புனித சிலுவை யோவான் குரு

டிசம்பர் 14

புனித சிலுவை யோவான்  குரு – (கி.பி 1542 – 1591)

இவர் ஸ்nபின் நாட்டில் காஸ்டில் நகரில் பிறந்தார். இளமையிலேயே தம் தந்தையை இழந்தார். தாய் வறுமையான நிலையில் தம் 3 மகன்களையும் வளர்த்து வந்தார். யோவான் கடைசி மகன். இயேசு சபையினரிடம் இவர் கல்வி கற்றார். பின்னர் சிறிது காலம் நெசவுத் தொழிலில் ஈடுபட்டார். 21 வயதில் கார்மேல் சபையில் சேர்ந்தார். பின்னர் சலமான்கா பல்கலைக் கழகத்திற்குச் சென்று பயின்றார்.

இவர் தமது முதல் திருப்பலியை நிறைவேற்ற மெடினாதெல் காம்போ என்ற நகருக்கு வந்தார். இங்கேதான் முதன்முறையாகப் புனித அவிலா தெரசாளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 5 ஆண்டு முயற்சியால் இந்த வேளையில் தான் தமது சபையில் பெரிய சீர்திருத்தங்களைத் தெரசா கொண்டு வந்திருந்தார். இந்த முறையில் கார்மேல் சபைக் குருக்களையும் இந்தச் சீர்திருத்தத்திற்குள் கொண்டு வர முயன்றார். ஏற்கனவே யோவான், தமது நபையின் தொடக்க நிலையிலிருந்த கடுமையான ஒழுங்குகளைக் கடைப்பிடிக்க இசைவு பெற்றிருந்தார். இதைப்பற்றித் தெரசா அறிந்திருந்தார்.

ஓராண்டுக்குப்பின் அத்தகைய கண்டிப்பான கார்மேல் சபை தொடங்கப்பட்டது. யோவான் முதல் உறுப்பினராகச் சேர்ந்தார். 23 ஆண்டுகள் இத்தகைய சபையில் பல பணிகள் ஆற்றினார். சீர்திருத்தம் பெற்ற சபையில் சேர்ந்ததினால் அவருக்கு வந்த நெருக்கடி, சிறுமை, தப்பெண்ணங்கள், ஏன் சபைக்குள்ளேயே சிறைவாசம் அனைத்தையும் ஏற்கவேண்டியதாயிற்று. சிலுவை என்றால் எத்துணை கடினமானது என்பதை அனுபவித்து உணர்ந்தார்.

இவருக்கு எதிர்ப்புக்கள் பல இருந்தன. ஆனால் ஆழ்ந்த தாழ்ச்சியினால் அவற்றை மேலான முறையில் எதிர்கொண்டார். இளைப்பாற்றி, உணவு இவற்றை மிகவும் குறைத்தார். புலால் உணவை அகற்றினார். ஜெருசலேமுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு, அங்கு துருக்கியரிடம் மறைசாட்சியாக மடியலாம் என எதிர்பார்த்தார்.

ஒருமுறை கள்வர் இவரது பணத்தைக் கவர்ந்துகொண்டனர். இன்னும் ஏதாகிலும் உண்டா? என்று கேட்டனர். “இல்லை” என்று பதிலளித்தார். அவர்கள் போய்விட்டனர். இதற்கிடையில் தனது உடையில் ஏதோ ஒரு மூலையில் சில நாணயங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தார். திருடர் சென்ற திசைநோக்கி இவரும் ஓடினார். உரத்த குரலில் கூப்பிட்டு அவர்களிடம் அந்த நாணயங்களையும் கொடுத்துவிட்டார். அந்தத் திருடர்கள் எத்துணை வியப்பு அடைந்தார்கள் எனில் அவர்கள் கவர்துகொண்ட அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டனர்.

 

திருவருகை காலம்-இரண்டாம் வாரம், வியாழன்

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 41:13-20

நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக்கையைப் பற்றிப்பிடித்து,அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்” என்று உன்னிடம் சொல்பவரும் நானே.யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன்,” என்கிறார் ஆண்டவர்.
இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர். இதோ, நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன். நீ மலைகளைப் போரடித்து நொறுக்குவாய்; குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய். அவற்றைத் தூற்றுவாய், காற்று அவற்றை வாரிக்கொண்டுபோகும்; புயல் அவற்றைச் சிதறடிக்கும்; ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்; இஸ்ரயேலின் தூயவரில் மேன்மை அடைவாய். ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்; அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்; ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்; இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன். பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்; பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்; பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன். பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன்; சித்திம் மரம், மிருதுச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன்; பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும் வைப்பேன். அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச் செய்தார் என்றும், இஸ்ரயேலின் தூயவர் அதைப் படைத்தார் என்றும் மக்கள் கண்டு உணர்ந்துகொள்வர்; ஒருங்கே சிந்தித்துப் புரிந்துகொள்வர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல் திபா 145: 1,9. 10-11. 12-13

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.

என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்;
உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.
ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்;
தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்;
உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும்
உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு;
உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வானங்கள் பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும். மண்ணுலகம் வாய் திறந்து விடுதலைக் கனி வழங்கட்டும். அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11:11-15

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது:மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.