இன்று 06.01.2018 சனிக்கிழமை மன்னார் மறைமாவட்ட கிறிஸ்தவ ஒன்றியம் மன் மறைமாவட் டத்தின் புதிய ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ மற்றும், ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் ஓய்வுக்குப் பின்னர் இதுவரை மறைமாவட்டத்தின் திருத்தூதரக நிர்வாகியாகப் பணியாற்றிய பேருட்கலாநிதி ஜோசவ் கிங்கிலி சுவாம்பிள்ளை ஆகியோருடனான ஒன்று கூடல் மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
Daily Archives: 2018-01-06
அஞ்சலி நிகழ்வுகள் இன்று காலை வங்காலையில்
33 வருடங்களுக்கு முன்னார் வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கில் பங்குப் பணியாளராகச் சேவையாற்றியபோது இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மற்றும் அவருடன் கொல்லப்பட்ட எனைய 10 பொதுமக்கள் ஆகியோருக்கான அஞ்சலி நிகழ்வுகள் இன்று காலை வங்காலையில் இடம் பெற்றன.
அருட்பணி மேரி பஸ்ரியனின் 33வது நினைவு
அருட்பணி மேரி பஸ்ரியனின் 33வது நினைவு நாள் இன்று வங்காலைப் பங்கில் திருப்பலியோடு ஆரம்பமாகி தொடர்ந்து அஞ்சலிக் கூட்டுத்தோடு நிறைவு பெறும்.
சனவரி 6
சனவரி 7 அல்லது 8ஆம் நாளில் வரும் ஞாயிறன்று, திருக்காட்சி விழா கொண்டாடப்படும் இடங்களில், கீழ்க்காணும் வாசகங்கள் சனவரி 6 அன்று பயன்படுத்தப்படும்.
முதல் வாசகம்
இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-6, 8-13
அன்பார்ந்தவர்களே, இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.
எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை. கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று.
இறைமகனைக் கொண்டிருப்போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார். இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்துகொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்: திபா 147: 12-13. 14-15. 19-20
பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! அல்லது: அல்லேலூயா.
எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி
அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பல்லவி
யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது, தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.” அல்லேலூயா. ஒவ்வொரு நாளுக்கும் தரப்பட்டுள்ள அல்லேலூயா வசனத்திற்குப் பதிலாக, பக்கம் 172இல் உள்ள தொகுப்பிலிருந்து ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்.
நற்செய்தி வாசகம்
நீயே என் அன்பார்ந்த மகன், உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 7-11
அக்காலத்தில் யோவான், “என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” எனப் பறை சாற்றினார்.
அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.
அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார்.
அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.