புனித யோவான்

டிசம்பர் 27

புனித யோவான்  திருத்தூதர், நற்செய்தியாளர்

இவர்தான் “இயேசுவினால் அன்பு செய்யப்பட்ட சீடர்.” இடியின் மக்களில்” ஒருவர். இவரே இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு, “ஆண்டவரே, நீர் சொல்வது யாரை?” என்று கேட்டவர். தலைமைக் குருவுக்கு அறிமுகமானவர். ஆதலால், இயேசுவைப் பகைவர் பிடித்துச் சென்றபொழுது தம் தலைவரின் நிலை காண தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் நுழைந்தவர் இவரே. “அன்பே கடவுள்” என்றவரும் இவரே. சிலுவையின் கீழே நின்ற ஒரே ஒரு திருத்தூதர் இவரே. இவரிடத்தில் தான் தம் தாயை இயேசு ஒப்படைத்தார்.

“தொடக்கம் முதல் இருந்ததை நாங்கள் கேட்டதை, கண்;ணால் பார்த்தை, உங்களுக்கு அறிவிக்கின்றோம். அதை நாங்கள் நோக்கிகோம். கையால் தொட்டுணர்ந்தோம். நாங்கள் அறிவிப்பது உயிரின் வார்த்தை பற்றியது. அந்த உயிர் வெளிப்படுத்தப்பட்டது. (1 அரு : 1:1)

பேதுரு, யோவான் ஆகிய 2 திருத்த}தர்களில் மண்ணகத் திருச்சபை விண்ணகத் திருச்சபை ஆகியவற்றின் உருவங்களைப் புனித அகுஸ்தினார் கண்டு பின்வருமாறு கூறுகிறார்.

“திருச்சபையில் இரண்டு விதமான வாழ்வைக் காண முடிகிறது. இவை இரண்டும் இறைவெளிப்பாட்டின் அடிப்படையில் இறைவனால் ஏவப்பட்டவை. மண்ணகத் திருச்சபை விசுவாசத்தினால் வளர்ச்சி அடைகிறது. விண்ணகத் திருச்சபை இறைத் தரிசனத்தினால் நிலைத்து நிற்கிறது. முந்தியது திருப்பயணம், பிந்தியது துறைமுகம். இங்கு முயற்சி, அங்கு வெற்றி. இங்கே நாடு கடத்தப்பட்ட நிலை, இங்கே தீயதை விலக்கி, நன்மையில் நீடித்தல். அங்கே நன்மையில் நிலைத்து நிற்றல். இங்கு போர்க்களம். அங்கு மேலான இன்பம். இங்கே இல்லாதவர்க்கு பகிர்ந்தளித்தல். அங்கே அனைவருக்கும் அமைதி, நிறைவு, நிம்மதி. இங்கே சோதனை, அங்கே நிறையருள். இங்கே கண்ணீர் கலந்த இன்பம். அங்கே தனிப் பேரின்பம். இதை இவ்வுலக நல்வாழ்வின் பரிசாக இறைத்தந்தையிடம் இருந்து பெற்றுக்கொள்ளக் காத்து நிற்கிறோம்.

 

புனித யோவான் – திருத்தூதர், நற்செய்தியாளர் விழா

முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-4

சகோதரர் சகோதரிகளே, தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டு உணர்ந்தோம். வெளிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த `நிலைவாழ்வு’ பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம். தந்தையுடனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம். எங்களது மகிழ்ச்சி நிறைவடையுமாறு உங்களுக்கு இதை எழுதுகிறோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 97: 1-2. 5-6. 11-12

பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;
பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!
மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன;
நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி

ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன.
வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன;
அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி

நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.
நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்;
அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 2-8

வாரத்தின் முதல் நாளன்று மகதலா மரியா சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.