
ஆண்டவரின் உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு.
பாஸ்காத் திருவிழிப்பு. 2026.04.04
முன்னுரை.
ஆண்டவரே என் ஆற்றல், என் பாடல். அவரே என் விடுதலை, என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்: அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.
இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! நமக்கு இரக்கம் காட்டுவரும் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினரும், தமது ஆவியை நீர் அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றவருமான நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி, கிறிஸ்து சாவினின்று உயிர்த்தெழுந்த இப் பாஸ்காத் திருவிழிப்புத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
நம் ஆண்டவர் இயேசு மகிமை மிக்கவராய் உயிர்த்தெழுந்த மகிழ்வை நாம் இந்த இரவுப் பொழு திலே நினவு கூர்ந்து கொண்டாடுகின்றோம். இயேசு சாவைக் கடந்து உயிர்த்தெழுந்ததை இஸ்ரா யேல் மக்கள் பார்வோன் மன்னனின் பிடியிலிருந்து விடுதலை பெற்று செங்கடலைக் கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிய பயணத்தைத் தொடங்கிய நிகழ்வோடு இணைத்துக் கொண்டாடுகின்றோம். இறைவனே மாபெரும் விடுதலையாளராய் இருக்கின்றார். அவரை எந்தச் சக்தியும் கட்டுப்படுத்த முடியாது என்பதனை இவை நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுவதும், அவர் அண்மையில் இருக்கும் போதே அவரை நோக்கி மன்றாடுவதும், கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்க ளையும் விட்டுவிட்டு; ஆண்டவரிடம் திரும்பி வருவதும். இரக்கம் காட்டும் இறைவனிடம் திரும்பி வருவதும், நாமும் பாவம் என்னும் சாவிலிருந்து கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்தவர்கள் என்பதற்கான அடையாளங்களே. எனவே நாமும்;, நம்மைக் கட்டிவைத்திருக்கும் பாவம், சுயநலம், பிரிவினை, பொறாமை, பகைமை போன்ற அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெற்று அன்புறவு வாழ்வுக்குள் உயிர்த்தெழவும், உலகில் நடைபெறும் யுத்தம் ஒழிந்து அனைத்து மக்களும் அச்சமின்றி, மகிழ்ச்சியோடு வாழவும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இயல்பு வாழ்வுக்குத் திரும்பவும் வரம் கேட்டு நம்மை அர்ப்பணித்தவர்களாய் தொடரும் வழிபாட்டில் பங்கேற்றுச் செபிப்போம்.
திருச்சபையின் திருவிழிப்புக் கொண்டாட்டங்களில் முதன்மையானதும், முக்கியமானதும் இன்றைய இக் கொண்டாட்டமே. இது பின்வரும் முக்கிய பகுதிகளைக் கொண்டதாக இருக்கின்றது:
ஒளி வழிபாடு : கிறிஸ்து இவ்வுலகின் ஒளி என்பதையும்
இறைவாக்கு வழிபாடு: வரலாற்றின் வழியாக இறைவன் மனிதரை விடுதலையாக்கும் மீட்பின் திட்டம் எவ்வாறு நிறைவேறியது என்பதையும்
திருமுழுக்கு வழிபாடு: நாம் தீமையையும், பாவத்தையும், ஊனியல்பினுடைய நாட்டங்களையும் விட்டொழித்து இறைவனுக்குரிய மக்களாக வாழ நாம் கொடுக்கும் உறுதி மொழியையும், நமது திருமுழக்கு வழியாக நாம் பெற்றுக்கொண்ட அழைப்பையும்,
நற்கருணை வழிபாடு: இயேசு உயிர்த்தெழுந்து என்றும் நம்மோடு உடனிருக்கின்றார், நற்கருணை வழியாக அவருடைய பிரசன்னம் நமக்கு உயிரூட்டம் தருகின்றது என்பதையும் குறித்துக் காட்டுகின்றன.
முதல் வாசகம்.
கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன.
தொடக்க நூலிலிருந்து வாசகம். 1: 1- 2: 2
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்த பொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
அப்பொழுது கடவுள், ‘ஒளி தோன்றுக!” என்றார்: ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். கடவுள் ஒளிக்குப் பகல்| என்றும் இருளுக்கு இரவு| என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.
அப்பொழுது கடவுள் ‘நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்” என்றார். கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் வானத்திற்கு விண்ணுலகம்| என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.
அப்பொழுது கடவுள், ‘விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்று சேர உலர்ந்த தரை தோன்றுக!” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம்| என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல்| என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், ‘புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின் படியே நிலம் விளைவிக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.
அப்பொழுது கடவுள், ‘பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்: பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத் தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந் தது.
அப்பொழுது கடவுள், ‘திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!” என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள்திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளை யும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி ‘பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்” என் றுரைத்தார். மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.
