பாஸ்கா காலம்-4 வாரம் சனி

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 44-52

அடுத்து வந்த ஓய்வுநாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடிவந்தனர். மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள். பவுலும் பர்னபாவும் துணிவுடன், “கடவுளின் வார்த்தையை உங்களுக்குத்தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலைவாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம். ஏனென்றால், `உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்’ என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்” என்று எடுத்துக் கூறினார்கள். இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட் டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது. ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு இக்கோனியாவுக்குச் சென்றார்கள். சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் : திருப்பாடல் 98: 1. 2-3, 3-4


பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.
அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;
பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும்
உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 7-14

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி: “நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்” என்றார். அப்போது பிலிப்பு அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார். இயேசு அவரிடம் கூறியது: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, `தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால், என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

ஏப்ரல்:28 புனித பீற்றர் ~hனல் ஒசியானாத் தீவின் திருத்தூதர், மறைசாட்சி

ஏப்ரல்:28

புனித பீற்றர் ~hனல்
ஒசியானாத் தீவின் திருத்தூதர், மறைசாட்சி-(கி.பி.1803-1841)

பிரான்ஸ் நாட்டில் கெயே நகரில் 1803ம் ஆண்டு இவர் பிறந்தார். புதுநன்மை வாங்கிய நாளன்றே மறைபரப்புப் பணியில் ஈடுபட மாளாத ஆவல் கொண்டார். ஆனால் நாளடைவில் படிப்பதில் ஏற்பட்ட இடையூறுகளினால் அவ்வெண்ணத்தை உதறித்தள்ள முயன்றார். ஆனால் மரியன்னையிடம் மன்றாடினார். எண்ணத்தில் மீண்டும் பற்றுறுதி கொண்டார். 18ம் வயதில் குருமடத்தில் சேர்ந்தார். குருப்பட்டம் பெற்று 4 ஆண்டுகள் கழிந்தபின் மேரிஸ்ட் குருக்கள் துறவற சபையில் சேர்ந்தார். 33ம் வயதில் தம் சபைத் தோழர் ஒருவருடன் ஒசியானியாத் தீவுக்கு மறைரப்புப் பணிக்காக புறப்பட்டார். பசுபிக் பெருங்கடலை ஒட்டிய புத்தானாத் தீவை அடைந்தார். அங்கே கடுமையான வெயிலின் கொடுமைக்கு உள்ளானார். உணவின்றி வருந்தினார். மறைபரப்புப் பணிக்குப் பின் வீடு திரும்பும்போது முற்றிலும் வலிமையிழந்தவராகக் காணப்பட்டார். ஆனால் எப்போதும் மகிழ்ச்சியாகவும் புன்முறுவலுடனும் இருந்தார்.
இவரை அனுகி வந்த அனைவருக்கும் இவரை கடுமையாக துன்புறுத்தியவருக்கும் கூட நன்மை செய்ய சலிக்க மாட்டார் என இவர் தம் தோழர் புகழ்ந்துரைக்கிறார். இதனால் இவரை அறிந்த புத்தானா தீவினர் அனைவரும் “உயர்ந்த உள்ளம்” என்றே அழைத்தனர். இவர் செய்த முயற்சிகளுக்கு ஏற்றவாறு ஞான அறுவடை சிறிதும் கிட்டவில்லை. ஆனால் தம் தலைவர் கிறிஸ்துவை முன்வைத்து அதிகமாக முயன்றார். “விதைப்பவன் ஒருவன், அறுப்பவன் மற்றொருவன்” என்று அடிக்கடி கூறுவார். தான் விதைத்தது பயனளிக்காமல் போகாது என்பது அவரது நம்பிக்கை.
மரியன்னை பக்தியின் மாசற்ற வடிவம் இவர். மணிக்கணக்காக மரியன்னையின் மலரடிகளின் முன்னே மண்டியிட்டு இருப்பார். தீவின் தலைவனுடைய மகன் அருள் தந்தை பீற்றரிடம் நெருங்கிய தோழமை கொண்டிருந்ததன் பயனாக திருமுழுக்குப் பெற விரும்பினான். எனவே தீவின் தலைவன் அடியாட்களை அனுப்பி தடிகளால் தந்தை பீற்றரை கடுமையாக தாக்கி அடித்துக் கொன்றான். போதகரைக் கொல்லும் போது கிறிஸ்தவ வேதமும் கொல்லப்படும் எனக் கருதினான். இவர் இறந்த 2 ஆண்டுகளுக்குப் பின் பத்தானா தீவு முழுவதும் கிறிஸ்தவ மறையைத் தழுவியது. இப்போது ஒசியானியாத் தீவுகள் அனைத்திலும் கிறிஸ்தவ மறை செழித்து வளர்ந்து வருகிறது. இப்புனிதரை இப்பகுதியினர் தங்களின் முதல் மறைசாட்சி என்று கூறி வாழ்த்துகின்றனர்.