மன்னார் மறைமாவட்டத்தின் நான்காவது ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் இன்று புதன்கிழமை (29.11.2017) காலை மன்னார் ஆயர் இல்லத்திற்கு வந்து மறமாவட்டத்தில் பணியாற்றும் அருட்பணியாளர்களை மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்தார்.

இன்று காலை 11.00 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த புதிய ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை ஆயர் இல்லத்தின் பிரதான நுழை வாயிலில் வைத்து மறைமாவட்டத்தின் திருத்தூதுப் பணி நிர்வாகி பேரருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை, மறைமாவட்டக் குருமுதல்வர் அ.விக்ரர் சோசை மறைமாவட்டத்தின் அனைத்துக் குருக்கள் உள்ளிட்டோர் பண்பாட்டுக் கோலங்களுடன், மகிழ்வோடு வரவேற்றனர்.

பின்னர் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்திலே வழிபாடு இடம்பெற்றது.  வழிபாட்டின் முடிவில் புதிய ஆயர் அனைவருக்கும் ஆசீர் வழங்கினார். தொடர்ந்து ஆயர் இல்லத்தின் கேட்போர் கூடத்திலே புதிய ஆயருக்கும் அருட்பணியாளர்களுக்குமான கலந்துரையாடல் இடம் பெற்றது. இக்கலந்துரையாடலில், கத்தோலிக்க திருச்சபையின் திருவழிபாட்டு திருமரபு ஒழுங்கின்படி புதிய ஆயரின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு 2017.12.30 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இதனைப் பற்றி மேலதிக விபரங்கள், திட்ட ஒழுங்குகள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு இன்று (29.11.2017) மலை 03.00 மணிக்கு புதிய ஆயர் மறைமாவட்டத்தில் பணிபுரியும் பெண், ஆண் துறவறசபைகளை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் கொழும்புக்குப் பயணமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *