புனித பிரான்சிஸ் சவேரியார் சே.ச
மறைப்போதகர் (கி.பி 1506 – 1552)
இவர் ஸ்பெயின் நாட்டினர். இவரது ஞானத் தந்தையாகிய இஞ்ஞாசியாரைப்போல் பாஸ்குப் பகுதியைச் சேர்ந்தவர். இவரிடம் 24வது வயதில் காணப்பட்ட உலகப் பற்றுதல்களைத் தந்தை இஞ்ஞாசியார் முற்றிலும் கட்டுப்படுத்தினார். பாரிஸ் பல்கலைக் கழகத்தில் 4 ஆண்டுகள் பாவர் இராயப்பருடனும், சவேரியருடனும் இஞ்ஞாசியார் உரே அறையில் தங்கிக் கற்று வந்தார்.
குருப்பட்டம் பெற்றபின் சவேரியார், “சிறிய மந்தை” என்ற அழைக்கப்பட்டதும் இளந்தளிரானதுமான இயேசு சபையின் முதல் மறைப்போதகராகக் கீழத்திசை நாடுகளை நோக்கிப் புறப்பட்டார். வேறொருவர் அனுப்பப்பட இருந்தபோது சூழ்நிலையின் காரணமாக, இறுதிக்கட்டத்தில் தான் சவேரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். “பிரான்சிஸ்! இது உங்கள் பணி” என்றார் இஞ்ஙாசியார். 24 மணி நேரத்திற்குள் பிரான்சிஸ், உரோமையிலிருந்து போர்ச்சுக்கல்லுக்குப் பறப்பட வேண்டும். மகிழ்ச்சியோடு இப்பணியை “ஆகட்டும்” என்று சொல்லி, ஏற்றுக்கொண்ட சவேரியார், கிழிந்த ஒரு நீளமான கால்சட்டையையும், பழைய அங்கியையும் பழுது பார்த்துக்கொண்டு, புறப்படுவதற்குத் தயாரானார். எளிமை மற்றும் கீழ்ப்படிதலின் மூலம் இறைவனின் திருவுளத்தைத் தெரிந்து செயல் படுதல், செபவாழ்வு இவைதான் சென்ற இடமெல்லாம் இவரது வாழ்வின் சாரமாக அமைந்தன.
மொழிகளைக் கற்றுக்கொள்வது இவருக்கு அரிதாகவே தோன்றியது. பற்றாக்குறைக்கு, சந்திக்கும் மக்களின் பழக்கங்களைப் புரிந்து செயல்படுவதும் எளிதானதன்று. லிஸ்ப் துறைமுகத்தில் இருந்து கோவாவை வந்தடைய 13 மாதங்கள் ஆயின. பயணத்தில் ஒரு முறை இவர் இஞ்ஞாசியாருக்கு எழுதிய மடலில் “எங்களுக்கு மகிழ்ச்சியூட்டுவது ஒன்று இருக்கிறது. இது இறைவன் அருளை இடைவிடாது எதிர்நோக்கி வாழ வழிவகுக்கிறது. அது என்னவெனில், நற்செய்தி பரப்புப் பணியில் எங்களுக்கத் தேவைப்படும் ஆற்றல் அiவை எதுவும் எங்களிடம் கிடையாது” என்று குறிப்பிடுகிறார்.
இவர் இந்தியாவிலும் ஜப்பானிலும் 10 ஆண்டுகள் அயராது உழைத்தார். நற்செய்திப் பணிக்காக இவர் செய்த பயணங்கள் இன்றைக்கு யாரையும் திகைக்க வைக்கின்றன. இறைவனுடன் செபத்தின் வழி ஒன்றித்த வாழ்வு மட்டுமே இவருக்கு இப்பயணங்களை மேற்கொள்ள ஆற்றல் அளித்திருக்க முடியும்.
