உயிலங்குளம் தூய பேதுருவானவர் பங்குச் சமூகம்

உயிலங்குளம் தூய பேதுருவானவர் பங்குச் சமூகம் இன்று 12.05.2018 சனிக்கிழமை இரண்டு முக்கிய நிகழ்வுகளை தமது பங்கில் நடாத்தியது. தங்களது பங்கிற்கு முதன் முதலாக வருகை தந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு அன்பின் வரவேற்பை அளித்ததோடு லீயோன்ஸ் தூய வளனார் துறவற சபை அருட்சகோதரிகளின் இலங்கையிலிருந்து தன்னை அர்ப்பணித்த மன்னாரைச் சேர்ந்த அருட்சகோதரி சியாமி றம்மியா மிராண்டா அவர்களின் முதல் அர்ப்பண நிகழ்வும் இடம் பெற்றது. மேலும் அறிய உயிலங்குளம் தூய பேதுருவானவர் பங்குச் சமூகம்

முதல் அர்ப்பணத் திருப்பலி

லீயோன் தூய வளனார் அருட்சகோதரிகள் சபை சகோதரி சியாமி றம்யா மிராண்டா அவர்களின் முதல் அர்ப்பணத் திருப்பலியும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேர்ருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கு உயிலங்குளம் பங்கு மக்கள் அளிக்கும் வரவேற்பும் தூய பேதுருவானவர் ஆலயம் உயிலங்குளம்.12:05/2018

பாஸ்கா காலம்-ஆறாம் வாரம் சனி

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 23-28

பவுல் சிறிது காலம் அந்தியோக்கியாவில் செலவிட்டபின் அங்கிருந்து புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிகியாப் பகுதிகள் வழியாகச் சென்று சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார். அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்; மறைநூல்களில் புலமை வாய்ந்தவர். ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்; ஆர்வம்மிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். ஆனால் அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார். அவர் தொழுகைக்கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார். அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அவரை அழைத்துக் கொண்டுபோய், கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக்கினர். அவர் அக்காயாவுக்குப் போக விரும்பியபோது சகோதரர் சகோதரிகள் அவரை ஊக்கப்படுத்தி, அவரை ஏற்றுக்கொள்ளுமாறு சீடருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர் அங்கே சென்றபோது இறையருளால் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்குப் பெரிதும் துணையாய் இருந்தார். ஏனெனில் அவர் வெளிப்படையாகவும் சிறப்பாகவும் யூதர்களிடம் வாதாடி, `இயேசுவே மெசியா’ என மறைநூல்களின்மூலம் எடுத்துக் காட்டினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 47: 1-2. 7-8. 9

பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே.

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்;
ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்;
உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி

ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்;
அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்.
கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்;
அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி

மக்களினங்களின் தலைவர்கள்
ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்;
ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்;
கடவுளே அனைத்திற்கும் மேலானவர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகை விட்டுத் தந்தையிடம் செல்கிறேன். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 23b-28

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும். நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால் காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப் பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன். அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள். அப்போது `உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்’ என நான் சொல்லமாட்டேன். ஏனெனில் தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்பு கொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மே:12 புனித பங்கிராஸ்

மே:12

புனித பங்கிராஸ்
மறைசாட்சி-(கி.பி.304)

14 வயது நடக்கும் போது இந்த இளைஞர் டயக்ள{சியன் காலத்தில் சித்திரவதைக்கும் கொடிய சாவுக்கும் உள்ளானார். இவரின் மாமன் டெனிஸ் என்பவர் இவரை வளர்த்து வந்தார். ஆவர் கிறிஸ்துவுக்காக சிறையில் தள்ளப்பட்டிருந்தார். பங்கிராஸ் தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். கி.பி. 508ம் ஆண்டு திருத்தந்தை சிம்மக்கியஸ் இவரது கல்லறை மீது ஒரு பேராலயம் எழுப்பினார். உரோமையில் இன்று வரை இந்த ஆலயம் காட்சியளிக்கிறது!

இளைஞர் பங்கிராஸ் இன்று எந்த அளவுக்கு சிறப்புப் பெற்றவரெனில் லண்டனில் புனித பங்கிராஸ் பெயரில் புகைவண்டி நிலையம் ஒன்று இன்றும் காட்சியளிக்கிறது. புனித பெரிய கிரகோரியார் மறைபரப்புப் பணிக்கென இங்கிலாந்து சென்றபோது இப்புனிதர் பெயரால் ஆசீர்வாதப்பர் சபைத் துறவிகளுக்குத் துறவுமடம் கட்டினார். அடுத்து இந்த சபையைச் சேர்ந்த துறவியும் ஆயருமான அகஸ்டின் பதவிக்கு வந்தபோது அவர் அந்த நாட்டில் எழுப்பிய முதல் ஆலயத்திற்கு புனித பங்கிராஸ் பெயர் சூட்டினார்.

கர்தினால் வைஸ்மன் பபியோலா என்ற பெயரில் எழுதிய புதினம் பங்கிராசின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து எழுதியது. பங்கிராசின் வாழ்க்கை வரலாற்றில் நமக்குக் கிடைக்கும் தகவல் மிக மிகக் குறைந்ததே ஆயினும், விசுவாசத்தில் வீரச்சாவு வரைக்கும் அவர் காட்டிய பற்றுறுதி அன்று முதல் இன்றுவரை ஓர் உயர்ந்த எடுத்துக்காட்டு என்பதில் எள்ளளவும் ஜயமில்லை.