37 ஆண்டுகள் நிறைவு விழா

மன்னார் மறைமாவட்டம் உதயமாகி 37 ஆண்டுகள் (1981) நிறைவுவிழாத் திருப்பலி எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தோட்டவெளி வேதசாட்சிகளின் இராக்கினி அன்னை ஆலயத்தில் நடைபெறும். மேலும் அறிய 37 ஆண்டுகள் நிறைவு விழா

ஜனவரி:25 புனித பவுல் மனமாற்றம்

ஜனவரி:25
புனித பவுல் மனமாற்றம்

“சகோதரர்களே, உங்களுக்கு ஒன்று தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி இயேசு கிறிஸ்து அளிய திருவெளிப்பாட்டின் வழியாகவே எனக்கு கிடைத்தது. ஒரு காலத்தில் நான் யூதமறையை பின்பற்றிய போது, கடவுளின் திருச்சபையை எவ்வளவோ துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தேர்ந்தெடுத்து தம் மகனைப்பற்றிய நற்செய்தியை புறவினத்தாருக்கு அறிவிக்கும் படி அம் மகனை எனக்குள் வெளிப்படுத்த திருவுளம் கொண்டார். ஒரு காலதடதில் நம்மை துன்புறுத்தியவன் தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தை போதித்து இப்பொழுது நற்செய்தி அறிவிக்கிறான் என்று மட்டும் (யூதேயா நாட்டு கிறித்தவர்கள்) கேள்விப்பட்டிருந்தனர்” (கலா.1, 11-24).
“நானே முன்னர் கடவுளைப் பழித்தேன். திருமறையை துன்புறுத்தினேன். கொடுமை புரிந்தேன். ஏனெனில் விசுவாசத்தைப் பெறாத நிலையில் அறியாமையால் அவ்வாறு நடந்தேன்” (1திமோ.1, 13-13).
“ நீ கண்களை திறப்பாய். அவர்கள் இருளைவிட்டு ஒளிக்கு வந்து பேயின் அதிகாரத்திலிருந்து கடவுள் பக்கம் திரும்பச் செய்வாய்.” (தி.ப.26,78).
“நான் வாழ்வது கடவுளின் மகன்மேல் உள்ள விசுவாசத்தின் வாழ்வாகும். இவரே என்மேல் அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே கையளித்தார்.” (கலா.2, 22).
“நீ துன்புறுத்தும் இயேசு நானே ” என்ற சொற்கள் சவுலைக் கிறிஸ்துவின் சீடனாக மாற்றிவிட்டன. இங்கே இயேசு தம்மையும் தம்மீது விசுவாசம் கொண்டவர்களையும் ஒன்றாக்கிக் கொண்டதை பவுல் முற்றிலும் புரிந்து கொண்டார். கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொண்டவர்களை கறுவருக்கக் கங்கணம் கட்டிய தவற்றை ஒரு நொடியில் உணர்கிறார்.

 

பொதுக்காலம், வாரம் 3 – புனித பவுல் மனமாற்றம் திருநாள்

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22: 3-16

அந்நாள்களில் பவுல் மக்களை நோக்கிக் கூறியது: “நான் ஒரு யூதன்; சிலிசியாவிலுள்ள தர்சு நகரத்தில் பிறந்தவன்; ஆனால் இந்த எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன்; கமாலியேலின் காலடியில் அமர்ந்து நம் தந்தையரின் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றவன்; நீங்கள் அனைவரும் இன்று கடவுள்மீது ஆர்வம் கொண்டுள்ளதுபோன்று நானும் கொண்டிருந்தேன். கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையில் அடைத்தேன்; சாகும்வரை அவர்களைத் துன்புறுத்தினேன். தலைமைக் குருவும் மூப்பர் சங்கத்தாரும் இதற்குச் சாட்சி. இவர்களிடமிருந்து தமஸ்கு நகரிலுள்ள சகோதரர்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டு அங்குள்ள கிறிஸ்தவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவந்து தண்டிப்பதற்காக அங்குச் சென்றேன். நான் புறப்பட்டுத் தமஸ்கு நகரை நெருங்கியபோது நண்பகல் நேரத்தில் திடீரென வானிலிருந்து ஒரு பேரொளி என்னைச் சூழ்ந்து வீசியது. நான் தரையில் விழுந்தேன். அப்போது, `சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?’ என்ற குரலைக் கேட்டேன். அப்போது நான், `ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்டேன். அவர், `நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே’ என்றார். என்னோடு இருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்; ஆனால் என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை. `ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?’ என நான் கேட்க, ஆண்டவர் என்னை நோக்கி, `நீ எழுந்து தமஸ்குவுக்குச் செல். நீ செய்வதற்கெனக் குறிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அங்கே உனக்குக் கூறப்படும்’ என்றார். அந்த ஒளியின் மிகுதியால் நான் பார்க்க முடியவில்லை. என்னோடு இருந்தவர்கள் எனது கையைப் பிடித்துத் தமஸ்குவினுள் அழைத்துச் சென்றார்கள். அங்கு அனனியா என்னும் ஒருவர் இருந்தார். அவர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்துக் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்; அங்கு வாழ்ந்து வந்த யூதர் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர். அவர் என்னிடம் வந்து அருகில் நின்று, `சகோதரர் சவுலே, மீண்டும் பார்வையடையும்’ என்றார். அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன். அப்போது அவர், `நம் மூதாதையரின் கடவுள் தம் திருவுளத்தை அறியவும் தம் நேர்மையாளரைக் காணவும் தம் வாய்மொழியைக் கேட்கவும் உம்மை ஏற்படுத்தியுள்ளார். ஏனெனில், நீர் கண்டவைகளுக்கும் கேட்டவைகளுக்கும் அனைவர் முன்பும் நீர் சாட்சியாய் இருக்க வேண்டும். இனி ஏன் காலம் தாழ்த்த வேண்டும்? எழுந்து அவரது திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப்பெற்றுத் திருமுழுக்குப் பெறும்’ என்றார்.”

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 117: 1. 2

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்!
மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்!பல்லவி

ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது;
அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.: மாற்கு 16:15-20

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-18

அக்காலத்தில் இயேசு பதினொருவருக்கும் தோன்றிக் கூறியது: “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.