Daily Archives: 2018-01-22
கிறிஸ்த ஒன்றிப்பு வாரம்
கிறிஸ்த ஒன்றிப்பு வாரம் தொடங்கியிருக்கும் இந்நாட்களில் மன்னார் ஆயர் இல்லத்தில் தங்களது மாதாந்த தியானத்திற்கு ஒன்று கூடிய மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள் மத்தியில் தென்னிந்தியத் திருச்சபையின் கோப்பாய் பகுதி மேலும் அறிய கிறிஸ்த ஒன்றிப்பு வாரம்
ஜனவரி:22 புனித வின்சென்ட்
ஜனவரி:22
புனித வின்சென்ட்
தியாக்கோன்-(கி.பி.304)
ஸ்பெயின் இவரது தாய் நாடு. சரகோசாவில் இவர் வேதசாட்சியாகி விண்ணகம் அடைந்த போது இவர் பட்ட பாடுகளைப் பற்றிய குறிப்புக்கள் தம்மிடம் இருந்தன எனப் புனித அகஸ்டின் ஒரு மறையுரையில் குறிப்பிடுகிறார். சரகோசா நகரின் ஆயராக இருந்த வலெரியஸ் என்பவர் வின்சென்டுக்கு தியாக்கோன் பட்டம் அளித்தார். இவர்களிருவரும் 303ம் ஆண்டு சிறையில் வைக்கப்பட்டனர். பட்டினியாக விடப்பட்டதுடன் வேதனைகளுக்கும் உள்ளானார்கள். ஆனால் விசுவாசத்தில் உறுதிப்பட்டனர். ஆயர் இதன் பின்னர் நாடு கடத்தப்பட்டார். தனிமையாக விடப்பட்ட வின்சன் மீது டேசியன் மன்னன் புலியெனெப் பாய்ந்தான். கொலைஞர் அவனை கீழே கிடத்தி அவரது கை, கால்களை பிணைத்திருந்த கயிறுகளுக்கு கம்பிகளை மாட்டி இழுத்தனர். அவரது கை, கால், மூட்டுக்கள் கழன்றன. மிகக் கொடுமையாக அடித்து உடலைக் கிழித்தனர். இரத்தம் தரையில் ஓடியது. இரும்புக் கட்டிலில் கிடத்தி அடியில் நெருப்பு மூட்டினர். வின்சென்ட் எதற்கும் அஞ்சவில்லை. தூய்மையற்ற சிறை அறை ஒன்றில் தூக்கியெறியப்பட்டார். அங்கே அவரது முகத்தில் தோன்றிய அருள் ஒளியைக் கண்ட காவலர் மனந்திரும்பினார். இங்ஙனம் அடைந்த வேதனைகளினால் இவர் மறைசாட்சியாக உயிர் நீத்தார்.
பொதுக்காலம், வாரம் 3 திங்கள்
முதல் வாசகம்
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-7,10
அந்நாள்களில் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய் என்று உமக்கே ஆண்டவர் கூறினார்.இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர். முப்பது வயதில் அரசரான தாவீது, நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். எபிரோனில் தங்கி யூதாவை ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்களும், பிறகு எருசலேமில் தங்கி அனைத்து இஸ்ரயேல்-யூதாவை முப்பத்து மூன்று ஆண்டுகளும் அவர் ஆட்சி புரிந்தார். அரசரும் அவருடைய ஆள்களும் அம்மண்ணின் மைந்தர் எபூசியருக்கு எதிராக எருசலேம் சென்றபோது, அவர்கள் தாவீதை நோக்கி, நீர் இங்கே வர முடியாது; பார்வையற்றவரும் முடவரும்கூட உம்மை அப்புறப்படுத்தி விடுவார்கள் அதாவது இங்கே தாவீது வர முடியாது என்றனர். இருப்பினும், தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே தாவீதின் நகர். தாவீது தொடர்ந்து வளர்ச்சி பெற்றார். படைகளின் கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் : திபா 89: 19. 20-21. 24-25
பல்லவி: என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்.
முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் காட்சி தந்து கூறியது: வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்;
மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன். –பல்லவி
என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்;
என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.
என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்;
என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். . –பல்லவி
என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்;
என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.
அவன் கையைக் கடல்வரைக்கும் அவன் வலக்கையை ஆறுகள் வரைக்கும் எட்டச் செய்வேன். . –பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா. : மாற்கு 3:22-30
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30
அக்காலத்தில் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும் “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆகவே இயேசு அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.” `இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது’ என்று தம்மைப்பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.