“நிலையற்ற இவ்வுலகில் அமைதியான இளைப்பாற்றியைக் காண இயலாது. இறையன்பால் உந்தப்பட்டு, இறப்பே என்றாலும் அதனை எதிர்நோக்கி வாழ்வதில்தான், மனநிறைவு உண்டு” என்று மாசிஸ்லாஸ் என்ற தோழருக்கு எழுதிய கடிதங்களில் இவர் குறிப்பிடுகிறார். மீண்டும் மீண்டும் இறைமக்களை அவர்களின் இல்லம் சென்று சந்தித்து ஆறுதல் கூறி, விசுவாசத்தில் உறுதிப்படுத்த தூண்டுகிறார். “ஆலைக்குத் தண்ணீர் வந்து சேரவில்லையா? ஆலை முதலாளிதான் தண்ணீருடன் இடத்திற்குச் செல்ல வேண்டும்” என்பார். இவர் மேலும் “இந்த மக்களிடம் நீர் ஆழ்ந்த பற்றுதலுடன் நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில் நீர் அவர்களை அன்பு செய்யவும், அவர்கள் உம்மை அன்பு செய்வதற்கான சூழ்நிலையில் தான் அவர்களுக்கு மிகுந்த நன்மை செய்யமுடியும். இதுபோல்தான் நான் நடந்து கொள்கிறேன்” என்று எழுதினார்.
இந்தியாவில் நற்செய்தியைப் பரப்பத் தொடங்கி ஒன்றரை ஆண்டு ஆன பின்பு, இஞ்ஞாசியாருக்கு ஒரு மடல் எழுதினார். “திருமுழுக்கு எத்தனை பேருக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது எனில் பல வேளைகளில் என் கைகள் வாத நோய் கண்டதுபோல், உயர்தத் முடியாத அளவுக்கு மரத்துப் போய்விடுகின்றன. இவர்களின் மொழிகளில் விசுவாசப் பிரமாணம் முதலில் செபங்களைச் சொல்லி எனக்குத் தொண்டையும் மரத்துப் பொவதுபோல் பெசவும் முடியவில்லை.”
இன்னும் அவர் எழுதியதாவது: “பல்கலைக் கழகத்தில் பல கலைக் கற்றுக் கொண்டிருக்கிறார்களே, தங்;கள் பாடங்;களுடன் இறைவன தங்களுக்குத் தந்த ஆற்றல்களுக்கு ஈடாக இறுதி நாளில் அவர் கேட்க இருக்கும் வாழ்க்கைக் கணக்கைப் பற்றி நினைப்பார்களா? அவ்வாறு நினைத்துவிட்டால், உடனே ஞான முயற்சிகள் செய்ய முன்வருவார்கள். இவை இறைவன் திருவுளத்தை உணர வைக்கம்! நான் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்?” என்று கேட்கவும் முன்வருவார்கள்.
ஜப்பான் நாட்டிற்குச் சென்று, போதிய அளவு அந்த மொழியைக் கற்றுக்கொண்டார். அந்த நாட்டிலும் நற்செய்தியைப் போதித்து மறைக்கல்வி கற்றுக்கொடுத்து, திருமுழுக்காட்டித் தம் தொண்டுத் தளத்தை விரிவுபடுத்தினார்.
ஹாங்காங் நகருக்கு ஏறத்தாழ 100 கல் தொலைவில் உள்ளது சான்சியன் தீவு. கப்பல் வழியாகச் சவேரியார் அதை நோக்கிப் பயணம் செய்ததால் வழியில் காய்ச்சலின் காரணமாக, இவரைக் கப்பலிலிருந்து கரைக்கக் கொண்டுவந்து விட்டுச் சென்றார்கள். ஒரு போர்ச்சுக்கீசிய வாணிகர் இரக்கப்பட்டு அருகில் இருந்த குடிசையொன்றில் வைத்துச் சென்றார். அருகில் இருந்தவர் அந்தோணி என்பவர். பாடுபட்ட சுரூபத்தைக் கையில் வைத்துக்கொண்டே சவேரியார் இறைவன் அடி சென்றார்.
இறந்த இவரின் சடலத்தை அடக்கம் பண்ணும்போது கல்லறையில் இவரது உடலோடு சுண்ணாம்பை நிரப்பினார்கள். 6 மாதங்களுக்குப்பின் இவரது தாயகத்திற்கு இவரது எலும்புகளைக் கொண்டுபோய், உறவினரிடம் ஒப்படைக்கவே, இவ்வாறு சுண்ணாம்பு கலந்தனர். 6 மாதங்களுக்குப் பின் கல்லறையைத் தோண்டினர். இவரது உடல் சிறிதும் அழியாமலிருப்பதைப் பார்க்கும் போது, இறைவனை ழுமுமையாக அன்பு செய்வோரை ஆண்டவர் எவ்வாறு பேணுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதா?