயர் கொண்ட தம் தாயையும் இங்கேயே அடக்கம் பண்ணிணார்.

ஜீன்:01- புனித ஜஸ்டின்

ஜீன்:01
புனித ஜஸ்டின்
தத்துவமேதை, மறைசாட்சி –(கி.பி.100-166)

இவர் சிரியாவில் கி.பி.100ம் ஆண்டில் கிரேக்க மொழி பேசும் பெற்றோருக்கு மகனானப் பிறந்தவர். சிறுவயது முதல் தத்துவ இயலை ஆழமாக கற்றுத் தேர்ந்தவர். இவரது காலத்தில் ப்ளேட்டோ போன்றவர்களைப் பின்பற்றிய தத்துவ ஞானிகளின் தோழமையில் தன்னை இணைத்துக் கொண்டார். எல்லாம் வல்ல இறைவனைப்பற்றி இந்தத் தத்துவ ஞானம் முழுமையான விளக்கம் அளிக்க இயலவில்லை என்றுணர்ந்தார். ஒருநாள் அலைக்சாண்டிரியா நகருக்கு அருகில் கடற்கரையில் நடந்து போய்க் கொண்டிருக்கின்றார். தற்செயலாக ஒரு வயது முதிர்ந்த கிறிஸ்தவரைச் சந்திக்கின்றார். அவருடன் உரையாடியதன் பயனாக விவிலியத்தில் இறைவாக்கினர்கள் எழுதியவற்றைப் படித்தார். நாளடைவில் மீட்பரின் முன்னறிவிப்பை இறைவாக்குகளிலிருந்து சரியாகப் பரிந்து கொள்கின்றார்.

கிறிஸ்தவர்கள் எத்துணை மனவலிமையுடன் கிறிஸ்துவுக்காக வேதனைகளைத் தாங்கிக் கொண்டார்கள் என உணர்ந்தார். வியப்படைந்தார். சுhவைத் தழுவினாலும் இந்த மறைசாட்சிகளிடம் காணப்பட்ட முகமலர்ச்சியும் அவரை ஆழமாகத் தொட்டது. இவர்களின் வீரச்சாவும் இவர் திருநூலை படித்ததன் பயனுமாக கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் தமது தத்துவ மேதைக்குரிய உடையிலேயே பயணங்களை மேற்கொண்டு உரோமையை அடைந்தார். 4 நற்செய்தியாளர்களும் எழுதியவை உண்மையானவை ஜயந்திரிபற ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை என்று ஆணித்தரமாக கூறுகின்றார். இவரது நாட்களில் ஞாயிறு திருவழிபாடு எவ்வாறு நடைபெற்று வந்தது என்பதையும் விவிரிவாக எழுதி வைத்துள்ளார். அனைத்திற்கும் மேலாக திவ்ய நற்கருணையில் இறைபிரசன்னத்தைப் பற்றியும் அதில் நாம் கொண்டிருக்க வேண்டிய பற்றுறுதி பற்றியும் ஆழமாக விவரிக்கின்றார்.

மேலும் முதல் ஏவை சாவைக் கொண்டு வந்தவர் மரியா வாழ்வை கொண்டு வந்தவர் என்று இவர்தான் முதன்முதலில் குறிப்பிடுகின்றார். திவ்ய நற்கருணையில் இருக்கும் இறைபிரசன்னம் பற்றி எவ்வளவு தௌ;ளத் தெளிவாக எழுதி வைத்திருக்கின்றார் என்றால் கி.பி.147ம் ஆண்டில் இதுவரை கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டது போல் இனியும் துன்புறுத்தப்படக் கூடாது என்று திருச்சபையைச் சேர்ந்த மன்னன் அன்றோனினுஸ் பயஸ் ஆணை பிறப்பித்தான். இவர் எழுதிய பல நூல்களுள் ஒன்றில் உலகில் எப்பகுதியிலும் எக்காலத்திலாகிலும் உண்மையை சுட்டிக் காட்டிய ஞானிகள் யாவரும் கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று குறிப்பிடுகின்றார். கி.பி.166ல் புனித ஜஸ்டின் எழுதிய மற்றொரு நூல் நாம் பெற்றுக்கொண்ட விசுவாச பேருண்மை பற்றி அருமையான கோட்பாடாக அமைந்துள்ளது. இந்நூல் மன்னன் மார்க்ஸ் அவுரேலியசுக்கு எரிச்சலை மூட்டியது. புனிதர் எதிர்பார்த்தபடி சிறைப்படுத்தப்பட்டார். தமது 67து ஆண்டில் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியாக இறந்தார். இவர்தான் கிறிஸ்தவ தத்துவக் கலைக்கு முதல் பாதுகாவலர். எந்த ஒரு தத்துவக் கலையும் இறுதியில் கிறிஸ்துவிடம் மட்டுமே கொண்டுவர இயலும் என போதித்தார்.

மே:31 – புனித கன்னிமரி எலிசபெத்தை சந்தித்தல்

மே:31

புனித கன்னிமரி எலிசபெத்தை சந்தித்தல்

இந்தத் திருநாள் தொடக்கத்தில் புனித பொனவெந்தூரின் தூண்டுதலால் பிரான்சிஸ்கன் சபையில் கி.பி.1263ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர், திருச்சபை முழுவதும் பரவியது. கன்னிமரியிடம் தேவதூதர் மங்கள வார்த்தை சொன்னபிறகு சில நாட்களுக்குள் யூதேயா நாட்டில் இருந்த தம் உறவினரான எலிசபெத்திடம் மரியா சென்றார். எலிசபெத்தை சந்தித்த நேரத்தில்தான் கன்னிமரி, என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது என்ற தமது ஒப்பற்ற புகழ்பாடலைப் பாடி பூரிப்படைந்தார். அதன்பின்னர் அங்கேயே திருமுழுக்கு யோவானின் பிறப்பு வரையிலும் 3 திங்கள் அளவாகத் தங்கி எலிசபெத்துக்கு உதவி புரிந்தார். மரியா பாடிய பாடல் ஒரு நன்றிப்பாடலாகும். இறைவன் தன்னை தேவனின் தாயாக உயர்த்தியதற்கு நன்றி செலுத்தகிறார். மனுக்குலத்தை மீட்க இறைவன் வழிவகுத்ததையும் நன்றி மனப்பான்மையுடன் கூறுகின்றார்.

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று எலிசபெத் மரியாவைப் பார்த்து கேட்டார். என் ஆண்டவரின் தாய் என்று அவர் மரியாவை அழைப்பதிலிருந்தே மரியாவுக்குரிய அஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும் மரியாவின் ஆன்மீகத்திற்கு அடித்தளமும் இடப்படுகிறது. இறைவன் இத்தகைய அருளடையாளத்தை செய்துள்ளார் என்று முதலில் இறைவனுக்குரிய புகழ்ச்சியை எலிசபெத் செலுத்துகின்றார். அதன்பிறகே மரியன்னைக்குப் பாராட்டு. ஆண்டவர் உமக்கு சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் என்று கூறுவதன் வாயிலாக மரியாவின் ஆன்மீக அடித்தளமாக அமைவது அவரது ஆழமான விசுவாசம் என்பதையும் எலிசபெத் சுட்டிக் காட்டுகிறார். மரியன்னையின் புகழ்மாலையில் வாக்குறுதியின் பெட்டகமே என்று மரியாவை திருச்சபை அழைக்கின்றது. வாழ்த்துகின்றது.

