ஜனவரி : 13
புனித இலரி ஆயர், மறைவல்லுனர் – (கி.பி.315-368)
இவர் பிரான்சு நாட்டினர். பாய்ட்டியர்ஸ் நகரின் மேதகு ஆயர். இலத்தீன் ரீதியில் திருச்சபையின் முதல் மறைவல்லுனர். மேலை நாட்டு திருச்சபைக்கு எதிராக தோன்றிய ஆரியப் பிதற்றலை சுட்டெரிக்கும் தீயாக இவர் திகழ்ந்தார்.இதனால் இவர் கீழைத்திருச்சபையைச் சார்ந்த பகுதிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்குதான் தூயதமதிரித்துவத்தை பற்றி அழகாக எழுதினார். இந்த நூலில் இறைமகன் இயேசுவின் தெய்வீகமும் இறைதந்தையுடன் இயல்பாக இவர் கொண்டுள்ள பிரிக்கவெண்ணாத நட்புறவும் மிளிர்கின்றன. கிரேக்க அறிவொளித் தந்தையர்களின் திருமறைப்புதயல்களை மேலைநாட்டு தந்தையர்களுக்கு அறிமுகம் செய்தவர் இவர். கீழைத்திருச்சபையில் செழிந்தோங்கிய துறவற சபைகளின் அடிப்படைகளை மேலைத்திருச்சபைக்கும் எடுத்துச் செல்ல டூர்ஸ் நகர் ஆயரான புனித மார்ட்டினுக்கு வழிகாட்டியாக அமைந்தார்.
இலத்தீன்மொழியில் எழில்மிகு திருவழிபாட்டுப் பாடல்களை தொகுத்தளித்தார். பதிதர்கள் எப்படி, பாடல் வழி மக்களை கவர்ந்நிழுக்கின்றனர். என்று சுட்டிக்காட்டி நாம் அவர்களுக்கு பின்தங்கி இருத்தல் கூடாதென்று சொல்லி பாடல்களைத் தொகுக்க ஊக்கமளித்தார். இவர் திருமணமானவர். வேற்று மறையிலிருந்து வெளியேறி திருமறையைத் தழுவியவர். வாழ்க்கையின் உண்மை இரகசியத்தை தழுவியவர். வாழ்க்கையின் உண்மை இரகசியம் எது? ஏன்ற வினா இவரது உள்ளத்தில் ஓயாமல் எழுந்தது. அதற்கு விடை காண திருமறை நூல்களைப் படித்தார். அங்கேதான் தம் வனாக்களுக்கான பொருத்தமான விடைகள் கிடைத்தன என்று குறிப்பிடுகிறார்.
இவருடைய நாள்களில் அலைக்சாண்டிரியா நகரைச் சார்ந்த ஆரியுஸ், கிறிஸ்துவிடம் தெய்வத் தன்மை இல்லை என்ற பெருந்தவற்றை விரைவாக பரப்பி வந்தான். பிரான்சிலும் இந்த தீங்கு நுழையும் நிலையிலிருந்தது. இவர் இதை வன்மையாக கண்டிக்க முயற்சி எடுத்த போது ஆரியத் தீங்கினால் ஏமாற்றப்பட்டிருந்த கொன்ஸ்டான்சியஸ் என்ற மன்னன் இலாரியாரை ஆசியா மைனரில் இருந்த பிரியாவுக்கு நாடு கடத்தி விட்டான். ஆங்கே 3 ஆண்டுகள் அகதியாயிருந்த சூழலில் தான் அவர் தம் நூல்களில் எல்லாம் இன்றுவரை மிக மேலானதாக கருதப்படும் “தூய தமத்திருத்துவம்” என்ற நூலை எழுதி வைத்தார்.
பின்னர் 359ம் ஆண்டு செலிசியாவில் நடந்த கலந்துரையாடலில் திருச்சபையின் ஆயர் பேரவையின் பெயரால் கலந்து கொள்ள அழைப்புப் பெற்று அங்கு சென்றார். அங்கிருந்து அதே ஆயர் பேரவையின் பிரதிநிதிகளில் ஒருவராக கொன்ஸ்டான்டிநோபிளுக்கு ஆரியுஸ் மன்னனின் தவறான கொள்கையை சுட்டிக்காட்ட சென்றார். மன்னன் பிடிவாதமாக தவற்றில் நிலைக்கவே இலாரியார் பிரான்ஸ் திரும்பினார். 361ல் அங்கு அவருக்கு எழுச்சிமிக்க வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. அங்கே 7 ஆண்டுகள் திருப்பணியாற்றிய பிறகு இறைவனடி சேர்ந்தார்.