விடத்தல் தீவு பங்கில் புனரமைக்கப்பட்ட தூய மரியன்னை ஆலய அர்ச்சிப்பு விழா

விடத்தல் தீவு பங்குச் சமூகம் 02.05.2018 புதன்; கிழமை தங்கள் பங்கில் புனரமைக்கப்பட்ட தூய மரியன்னை ஆலய அர்ச்சிப்பு விழாவோடு தங்கள் பங்கிற்கு முதன் முதலாக வருகை தந்த மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கும் மகத்தான வரவேற்பளித்தது. மேலும் அறிய விடத்தல் தீவு பங்கில் புனரமைக்கப்பட்ட தூய மரியன்னை ஆலய அர்ச்சிப்பு விழா

மே:03 – புனித பிலிப்பு

மே:03

புனித பிலிப்பு
திருத்தூதர்

பிலிப்பு, கலிலேயாலில் பெத்சாயிதா என்ற ஊரில் தோன்றியவர். யோவான் நற்செய்தியாளர் மட்டுமே மீண்டும் மீண்டும் பிலிப்பைக் குறிப்பிடுகிறார். அதுவும் இறைமகன் இயேசு பேதுருவையும் ஆண்ட்ருவையும் முதலில் தேர்ந்து கொண்ட மறுநாளே, “என்னைப்பின் செல்”; என்று கூறி பிலிப்பைத் தேர்ந்து கொண்டார் என்று குறிப்பிடுகிறார். இறை அழைத்தலுக்கு உடனே செவிமடுத்தார் பிலிப்பு என்பது இதிலிருந்து புலனாகிறது. ஏனெனில் அவர் உடனே தம் நண்பர் நத்தனேயலிடம் இது குறித்து தெரிவிக்கின்றார். நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரமுடியுமோ? என்று கேட்ட நத்தனேயலிடம் வந்து பாரும் என்று பதிலளிக்கிறார் பிலிப்பு. நீர் இயேசுவிடம் திறந்த உள்ளத்துடன் வந்து பாரும் அப்போது உம் ஜயங்கள் எல்லாம் அடிபட்டு விடும் என்று பிலிப்பு மறைமுகமாக குறிப்பிடுகின்றார்.

கள்ளங்கபடமின்றி திறந்த உள்ளத்துடன் பேசுபவர் பிலிப்பு என்பது ஆண்டவரிடம் அவர் அளித்த பதிலில் இருந்தும் புலனாகிறது. 200 தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறுதுண்டும் கிடைக்காதே என்றார் அவர். (யோவான்.6,7) ஒரு முறை வழிபாட்டுக்காக கிரேக்கர் யெருசலேம் நகரை வந்தடைகின்றனர். இவர்கள் தற்செயலாக பிலிப்பைச் சந்திக்கின்றார்கள். ஜயா இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று பிலிப்பிடம் கேட்க பிலிப்பு தான்தோன்றித்தனமாக செயல்படவில்லை என்பதை இங்கு அவர் நடந்து கொண்ட விதத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. புpலிப்பு அந்திரேயாவிடம் வந்து அது பற்றிச் சொன்னார். அந்திரேயாவும் பிலிப்பும் கலந்துபேசி பின்னர் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர். இவ்வாறு பல உயர்ந்த பண்புகள் கொண்டவர் பிலிப்பு.

தியோடரற், யுசிபியஸ் ஆகிய பழங்காலத்து வரலாற்று ஆசிரியர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்: தூயஆவியாரின் வருகைக்குப் பிறகு பிலிப்பு தம்முடைய திருமணமாகாத பெண்மக்களுடன் ஆசியா மைனர் சென்று மறைபரப்புப்பணியில் நாள்களைச் செலவிட்டார். இறதியில் பிலிப்பு பிரிஜியாவில் ஹியராப்போலிஸ் என்ற நகரில் சிலுவைச் சாவு அடைந்தார் என்று சொல்லப்படுகிறது.

மே:03 – புனித யாக்கோப்பு

மே:03

புனித யாக்கோப்பு
திருத்தூதர்

இவர் யூதா ததேயுவின் சகோதரர், ஆண்டவரின் உறவினர். இவரின் தாய்க்கும், இயேசுவின் தாய்க்கும், அக்காள் தங்கை முறை. இவர் செபதேயுவின் மகன் அல்லர். அல்பேயுவின் மகன். பக்தியில் சிறந்து விளங்கியவர். எருசலேம் நகரின் முதல் ஆயராக விளங்கியவர். (தி.ப.21,18) யூத மரபுகளைக்காத்து எருசலேம் ஆலயத்தில் திருப்பணிகளையும் திறம்பட நடத்தி வந்தவர். ஏரோது அக்ரிப்பா இழைத்த கொடுமைகளை பொறுமையுடன் தாங்கிக் கொண்டார்.

நற்செய்தியில் இவர் சிறப்பிடம் பெறாவிடினும் நமதாண்டவர் விண்ணேற்பு அடையும்முன் இவருக்கு சிறப்பான முறையில் காட்சி தந்தார் என்று புனித பவுல் குறிப்பிடுகிறார். மேலும் பவுல் மனந்திரும்பிய பிறகு 3 ஆண்டுகள் கழித்து பேதுருவுடன் எருசலேம் சென்றடைந்த போது கிறிஸ்தவர்கள் பொதுவாக பவுலை சந்தேக கண்கொண்டு பார்த்தாலும் யாக்கோப்பு இவரை இருகரம் விரித்து வரவேற்றார். யெருசலேமில் கூடிய முதல் பொதுச்சங்கத்தில் பிற இனத்தவர் விருத்தசேதனமின்றி திருமுழுக்குடன் மட்டும் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று ஒரே மனதாக முடிவெடுத்தபோது யாக்கோப்பு சகோதரரே கடவுளிடம் திரும்பும் பிறஇனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது என்ற முடிவை அரங்கேற்றினார்.

யூத வரலாற்று ஆசிரியர் கி.பி.62ல் யாக்கோப்பு கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட்டார் என்று உறுதிபடக் கூறுகிறார். திருமுகம் ஒன்று இவரால் எழுதப்பட்டுள்ளது. இந்தத் திருமுகம் பற்றி 23ம் யோவான் தாம் பாப்புவாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் தமது ஆண்டுத் தியான குறிப்பேட்டில் குறிப்பிட்டு வைத்துள்ளார்.

புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு – திருத்தூதர்கள் விழா

அப்போஸ்தலர்களான புனித பிலிப்பு, யாக்கோபு

முதல் வாசகம்

 

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-8

சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே. நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திருப்பாடல் 19: 1-2. 3-4


பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. –பல்லவி

அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில்படுவதுமில்லை. ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது,
இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். –பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. பிலிப்பே, என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 6-14

அக்காலத்தில் இயேசு, தோமாவை நோக்கி: “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்” என்றார்.
அப்போது பிலிப்பு அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார். இயேசு அவரிடம் கூறியது: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, `தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றை விடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.ம் செய்வேன்.