பொதுக்காலம், வாரம் 7 சனி

முதல் வாசகம்

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 13-20

உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும். உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்துகொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும். எலியா நம்மைப் போன்ற எளிமையான மனிதர்தாம். அவர் மழை பெய்யக் கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார்; மூன்று ஆண்டு ஆறு மாதம் மழையில்லாது போயிற்று. மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்; வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது. என் சகோதரர் சகோதரிகளே, உங்களுள் ஒருவர் உண்மையை விட்டு நெறி தவறி அலையும்போது, வேறொருவர் அவரை மனந்திரும்பச் செய்தால், தவறான நெறியிலிருந்து மனந்திருப்புகிறவர் அவரை அழிவிலிருந்து மீட்பார் என்பதையும் திரளான பாவங்களைப் போக்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 141: 1-2. 3,8

பல்லவி: தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்கப்படுவதாக!

ஆண்டவரே! நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்;
விரைவாய் எனக்குத் துணைசெய்யும்.
உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.
தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்றுக் கொள்ளப்படுவதாக!
மாலைப் பலி போல் என் கைகள் உம்மை நோக்கி உயர்வனவாக! பல்லவி

ஆண்டவரே! என் நாவுக்குக் காவல் வைத்தருளும்;
என் இதழ்களின் வாயிலில் காவலாளியை வைத்தருளும்.
ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன;
உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்; என் உயிரை அழியவிடாதேயும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்காலத்தில் சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மே:26 – புனித பிலிப்புநேரி

மே:26
புனித பிலிப்புநேரி
குரு – (கி.பி.1513-1595)

இவர் இத்தாலியில் பிளாரன்ஸ் நகரில் பிறந்தவர். 26 வயது நடக்கும்போது வணிகத் தொழிலை விட்டு விட்டு தமது ஆன்மீக நலனைக் குறித்தும் மற்றவர்களின் ஆன்மீக ஈடேற்றத்தை முன்னிட்டும் உரோமை நகர் சென்றடைந்தார். தத்துவக்கலை, இறையியல் பயின்றதோடு ஜெபத்திலும,; தவமுயற்சிகளிலும் தம்மை மிகவும் ஈடுபடுத்திக் கொண்டார். அந்நகரில் 12 மைல் சுற்றளவில் இருந்த புகழ்மிக்க 7 தேவாலயங்களையும் மாலையானதும் நடந்தே சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டு இரவில் புனித செபஸ்தியாரின் புதை குழி வளாகத்தில் தங்குவார்.

மேலும் நலிவுற்ற மக்களின் நலன்களைக் கருதி மருத்துவ மனைகளில் நோயாளிகளைச் சந்திப்பார். தெரு வழியாக செல்லும் போது ஆன்மீகத்தில் அக்கறையற்றவர்களை இணங்கண்டு தமது திறமையான பேச்சினாலும் அனுகுமுறைகளினாலும் இறைவன் பக்கம் மனம்மாறச் செய்வார். இந்த அனுபவமானது கி.பி.1548ல் தமது குறிக்கோளை ஏற்றுக் கொண்டவர்களை ஒருங்கிணைக்கவும் திவ்ய நற்கருணை ஆராதனை பக்தி முயற்சிகளை தொடங்குவதற்கும் புனிதரைத் தூண்டியது. இவ்வாறு 10 ஆண்டுகள் உருண்டோடின.

இவரின் ஆன்ம குரு இவரைக் குருத்துவததை நாடப் பணித்தார். குருப்பட்டம் பெற்றபின் 33ஆண்டுகளாக “ஆரட்டரி„ என்று அழைக்கப்படும் செபக் குழுவை பல குருக்களைக் கொண்டு நடத்தினார். ஏராளமான ஞானப்பயன் கிடைப்பதைக் கண்டு மகிழ்ந்தார். இவர்களே (ஆரட்டோரியன்ஸ்) “ஜெபக் குழுவினர்„ என்று இந்நாள்வரை போற்றப்படுகின்றனர். நாள்தோறும் இவரிடம் ஒப்பரவு அருட்சாதனம் பெறவும் ஆன்மீக ஆலோசனை பெறவும் தொழிலாளர் பல பணிகளை முடித்தபின் வந்த வண்ணம் இருந்தனர். கர்தினால்கள் பலரும் குருக்களும் இவரது ஆலோசனையை நாடிவந்தனர். இவர் திருப்பலி நிறைவேற்றும் போதெல்லாம் பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார். இளைஞர்கள் பலரை ஆன்மீக வாழ்வுக்கு கொண்டு வந்து சேர்த்தார். எப்போதும் மகிழ்ச்சியாயிருக்கவும் ஆழமான இறைஅனுபவம,; தாழ்ச்சி, ஒறுத்தல் ஆசைகளைக் கட்டுப்படுத்தல் அடிக்கடி ஒப்பரவு அருட்சாதனத்தைப் பெறுதல் ஆகியவற்றில் தம்மிடம் வந்தவர்களுக்கு பயிற்சி அளித்தார். இளைஞர் ஒருவர் திவ்விய நன்மை உட்கொண்ட உடனே தன் அலுவலகத்திற்கு விரைவாக போய்விடுவார். ஒருமுறை இவரது குற்றத்தை உணர்த்தும் முகமாக பூசைக்கு உதவி செய்யும் சிறுவர் இருவரிடம் எரியும் மெழுகுவர்த்திகளை கொடுத்து “அந்த இளைஞரின் பின்னால் ஓடுங்கள்„ என்றார். இளைஞரும் தம் குற்றத்தை இதன்மூலம் உணர்ந்து திருத்திக் கொண்டார். சிலருக்கு மற்றவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் பழக்கம் இருந்ததைக் கண்டு அவர்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். பிறரை பழிதூற்றும் ஒரு பெண்ணிடம் ஒரு வாத்தின் இறகுகளைப் பறிக்கச் சொன்னார். பறித்து முடித்த பின் அவற்றைக் காற்றில் பறக்கவிடச் சொன்னனார். இதன்பின் அந்தப் பெண்ணிடம் இன்னொன்று செய்யுமாறு கேட்டிருக்கின்றார். அதாவது அவ்வளவு முடிகளையும் ஒன்று சேர்த்துக் கொண்டுவரக் கேட்டிருக்கின்றார். இது இயலாதே என்று பெண்கூற அப்படித்தான் நீ மற்றவர்களின் பெயரைக் கெடுத்தபின் அதை நீ சரிப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொள் திருத்திக் கொள் என்று சொன்னார்.

இவரை உரோமை நகரின் இரண்டாம் அப்போஸ்தலர் என அழைக்கின்றார்கள். இது இவருக்கு மிகப் பொருத்தம். நாள்தோறும் பிலிப்பு வைகறையில் தாழ்ச்சியுடன் எழுப்பிய மன்றாட்டு ஆண்டவரே, பிலிப்பை உமது அருட்கரம் கொண்டு நடத்தும். இல்லாவிட்டால் பிலிப்பு உம்மைக் காட்டிக் கொடுத்து விடுவான்.