ஆண்டின் பொதுக்காலம் 33ம் வாரம் – சனி

முதல் வாசகம்

எருசலேமில் நான் புரிந்த தீமைகளை இப்போது நினைவுகூர்கிறேன்; துயரமிகுதியால் அழிந்து கொண்டிருக்கிறேன்.

மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 6: 1-13

அந்நாள்களில் அந்தியோக்கு மன்னன் மேற்கு மாநிலங்கள் வழியாகச் சென்றபோது, பாரசீக நாட்டு எலிமாய் நகர் பொன், வெள்ளி ஆகியவற்றுக்குப் புகழ் பெற்றது என்று கேள்விப்பட்டான். அதன் கோவிலில் மிகுந்த செல்வம் இருந்தது என்றும் கிரேக்க நாட்டை முதன்முதல் ஆண்ட மாசிடோனிய மன்னரான பிலிப்பின் மகன் அலெக்சாண்டர் அங்கே விட்டுச் சென்றிருந்த பொற்கேடயங்களும் மார்புக் கவசங்களும் படைக்கலன்களும் அங்கு இருந்தன என்றும் அறிய வந்தான்.

எனவே அந்தியோக்கு புறப்பட்டு நகரைக் கைப்பற்றிக் கொள்ளையடிக்க முயன்றான்; ஆனால், முடியவில்லை; ஏனெனில் அந்த நகர மக்கள் அவனது திட்டத்தை அறிந்திருந்தார்கள். அவர்கள் அவனை எதிர்த்துப் போரிட்டார்கள். ஆகவே அவன் பின்வாங்கி, பெரும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து பாபிலோனுக்குத் தப்பிச் சென்றான்.

யூதேயா நாட்டை எதிர்த்துச் சென்றிருந்த அவனுடைய படைகள் முறியடிக்கப்பட்ட செய்தியை அவன் பாரசீகத்தில் இருந்தபோது தூதர் ஒருவர் அவனுக்கு அறிவித்தார்; “லீசியா வலிமை வாய்ந்த படையோடு முதலில் சென்று யூதர்கள் முன் புறமுதுகு காட்டி ஓடிவிட்டான்; முறியடிக்கப்பட்ட படைகளிடமிருந்து யூதர்கள் கொள்ளையடித்த படைக்கலன்கள், மிகுதியான பொருள்கள் ஆகியவற்றால் அவர்கள் வலிமைமிக்கவர்கள் ஆனார்கள்; எருசலேமில் இருந்த பலிபீடத்தின்மேல் அந்தியோக்கு செய்து வைத்திருந்த நடுங்க வைக்கும் தீட்டை அவர்கள் தகர்த்தெறிந்தார்கள்; திருஉறைவிடத்தைச் சுற்றிலும் முன்புபோல் உயர்ந்த மதில்கள் எழுப்பியுள்ளார்கள்; அவனுடைய நகராகிய பெத்சூரைச் சுற்றிலும் அவ்வாறே செய்திருக்கிறார்கள்” என்றும் எடுத்துரைத்தார்.

இச்செய்தியைக் கேட்ட மன்னன் அதிர்ச்சியடைந்து மிகவும் நடுங்கினான்; தான் திட்டமிட்ட வண்ணம் நடவாததால் துயரம் தாங்காது நோயுற்றுப் படுத்த படுக்கையானான். கடுந்துயரம் அவனை ஆட்கொண்டதால் அங்குப் பல நாள் கிடந்தான்; தான் விரைவில் சாகவிருந்ததை உணர்ந்தான்.

ஆகவே அவன் தன் நண்பர் எல்லாரையும் அழைத்து, “என் கண்களினின்று தூக்கம் அகன்றுவிட்டது; கவலையினால் என் உள்ளம் உடைந்து விட்டது. `எவ்வளவு துயரத்திற்கு ஆளானேன்! இப்போது எத்துணைப் பெரும் துயரக் கடலில் அமிழ்ந்துள்ளேன்! நான் ஆட்சியில் இருந்தபோது அன்பு செலுத்தி, அன்பு பெற்றேனே’ என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

ஆனால் எருசலேமில் நான் புரிந்த தீமைகளை இப்போது நினைவுகூர்கிறேன்; அங்கு இருந்த பொன், வெள்ளிக் கலன்கள் அனைத்தையும் கவர்ந்து சென்றேன்; யூதேயாவில் குடியிருந்தவர்களைக் காரணமின்றி அழித்தொழிக்கும்படி கட்டளையிட்டேன். இதனால்தான் இந்தக் கேடுகள் எனக்கு வந்துற்றன என நான் அறிவேன். இப்போது அயல்நாட்டில் துயரமிகுதியால் அழிந்து கொண்டிருக்கிறேன்” என்று கூறினான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 9: 1-2. 3, 5. 15,18 (பல்லவி: 14b)

பல்லவி: ஆண்டவரே, நீர் அளிக்கும் விடுதலைகுறித்து அகமகிழ்வேன்.

 ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன். பல்லவி

என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; உமது முன்னிலையில் இடறிவிழுந்து அழிவார்கள்.  வேற்றினத்தாரைக் கண்டித்தீர்; பொல்லாரை அழித்தீர்; அவர்களது பெயர் இனி இராதபடி அடியோடு ஒழித்துவிட்டீர். பல்லவி

  வேற்றினத்தார் வெட்டின குழியில் அவர்களே விழுந்தனர்; அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில் அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன. மாறாக, வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை; எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி : 2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-40

அக்காலத்தில் உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, “போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதிவைத்துள்ளார்.

இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களிடம், “இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.

இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, `ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’ என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார்.

மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றனர். அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

அலெக்சாண்டிரியா நகர் புனித காத்ரின்

அலெக்சாண்டிரியா நகர் புனித காத்ரின்

தத்துவஞானி, மறைசாட்சி 4வது நூற்றாண்டு

ஒரு காலகட்டத்தில் இப்புனிதை மறைசாட்சிகளின் பட்டியலில் இடம்பெற்றவர். இருப்பினும் இவரைத் தத்துவ அறிஞர்களின் பட்டியலில் சேர்த்து, தத்துவ ஞான ஒளியில் சிறந்து விளங்கிய விசுவாசத்தின் பாதுகாவலியாகப் போற்றப்படுகிறார். இதனிமித்தம் கிறிஸ்தவ தத்துவ இயலார்களின் பாதுகாவலியாகவும் போற்றப்படுகின்றார்.

பாரம்பரிய அடிப்படையில் அலெக்சாண்டிரியா நகரில் உயர் குடும்பத்தில் தோன்றியவர் காத்ரின். சிறு வயது முதல் கற்றுக்கொள்வதில் தனி ஆர்வம் காட்டியவர். மரியன்னையின் காட்சி ஒன்றின் மூலம் மனம் மாற்றம் பெற்றவர். நகரில் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாகக் கலகம் எழுந்த சமயம், காத்ரின் துணிந்த மனத்தடன் கொடுங்கோல் மன்னனை அணுகினார். தத்துவ ஞானத்துடன் இவர் எழுப்பிய வினாக்களுக்கு மன்னன் மறுமொழி கூற இயலவில்லை. எனவே தனது அரசில் இருந்த ஜம்பது தத்துவ அறிஞர்களை அழைத்தான். அவர்களாலும் காத்ரினது வினாக்களுக்கு விடை அளிக்க இயலவில்லை. வெற்றி காத்ரினுக்கே என்று கூறிவட்டு நழுவினர் அரசனைக் சார்ந்த அறிஞர்கள். இதனால் ஆத்திரம் அடைந்த அரசன் தனது அறிஞர்களை நெருப்புக்கு இரையாக்கி விட்டான். காத்ரினுக்கு மேலிருந்து தரப்பட்ட ஞானம், தேவ ஆவிக்குரியது என்பதை யாவரும் ஒப்புக்கொண்டனர்.

இந்த அறிவைக் கண்டு ஆச்சரியம் அடைந்த அரசன், காத்ரினை மணந்துகொள்ளத் துடித்தான். கடும் எதிர்ப்புத் தெரிவித்ததன் பொருட்டு சிறையில் தள்ளப்பட்டார் காத்ரின். இந்தச் சூழலில் அரசனின் மனைவி ஃபாஸ்டினா என்பவருக்கே விசுவாச ஒளியைக் கொடுத்துவிட்டார் காத்ரின். அரசியுடன் அரச அவை மேலதிகாரி ஒருவரும் சிறையைக்காத்து வந்த அனைவரும் கிறிஸ்தவ ஒளிபெற வழிகாட்டியானார் காத்ரின்.

விளைவு, இரும்பு ஆணிகளுடன் கூடிய ஒரு சக்கரத்தில் சுற்றிக் கொல்லக் கட்டளை பிறந்தது. இவரைப் பிணைத்திருந்த கம்பிகள் திடிரென அறுந்துவிடவே, வேடிக்கை பார்க்க வந்தவர்களின் உயிரை வாங்கியது ஆணிகள் நிறைந்த சக்கரம்! இதனால் இன்னும் அதிகம் வெறிகொண்ட மன்னன், காத்ரினது தலையை வெட்ட ஆணையிட்டான். இவரது உயிர் பிரிந்த வேளையில், வான த}தர்கள் இவரது புனித உடலை சீனாய் மலைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தாக ஒரு வரலாறு நிலவுகிறது. அதன் அடிப்படையில் அங்கு இப்போது ஒரு ஆலயமும், இவரின் நினைவுச் சின்னமாக ஒரு துறவு மடமும் காட்சியளிக்கின்றன.