டிசம்பர் 11 – புனித தோமசுஸ் பாப்பு – (கி.பி 305 – 384)
இவரின் பெற்றோர் ஸ்பெயின் நாட்டினர். உரோமையில் இவர் குருப்பட்டம் பெற்றார். திருச்சபையின் கடுமையான கொந்தளிப்பின் நாட்களில் திருத்தந்தையாகத் தெரிந்துகொள்ளப்பட்hர். ஆயர்களைப் பலமுறை அழைத்து ஆலோசனை பெற்று, பிரிவினை சபையினரைக் கட்டுப்படுத்த முயன்றார். மறைசாட்சிகளின் கல்லறைகளைச் சிறந்த முறையில் புதுப்பித்தார். 20 ஆண்டுகளாகத் திருச்சபையைத் திறம்பட நடத்தி வந்தார். இவர் காலத்தில் கி.பி 380ம் ஆண்டு பெப்ரவரி 28ம் நாள் தியோடோசியுஸ் மன்னன். திருச்சபையின் சார்பில் மிக முக்கியமான ஓர் அறிக்கையை வெளியிட்டார். “எனது அரசிலுள்ள குடிமக்கள் அனைவரும், புனித பேதுரு உரோமையர்களுக்குக் கொண்டு வந்த சமயத்தைத் தழுவட்டும். ஒரே தெய்வத்தையே விசுவசிப்போம். அவரது தூயதமத்திரித்துவத்தில் தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவராயிருக்கிறார்கள்” என்பதே அவ்வறிக்கை.
பாப்புவான தோமசுஸ் தம் கல்லறைமேல் எழுதும்படி தம் கைப்பட எழுதிவைத்த சொற்கள்: “அச்சமூட்டும் கடல் அலைகளை அமர்த்திய வரும், மண்ணில் மடியும் விதைகளுக்கு உயிர் அளிப்பவரும், இலாசருக்குச் சாவின் சங்கிலிகளைத் தகர்த்தெறிந்தவரும் 3 இரவுக்குப் பின் அவரை உயிர்பெறச் செய்து அவரின் சகோதரி மார்த்தாவிடம் ஒப்படைத்தவருமான இறைவன், தோமசுசையும் சாவுக்குப்பின் உயிர்தெழச் செய்வார் என விசுவசிக்கிறேன்” இந்த திருத்தந்தை புனிதர்களின் திருப்பண்டங்களைப் பேணிக்காப்பதிலும், மறைசாட்சிகள் மாண்ட இடங்களைப் பேணிக் காப்பதிலும் அக்கறை செலுத்தினார். புனித ஜெரோம், விவிலியத்தை வெளிக்கொணர்வதில் எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் ஊக்கமும் ஆக்கமும் நல்கினார்.
80 வயதில் இறந்த தாமசுஸ், புனித கலிஸ்தாஸ் கல்லறை வளாகத்தில் இவ்வாறு எழுதி அறிக்கையிடப் பணித்தார்.
“தோமசுஸ் ஆகிய நான் இந்த இடத்தில் அடக்கம் பண்ணப்பட விரும்பினேன்: ஆனால் இதற்குமுன் சென்ற புனிதர்களின் சாம்பலை நான் கறைபடுத்திவிடுவேனோ என்ற அச்சமடைந்தே.” எனவே இவரின் விருப்பப்படி ஆர்டியெட்டினா என்ற இடத்தில் தம் தாய், சகோதரியின் கல்லறைக்கு அருகில் அடக்கம் பண்ணப்பட்டார்.