வாக்குறுதியின் பெட்டகம் யூதர்களிடம் இருந்த நாள்வரை யூதர்கள் இறைபிரசன்னத்தையும் யாவேயின் வழி நடத்துதலையும் ஆழமாக உணர்ந்திருந்தனர். இந்த ஒளியில்தான் மரியன்னை உலக முடிவுவரை இறையேசுவின் பிரசன்னத்தை மக்களிடையே கொண்டு வந்தவர் என்று புரிந்து கொள்கிறோம். மேலும் மன்னன் தாவீது மகிழ்ச்சி பொங்க யூதமக்கள் கண்டுகளிக்கும் விதமாக பேழையின் முன் ஆடிமகிழ்ந்தார். அதே போன்று எலிசபெத்தின் வயிற்றுனுள் குழந்தையாக உருவாகிக் கொண்டிருந்த திருமுழுக்கு யோவானும் அக்களிப்பால் துள்ளினார் என்பதை இந்தச் சந்திப்பில் காண்கிறோம். இறுதியாக திருப்பேழை 12 யூத கோத்திரத்தாரையும் எருசலேம் நகரில் தாவீதின் அரியணை முன் ஒன்றாக கூட்டிச் சேர்த்தது. அதே போன்று எல்லாருக்கும் முதல்வராக நற்செய்தி மறைபரப்பாளராக தமக்கு தேவ தூதர் வழியாக கிடைத்த நற்செய்தியை எலிசபெத்திடம் அறிவிக்க சென்றதன் மூலம் உலக முடிவுவரை வரவிருக்கும் மறைபரப்புப் பணியாளர்களுக்கு ஓர் முன்னோடியாக மரியா அமைந்துவிட்டார் என்பதையும் உணர்கிறோம். எனவே மரியன்னை பக்தி இயேசுவைப் பின்பற்றும் அனைவரையும் ஒரே மந்தையாக கூட்டிச் சேர்க்க மீட்பரின் வல்லமையுள்ள ஜெபத்திற்கு பயன் அளிக்கும் என்று நம்புவோம். ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்ற மனித ஆன்மா எது? தனது ஆன்மீக ஆற்றல் அனைத்தையும் இறைவனின் தொண்டுக்காகவும் அவரது புகழ்ச்சிக்காகவும் அர்ப்பணிக்கின்ற ஆன்மா தான். மேலும் அத்தகைய ஆன்மா இறைகட்டளை அனைத்தையும் உறுதியுடன் கடைப்பிடித்து தேவ மகத்துவத்தையும் அவரது வல்லமையையும் எப்போதும் கண்முண் நிறுத்தும்.

மரியன்னை இறைவனில் மகிழ்ச்சி கொள்ள எல்லா உரிமையும் பெற்றிருந்தார். ஏனெனில் மனுக்குல மீட்பரை இவ்வுலகிற்கு கொண்டு வரும் பேறு பெற்றிருந்தார். இதை நன்றாக உணர்ந்திருந்தார். ஒரே ஆளான மகனாகிய கடவுள் அவரது மகனாகவும் இதைவிட மேலாக அவரது ஆண்டவராகவும் இருப்பார் என்று உணர்ந்திருந்தார். வல்லமை மிக்கவர் எனக்கு அரும்பெரும் செயல் புரிந்தார். அவர்தம் பெயர் புனிதமாமே. மரியன்னை தமக்கு வரும் மேன்மை எல்லாம் அருங்கொடை எனவும் வல்லமையே உருவானவரிடம் இருந்து வருகிறதெனவும் உணர்ந்து பாடுகிறார். இது புனித வணக்கத்துக்குரிய பேதாவின் விளக்கவுரை.

மே:26 – புனித பிலிப்புநேரி

மே:26
புனித பிலிப்புநேரி
குரு – (கி.பி.1513-1595)

இவர் இத்தாலியில் பிளாரன்ஸ் நகரில் பிறந்தவர். 26 வயது நடக்கும்போது வணிகத் தொழிலை விட்டு விட்டு தமது ஆன்மீக நலனைக் குறித்தும் மற்றவர்களின் ஆன்மீக ஈடேற்றத்தை முன்னிட்டும் உரோமை நகர் சென்றடைந்தார். தத்துவக்கலை, இறையியல் பயின்றதோடு ஜெபத்திலும,; தவமுயற்சிகளிலும் தம்மை மிகவும் ஈடுபடுத்திக் கொண்டார். அந்நகரில் 12 மைல் சுற்றளவில் இருந்த புகழ்மிக்க 7 தேவாலயங்களையும் மாலையானதும் நடந்தே சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டு இரவில் புனித செபஸ்தியாரின் புதை குழி வளாகத்தில் தங்குவார்.

