மே:16 புனித ஆண்ட்ரு பொபோலா, சே.ச.

மே:16
புனித ஆண்ட்ரு பொபோலா, சே.ச.
குரு, மறைசாட்சி-(கி.பி.1591-1657)

இவர் போலந்து நாட்டினர். இவரை “ஆன்மாக்களின் திருடன்„ என்று அழைத்தனர் இவரின் பகைவர்கள். இப்பழிச்சொல்லை, இவருக்கு புனித பட்டமளித்த திருத்தந்தை 9ம் பத்திநாதர் மனமகிழ்வோடு பயன்படுத்தினார். “ஆன்மாக்களை வேட்டையாடுபவர்„ என்று அழைத்தார். இவர் குருத்துவப் பணியில் ஈடுபட்ட நாள்களில் போலந்தில் ஒரே குழப்பம். இவர் லித்துவெனியாவில் தான் பணியாற்றினார். அங்கு கிரேக்கப் பிரிவினை சபையினர், வெறியர்கள் போல நடந்தனர். புனிதர் அஞ்சா நெஞ்சத்துடன் பணிபுரிந்தார். ஏழைகளை அவர்களின் குடிசைகளுக்குச் சென்று சந்தித்தார். முறைக்கல்வியை நுனுக்கமாக கற்றுத் தந்தார். போலந்தில் ஒருமுறை பிளேக் நோய் தோன்றியது. அந்த நேரங்களில் எல்லாம் எல்லாருக்கும் எல்லாமாயிருந்து பணியாற்றியதாக திருத்தந்தை 9ம் பத்திநாதர் இவரைப்பற்றி குறிப்பிடுகிறார்.

அந்நாட்டில் இருந்த கோசாக் என்றழைக்கப்பட்ட குழப்பகாரர்கள் கத்தோலிக்கர்களை வேரோடு அழிக்கத் திட்டமிட்டனர். ஜானேவ் என்ற இடத்தில் இவர்களின் பிடியில் புனிதர் சிக்கிக் கொண்டார். தடிகளால் அடித்தனர். சாட்டையடி கொடுத்தனர். ஒரு குதிரையின் பின் காலில் இவரைக்கட்டி பிணைத்தணர். அந்தக் குதிரையை விரட்டி ஓடவிட்டனர். குதிரை சாலை வழியே இவரை இழுத்துச் சென்றது. கொலைக்களத்தை அடைந்தார். நீ ஒரு கத்தோலிக்க குருவா? ஆம், நான் கத்தோலிக்கனாக விசுவாசத்தில் பிறந்தேன். இதிலே இறக்கவும் விரும்புகிறேன். எனது விசுவாசமே உண்மை விசுவாசம். அதுவே மீட்பளிக்கும். நீங்களோ மனந்திரும்ப வேண்டும். தவம் புரிய வேண்டும். இன்றேல் மீட்பு இல்லை என்றார். இச்சொற்களை அவர்கள் கேட்டபின், அவர்களின் வெறி மென்மெலும் கூடியது. முன்பைவிட பன்மடங்கு வேதனைகள் காத்திருந்தன. மீண்டும் சாட்டையடி, ஒரு கூரிய ஈட்டியால் இவரது தலையில் குத்தி ஈட்டியை நிறுத்தினர். தோலை உரித்தனர். தீப்பந்தம் கொண்டு இவரது நெஞ்சில் காணப்பட்ட காயங்களைச் சுட்டனர். முன்புறமும் பின்புறமும் சுட்டனர். புனிதர் மனத்தளர்ச்சி அடையவில்லை. மாறாக, தமது விசுவாசப்பிரமாணத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.

காதுகளையும், மூக்கையும் வெட்டினர். நாவைப் பிடுங்கி எறிந்தனர். கண்களையும் பிடுங்கி எறிந்தனர். சாகும் நிலையில் புனிதர் துவண்டாலும் பகைவர் இரங்காமல் அடிகள் கொடுக்கவே இவரது தூய ஆன்மாவை இறைவனிடம் ஒப்படைத்தார். புனிதர் அடைந்த இத்தகைய பெரும் வேதனைகளை திருத்தந்தை 9ம் பத்திநாதர் இவருக்கு புனிதர் பட்டம் அளித்தபோது உலகிற்கு விடுத்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பாஸ்கா காலம்-ஏழாம் வாரம் புதன்

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 28-38

அந்நாள்களில் பவுல் எபேசு சபையின் மூப்பர்களிடம் கூறியது: “தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக்கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்குத் தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள். உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியும். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்பும் அளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். எனவே விழிப்பாயிருங்கள்; மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி வந்ததை நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள். இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்கும் உரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தர வல்லது. எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடு இருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்கவேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்றுக்கொள்வதைவிடக் கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவுகூருங்கள் என்றும் கூறினேன்.” இவற்றைச் சொன்னபின் அவர் முழந்தாள்படியிட்டு, அவர்கள் எல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார்.
பின் எல்லாரும் பவுலைக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கதறி அழுதனர். `இனிமேல் நீங்கள் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை’ என்று அவர் கூறியது அவர்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது. பிறகு அவர்கள் கப்பல்வரைக்கும் சென்று அவரை வழியனுப்பிவைத்தனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 68: 28-29. 32-34. 34-35


பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்.

கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்!
எருசலேமில் உமது கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர். பல்லவி

உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.
வானங்களின் மேல், தொன்மைமிகு வானங்களின் மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்;
இதோ! அவர் தம் குரலில், தம் வலிமைமிகு குரலில், முழங்குகின்றார். கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள். பல்லவி

அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது; அவரது வலிமை மேக மண்டலங்களில் உள்ளது.
கடவுள் போற்றி! போற்றி! பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: “தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும். நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான். இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன். உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது. அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை. நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன். அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.