மார்ச்:07
பெர்பெத்துவா, ஃபெலிசிட்டி தோழிகள்
மறைசாட்சிகள்-(கி.பி.203)
இவர்கள் அடைந்த வீர மரணம் பற்றி நமக்கு கிடைத்துள்ள தெளிவான விவரங்கள் மிகத் தொன்மை வாய்ந்தவை. நம்பகமானவை. செப்டிமஸ் செவேருஸ் என்ற கொடுங்கோலன் ஆட்சியில் உரோமையில் நிகழ்ந்தவை. இந்த 2 பெண்களுடன் திருமுழுக்குக்குத் தங்களை தயார் செய்து கொண்டிருந்த வேறு 5 பேரும் சிறைப்படுத்தப்பட்டனர். சட்டைரஸ் என்பவர் இவர்களின் வேதியர். சிறையில் இவர்கள் திருமுழுக்குப் பெற்றனர். மன்னன் இவர்களின் உயிரை வாங்கப் போகிறான் என்பது உறுதியாகி விட்ட நிலையில் பிரபு குலத்தைச் சேர்ந்த பெர்பெத்துவாவின் தந்தை (திருமுழுக்கு பெறாதவர்) சிறையில் மீண்டும் மீண்டும் மகளை வந்து சந்தித்து வேதத்தை மறுதலிக்க கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது பெர்பெத்துவா “அப்பா இதோ, இங்கே ஒரு பாத்திரத்தைப் பார்க்கின்றீர்களா, அதை வேறு எப்பெயர் கொண்டும் அழைக்க முடியுமா?” ‘இல்லை’ என்றார் தந்தை. “அதே போல் தான் நான் கிறிஸ்துவுக்குரியவர் என்றால் என்னை வேறுபெயர் கொண்டு அழைக்க இயலாது” என்று உறுதியாகக் கூறினார். இவரது ஆண் கைக்குழந்தை தாய்க்கு அருகிலேயே இருக்கின்றான். பெரிய இடத்துப் பெண் இவ்வளவு துணிச்சலுடன் பதிலளித்ததும், மிகக் கொடிய வாதைகளுக்கு உட்படுத்தப்பட்டு உயிர் நீத்ததும் நமது விசுவாச உறுதிப்பாட்டுக்கு ஓர் அறைகூவல் அன்றோ? பெலிசிட்டி ஓர் கர்ப்பிணிப்பெண். அடிமைப் பெண்ணும் கூட. இந்தப் புனிதப் பெண்கள் இருவரின் தலைகள் வெட்டப்பட்டன. மற்றவர்கள் விலங்குகளுக்கு இரையாக்கப்பட்டனர்.