மேலும் நலிவுற்ற மக்களின் நலன்களைக் கருதி மருத்துவ மனைகளில் நோயாளிகளைச் சந்திப்பார். தெரு வழியாக செல்லும் போது ஆன்மீகத்தில் அக்கறையற்றவர்களை இணங்கண்டு தமது திறமையான பேச்சினாலும் அனுகுமுறைகளினாலும் இறைவன் பக்கம் மனம்மாறச் செய்வார். இந்த அனுபவமானது கி.பி.1548ல் தமது குறிக்கோளை ஏற்றுக் கொண்டவர்களை ஒருங்கிணைக்கவும் திவ்ய நற்கருணை ஆராதனை பக்தி முயற்சிகளை தொடங்குவதற்கும் புனிதரைத் தூண்டியது. இவ்வாறு 10 ஆண்டுகள் உருண்டோடின.

இவரின் ஆன்ம குரு இவரைக் குருத்துவததை நாடப் பணித்தார். குருப்பட்டம் பெற்றபின் 33ஆண்டுகளாக “ஆரட்டரி„ என்று அழைக்கப்படும் செபக் குழுவை பல குருக்களைக் கொண்டு நடத்தினார். ஏராளமான ஞானப்பயன் கிடைப்பதைக் கண்டு மகிழ்ந்தார். இவர்களே (ஆரட்டோரியன்ஸ்) “ஜெபக் குழுவினர்„ என்று இந்நாள்வரை போற்றப்படுகின்றனர். நாள்தோறும் இவரிடம் ஒப்பரவு அருட்சாதனம் பெறவும் ஆன்மீக ஆலோசனை பெறவும் தொழிலாளர் பல பணிகளை முடித்தபின் வந்த வண்ணம் இருந்தனர். கர்தினால்கள் பலரும் குருக்களும் இவரது ஆலோசனையை நாடிவந்தனர். இவர் திருப்பலி நிறைவேற்றும் போதெல்லாம் பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார். இளைஞர்கள் பலரை ஆன்மீக வாழ்வுக்கு கொண்டு வந்து சேர்த்தார். எப்போதும் மகிழ்ச்சியாயிருக்கவும் ஆழமான இறைஅனுபவம,; தாழ்ச்சி, ஒறுத்தல் ஆசைகளைக் கட்டுப்படுத்தல் அடிக்கடி ஒப்பரவு அருட்சாதனத்தைப் பெறுதல் ஆகியவற்றில் தம்மிடம் வந்தவர்களுக்கு பயிற்சி அளித்தார். இளைஞர் ஒருவர் திவ்விய நன்மை உட்கொண்ட உடனே தன் அலுவலகத்திற்கு விரைவாக போய்விடுவார். ஒருமுறை இவரது குற்றத்தை உணர்த்தும் முகமாக பூசைக்கு உதவி செய்யும் சிறுவர் இருவரிடம் எரியும் மெழுகுவர்த்திகளை கொடுத்து “அந்த இளைஞரின் பின்னால் ஓடுங்கள்„ என்றார். இளைஞரும் தம் குற்றத்தை இதன்மூலம் உணர்ந்து திருத்திக் கொண்டார். சிலருக்கு மற்றவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் பழக்கம் இருந்ததைக் கண்டு அவர்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். பிறரை பழிதூற்றும் ஒரு பெண்ணிடம் ஒரு வாத்தின் இறகுகளைப் பறிக்கச் சொன்னார். பறித்து முடித்த பின் அவற்றைக் காற்றில் பறக்கவிடச் சொன்னனார். இதன்பின் அந்தப் பெண்ணிடம் இன்னொன்று செய்யுமாறு கேட்டிருக்கின்றார். அதாவது அவ்வளவு முடிகளையும் ஒன்று சேர்த்துக் கொண்டுவரக் கேட்டிருக்கின்றார். இது இயலாதே என்று பெண்கூற அப்படித்தான் நீ மற்றவர்களின் பெயரைக் கெடுத்தபின் அதை நீ சரிப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொள் திருத்திக் கொள் என்று சொன்னார்.

