டிசம்பர் 14
புனித சிலுவை யோவான் குரு – (கி.பி 1542 – 1591)
இவர் ஸ்nபின் நாட்டில் காஸ்டில் நகரில் பிறந்தார். இளமையிலேயே தம் தந்தையை இழந்தார். தாய் வறுமையான நிலையில் தம் 3 மகன்களையும் வளர்த்து வந்தார். யோவான் கடைசி மகன். இயேசு சபையினரிடம் இவர் கல்வி கற்றார். பின்னர் சிறிது காலம் நெசவுத் தொழிலில் ஈடுபட்டார். 21 வயதில் கார்மேல் சபையில் சேர்ந்தார். பின்னர் சலமான்கா பல்கலைக் கழகத்திற்குச் சென்று பயின்றார்.
இவர் தமது முதல் திருப்பலியை நிறைவேற்ற மெடினாதெல் காம்போ என்ற நகருக்கு வந்தார். இங்கேதான் முதன்முறையாகப் புனித அவிலா தெரசாளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 5 ஆண்டு முயற்சியால் இந்த வேளையில் தான் தமது சபையில் பெரிய சீர்திருத்தங்களைத் தெரசா கொண்டு வந்திருந்தார். இந்த முறையில் கார்மேல் சபைக் குருக்களையும் இந்தச் சீர்திருத்தத்திற்குள் கொண்டு வர முயன்றார். ஏற்கனவே யோவான், தமது நபையின் தொடக்க நிலையிலிருந்த கடுமையான ஒழுங்குகளைக் கடைப்பிடிக்க இசைவு பெற்றிருந்தார். இதைப்பற்றித் தெரசா அறிந்திருந்தார்.
ஓராண்டுக்குப்பின் அத்தகைய கண்டிப்பான கார்மேல் சபை தொடங்கப்பட்டது. யோவான் முதல் உறுப்பினராகச் சேர்ந்தார். 23 ஆண்டுகள் இத்தகைய சபையில் பல பணிகள் ஆற்றினார். சீர்திருத்தம் பெற்ற சபையில் சேர்ந்ததினால் அவருக்கு வந்த நெருக்கடி, சிறுமை, தப்பெண்ணங்கள், ஏன் சபைக்குள்ளேயே சிறைவாசம் அனைத்தையும் ஏற்கவேண்டியதாயிற்று. சிலுவை என்றால் எத்துணை கடினமானது என்பதை அனுபவித்து உணர்ந்தார்.
இவருக்கு எதிர்ப்புக்கள் பல இருந்தன. ஆனால் ஆழ்ந்த தாழ்ச்சியினால் அவற்றை மேலான முறையில் எதிர்கொண்டார். இளைப்பாற்றி, உணவு இவற்றை மிகவும் குறைத்தார். புலால் உணவை அகற்றினார். ஜெருசலேமுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு, அங்கு துருக்கியரிடம் மறைசாட்சியாக மடியலாம் என எதிர்பார்த்தார்.
ஒருமுறை கள்வர் இவரது பணத்தைக் கவர்ந்துகொண்டனர். இன்னும் ஏதாகிலும் உண்டா? என்று கேட்டனர். “இல்லை” என்று பதிலளித்தார். அவர்கள் போய்விட்டனர். இதற்கிடையில் தனது உடையில் ஏதோ ஒரு மூலையில் சில நாணயங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தார். திருடர் சென்ற திசைநோக்கி இவரும் ஓடினார். உரத்த குரலில் கூப்பிட்டு அவர்களிடம் அந்த நாணயங்களையும் கொடுத்துவிட்டார். அந்தத் திருடர்கள் எத்துணை வியப்பு அடைந்தார்கள் எனில் அவர்கள் கவர்துகொண்ட அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டனர்.