அப்பொழுது கடவுள், ‘கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக” என்றார். கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத் தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
அப்பொழுது கடவுள், ‘மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத் தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்: கடவு ளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்: ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, ‘பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்: அதை உங்கள் ஆற்றலு க்கு உட்படுத்துங்கள்: கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார். அப்பொழுது கடவுள், ‘மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்: இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலை யும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.
விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறை வெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித் திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல். திபா. 104: 1-2,5-6,10, 12-14,24,35
பல்லவி: ஆண்டவரே உமது ஆவியை நீர் அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மை மிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பேரொளியை ஆடையென அணிந்துள் ளவர். நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர் அது என்றென்றும் அசைவுறாது. அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது. மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது. பல்லவி:
பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் சுரக்கச் செய்கின்றீர். அவை மலைகளிடையே பாய்ந்தோடும். நீரூற்று களின் அருகில் வானத்துப் பறவைகள் கூடு கட்டிக் கொள்கின்றன.அவை மரக்கிளைகளினின்று இன் னிசை இசைக்கின்றன. பல்லவி:
உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர். உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது. கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர் மானிடருக்கெனப் பயிர் வகைகளை வளரச் செய்கின்றர். இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய் கின்றீர். பல்லவி:
ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்து ள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! அல்லேலூயா! பல்லவி:
இரண்டாம் வாசகம்.
இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.
விடுதலைப் பயண நூலிருந்து வாசகம். 14: 15- 15:1
அந்நாள்களில்
ஆண்டவர் மோசேயை நோக்கி, ‘ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல் மேல் நீட்டி அத னைப் பிரித்து விடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள். நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன். பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, நானே ஆண்டவர்| என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்” என்றார்.
இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் இடம் பெயர்ந்து அவர்களுக்குப் பின்வந்து நின்றார். மேகத்தூணும் இடம் பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்று கொண்டது. அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது: இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை.
மோசே தம் கையைக் கடல் மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது. வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல் வரை சென்றனர். பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார். அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், ‘இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம். ஏனெனில், ஆண்டவர் தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்” என்றனர்.
ஆண்டவர் மோசேயை நோக்கி, ‘நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு” என்றார். மோசே தம் கையைக் கடல் மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்கு எதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார். திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரை வீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை. ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது. இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார்.
கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர். எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர் மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர்.
அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு:
பதிலுரைப்பாடல். விப. 15: 1-6,17-18,
பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்.
ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார். குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார். ஆண்டவரே என் ஆற்றல், என் பாடல். அவரே என் விடுதலை, என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்: அவரை நான் ஏத்திப்போற்றுவேன். பல்லவி
போரில் வல்லவர் ஆண்டவர், ஆண்டவர்| என்பது அவர் பெயராம். பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார். அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர். பல்லவி
ஆழங்களில் அவர்கள் கல்லைப் போல் மூழ்கிப் போயினர். ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன. ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது. ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது.பல்லவி
ஆண்டவரே, எம் தலைவரே! நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும், உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள உம் உரிமைச் சொத்தான மலைக்கு அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர். ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார்.பல்லவி
மூன்றாம் வாசகம்.
என்னிடம் வாருங்கள்: நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிருந்து வாசகம். 55: 1-11
ஆண்டவர் கூறுவது:
தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள். கையில் பணமில்லாத வர்களே, நீங்களும் வாருங்கள். தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள். நல்லுணவை உண்ணுங்கள். கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.
எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள். கேளுங்கள். அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன். தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்.நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாத பிற இன மக்களை அழைப்பாய். உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிறஇனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார்.
ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள். அவர் அண்மையில் இருக்கும் போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக. அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும். அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார் அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும். ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.
மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன. அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல். எசா. 12: 2-6,
பல்லவி: மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.
இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன். ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அக மகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். பல்லவி:
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். அவர் திருப்பெயரைப் போற்றுங்கள். மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள். அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி:
ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள். ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார் அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள். இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவி:
நான்காம் வாசகம்.
நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன்.நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிருந்து வாசகம். 36: 16-28
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. மானிடா! இஸ்ரயேல் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்கையில் அவர்கள் தங்கள் நடத்தையாலும் செயல்களாலும் அதைத் தீட்டுப்படுத்தினார்கள். எனவே, நான் என் சினத்தை அவர்கள்மேல் கொட்டினேன். ஏனெனில் அவர்கள் அந்த நாட்டில் இரத்தம் சிந்தி, அதனைத் தெய்வச் சிலைகளால் தீட்டுப்படுத்தினர். நான் அவர்களை வேற்றினத்தாரிடையே சிதறடித்தேன். அவர்கள் நாடுகளெங்கும் சிதறுண்டு போயினர். அவர்களின் நடத்தைக்கேற்பவும், செயல்களுக்கேற்பவும் அவர்களுக்குத் தீர்ப்பிட்டேன். வேற்றினத்தாரிடையே அவர்கள் எங்கு சென்றாலும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்தினர். ஏனெனில் அவர்களைக் குறித்து இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும், அவரின் நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று| என்று கூறப்பட்டது. இஸ்ரயேல் வீட்டார் சென்ற வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரைக் குறித்து நான் கவலை கொண்டேன். எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அன்று. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன்.
நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள். உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.
உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைப் கடைப்பிடிக்கவும் என் நீதி நெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன். நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள். நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல். திபா. 51: 10-13,16-17,
பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடா தேயும். உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன். பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி
ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது. நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே. கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி
பழைய ஏற்பாட்டிலிருந்து இறுதி வாசகமும் அதற்குரிய பதிலுரைப்பாடலும், செபமும் முடிந்தபின், பீடத்தில் விளக்குகள், திரிகள் பற்றவைக்கப்படும். அதன்பின் உன்னதங்களிலே என்னும்; வாழ்த்தொலி வழமைபோலப் பாடப்படும். அப்பொழுது ஆலயத்தின் மணிகள் ஒலிக்கும். அதன் பின் புதிய ஏற்பாட்டின் திருமுக வாசகத்திற்கான சபை மன்றாட்டும், திருமுக வாசகமும் இடம்பெறும்.
புதிய ஏற்பாட்டின் திருமுக வாசகம்.
இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 6: 3-11
சகோதரர் சகோதரிகளே,
திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.
அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்துபோகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ?
கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார். இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். அவர் இறந்தார் பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார். அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார். அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள். கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல். திபா. 118: 1-2,16-17, 22-23
பல்லவி: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு| என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! பல்லவி:
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது. ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன். உயிர் வாழ்வேன். ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். பல்லவி:
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! பல்லவி:
நற்செய்தி வாசகம்
இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 1-10
ஓய்வுநாளுக்குப் பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.
அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, ‘நீங்கள் அஞ்சாதீர்கள். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை. அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். நீங்கள் விரைந்து சென்று, இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்| எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்” என்றார்.
அவர்களும் கல்லறையை விட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், ‘அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்;.
- மீட்பும், ஆற்றலுமான தந்தையே இறைவா!
எமது திருத்தந்தை ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும், நல்ல மேய்ப்பர்களாகவும், வழிகாட்டிகளாகவும் வாழத் தடையாக இருக்கும்: பயம், விரக்தி, நம்பிக்கையின்மை, உலக ஆசைகள் என்னும் அழுக்குகளைக் கழுவி அவர்களை நம்பிக்கையின் வாழ்வுக்குள் அழைத்து, அன்புறவு வாழ்வில் அவர்கள் ஆர்வமுடையோராய் வாழ்வதற்கும், பாவம் என்னும் சாவிலிருந்து கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்தவர்களாக மாறவும் வேண்டிய ஆற்றலை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- மாட்சியுறும் செயல்களைப் புரிகின்ற தந்தையே இறைவா!
உமது மக்களாகிய நாங்கள் ஒவ்வொரு வரும் எம்மைக் கட்டிவைத்திருக்கும் பாவம், சுயநலம், பிரிவினை, பொறாமை, பகைமை போன்ற அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெற்று அன்புறவு வாழ்வுக்குள் உயிர்த்தெழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவரான தந்தையே இறைவா!
உலகில் தீவிரமடைந்துள்ள கொடிய யுத்தம் நிறுத்தப்படவும், மனித வேதனைகளையும், அவலங்களையும் புரஜந்து கொள்ளுகின்ற, மனித மாண்பை மதிக்கின்ற மனப் பக்குவத்தையும், நல்லெண்ணத்தையும் அனைத்துத் தலைவர்களிடமும் உருவாக்கி, அவர்கள் அமைதியின் கருவிகளாகச் செயற்பட அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- உம் படைப்புகளால் உலகை நிறைந்துள்ள தந்தையே இறைவா!
இவ்வுலகில் பெருகி வரும் வன்முறைகளும், பயங்கரவாதமும் ஒழிந்து,அனைத்து மக்களும் அச்சமின்றி, அமைதியாக வாழ இவ்வுலகை அமைதியின் இல்லமாக மாற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- அனைவரினதும் நலனில் அக்கறை கொண்ட தந்தையே!
இன்று இத்திருப்பலியில் பங்கு கொள்ள முடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதை முகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர், யுத்தக் களத்திலும், பாதுகாப்புப் பணியிலும் இருப்போர் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Holy Saturday 2026Vigil