இவரை உரோமை நகரின் இரண்டாம் அப்போஸ்தலர் என அழைக்கின்றார்கள். இது இவருக்கு மிகப் பொருத்தம். நாள்தோறும் பிலிப்பு வைகறையில் தாழ்ச்சியுடன் எழுப்பிய மன்றாட்டு ஆண்டவரே, பிலிப்பை உமது அருட்கரம் கொண்டு நடத்தும். இல்லாவிட்டால் பிலிப்பு உம்மைக் காட்டிக் கொடுத்து விடுவான்.

மே:25 – புனித ஏழாம் கிரகோரியார்

மே:25
புனித ஏழாம் கிரகோரியார்
பாப்பு – (கி.பி.1028-1085)

கில்டர்பிராண்ட் என்பது இவருக்கு பெற்றோரால் இட்டபெயர். இவர் டஸ்கனி நாட்டில் பிறந்தவர். உரோமையில் தன் படிப்புக்களை முடித்தபின் புனித ஆசீர்வாதப்பர் சபைத் துறவியானார். இவர் 5 பாப்பரசர்களுக்கு ஆலோசகர்களாக இருந்தார். பின்னர் இவரே பாப்புவின் நிலைக்கு உயர்த்தப் பெற்ற 7ம் கிரகோரியார் என்ற பெயரை தேர்ந்து கொண்டார். இவரது நாள்களில்தான் கிரகோரியாரின் சீர்திருத்தம் என்ற மாபெரும் சீர்திருத்தம் திருச்சபைக்கு கிடைத்தது. இதன்மூலம் திருச்சபை பாப்பரசர்களை தெரிந்து கொள்வதில் அரசர்களின் குறுக்கீட்டை முழுமையாக நீக்கிக் கொண்டு பொலிவுடன் திகழ்ந்தது. குருக்கள், திருமணத்தில் ஈடுபடுவது புனித பொருட்களும் புனித பதவிகளும் விற்க்கப்படுவது ஆகிய முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளியிட்டார். இதன் காரணமாக அரசரான 4ம் என்றி இவரைக் கடுமையாக எதிர்க்க நேர்ந்தது. இதனால் இவர் சலர்னோவுக்கு ஓடி விட்டார். அங்கே கி.பி. 1085ம் ஆண்டு புனிதராக இறந்தார்.

மே:25 புனித பாஸி மரிய மதலேனம்மாள்

மே:25
புனித பாஸி மரிய மதலேனம்மாள்
கன்னி – (1566-1607)

இந்தத் தூய்மையின் வடிவம் இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரில் உயர்ந்த குடியில் தோன்றியவர். இளமையிலேயே நற்கருணைமீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அதோடு தனது கன்னிமையை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்திருந்தார். தமது 16ம் வயதில் கடுந்தவமுயற்சிகள் நிறைந்த கார்மேல் மடத்தில் சேர்ந்தார். துறவற வாழ்வில் நெடுநாள்களாய் இறைவன் அனுப்பிய பெரிய சிலுவையாகிய ஆன்ம இருளை இவர் சுமக்க வேண்டியிருந்தது. இறைவனால் முழுவதும் கைவிடப்பட்டதுபோல் உணர்ந்தார்.

இருந்தாலும் சவுக்கினால் தம்மையே கடுமையாக அடித்துக் கொள்வார். தாழ்ச்சி நிரம்பியவராக பேயின் கடுமையான தாக்குதலை எல்லாம் எதிர்த்து நின்றார். இதன் வழியாக இறைவனிடமிருந்து மீண்டும் அமைதியைப் பெற்றுக் கொண்டார். அதன்பிறகு அடிக்கடி இயேசு அவர்முன் தோன்றுவார். திருப்பாடுகள் அனுபவித்த ஆண்டவரின் காட்சி இவருக்கு 16 ஆண்டுகளாக நீடித்தது. அதோடு இவர் ஆண்டவரின் 5 திருக்காயங்களும் தமது உடலில் பதிந்திருக்கும் பேறு பெற்றிருந்தார். இவ்வாறு வேதனைகளின் நடுவே தமது 41ம் வயதில் இறைவன் திருவடி சேர்ந்தார்.