திருவருகைக்காலம் – முதல் வாரம் – புதன்

முதல் வாசகம்

ஆண்டவர் தமது விருந்துக்கு அழைக்கின்றார்; எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25: 6-10

படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும்.

மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து விடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்; தம் மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.

அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: “இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.” ஆண்டவரின் ஆற்றல் இம்மலையில் தங்கியிருக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்: திபா 23: 1-3ய. 3b-4. 5. 6 (பல்லவி: 6b)

பல்லவி: ஆண்டவரின் இல்லத்தில் நான் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, ஆண்டவர் தம் மக்களை மீட்க வருவார்; அவரை எதிர்கொள்ள ஆயத்தமாயிருப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு பலரைக் குணமாக்கினார், அப்பம் பலுகச்செய்தார்.  
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 29-37

அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார். அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர்.

அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர் மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார். பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

இயேசு தம் சீடரை வரவழைத்து, “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்” என்று கூறினார்.

அதற்குச் சீடர்கள் அவரிடம், “இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?” என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள், “ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன” என்றார்கள்.

தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

புனித நிக்கொலாஸ்

புனித நிக்கொலாஸ்

ஆயர் (கி.பி 350)

நிக்கொலாஸ், லிசியா என்றழைக்கப்படும் துருக்கியில் மீரா என்ற நகரின் ஆயராக இருந்தார் என்பதற்கு ஆதாரம் உண்டு. கிழக்கும் மேற்கும் இவரைப் பெருமைப் படுத்தினாலும், மிகுதியாகப் பெருமைப்படுத்தியிருப்பது ர~;யா தான். அந்நாட்டிற்கு இவரும் பெலவேந்திரும் பாதுகாவலர்கள். கிழக்கிந்திய நாடுகளில் கடல் பயணத்திற்கு இவரைப் பாதுகாவலராகத் தெரிந்து கொண்டனர். இவர் ஆயராக இருந்தார் எ;பதைத் தவிர மற்றவையனைத்தும் ஆதாரமற்றவைகளாகத் தெரிகின்றன.

கி.பி 11ம் நூற்றாண்டில் சரசேனியர் மீரா நகரைக் கைப்பற்றினர். அந்த வேளையில் இவரது திருப்பண்டங்கள் மறைவாக இத்தாலியின் தென்பகுதியில் பாரி என்ற நகரில் வைத்துக் காப்பாற்றப்பட்டன.

இவரைப் பற்றிய ஆதாரமில்லா ஒரு புதுமை இதோ: ஏழை ஒருவன் தன் 3 பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கப் போதிய பொருள்வளம் இன்றி வருந்தினான். வேறுவழி தெரியாமல் அவர்களைத் தவறான வழியில் அவன் ஈடுபடுத்த முற்பட்ட சூழ்நிலையில், புனிதர் குறிக்கிட்டார். அடுத்தடுத்து 3 இரவுகளில் இந்த மனிதன், குடியிருந்த வீட்டு ஜன்னல் வழியாக 3 பைகள் நிறையத் தங்கக் கட்டிகளைப் போட்டுவிட்டுச் சென்றார். இதனால் இந்த 3 பெண்களின் திருமணமும் நிறைவேறியது. நாளடைவில் இதன் அடிப்படையில் இவரது திருநாளன்று பரிசுகள் வழங்குவதும் நடைமுறைக்கு வந்தது. ஆங்கிலம் பெசும் நாடுகளில் “சாந்தாக்கிளாஸ்” என்று இவரை அழைக்கிறார்கள்.