ஏப்ரல் 05 – புனித வின்சென்ட் ஃபெரர்

ஏப்ரல் 05
புனித வின்சென்ட் ஃபெரர்
குரு – (கி.பி.1350-1419)

இவர் தம் தந்தை ஆங்கிலேயர். தாய் ஸ்பெயின் நாட்டினர். வலன்சியாவில் டொமினிக்கன் சபையில் சேர்ந்தார். திருச்சபையில் இதுவரை தோன்றிய சிறந்த மறைபோதகர்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார். 21 ஆண்டுகளாக ஸ்பெயின், சுவிஸ்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் தம் பாவ நிலையை முற்றிலும் விட்டகலும் முறையில் போதித்தார். 10,000 பேர் மனந்திரும்பிய நிலையில் இவரை பின் தொடர்ந்தனர் என்று கூறப்படுகிறது.
அப்போது தலைவிரித்தாடிய தீமைகளான சூதாட்டம், இறைப்பழிப்பு, குடிவெறி இவற்றுக்கு முற்றுப்புள்ளி இடும் அளவுக்கு அவருடைய போதனைகள் அமைந்திருந்தன. அவர் குணப்படுத்தும் வரமும் பெற்றிருந்தார். ஏராளமான யூதர்களையும், மூர் வகுப்பினரையும் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு கொண்டு வந்தார். இவர் காலத்தில் திருச்சபையில் ஒரு பிளவு ஏற்படும் ஆபத்து இருந்தது. பீற்றர் டே லூனா என்பவர் திருத்தந்தை 13ம் ஆசீர்வாதப்பர் என்ற பெயரை தெரிந்து கொண்டு அவிஞான் என்ற நகரில் தான்தோன்றித்தனமாக திருச்சபையின் தலைவர் நான் என்று கூறி வந்தார். வின்சென்ட் இதில் மிகத் திறமையாக பீற்றர் டே லூனாவை விட்டு விலகினார். ஓராண்டுக்குப் பின் கொண்ஸ்டான்ஸ் பொதுச்சங்கம் 5ம் மார்ட்டின் என்பவரை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *