திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு.

2019.12.08.

முன்னுரை.

ஆண்டவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக!!

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் விடுவிக்கும் நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவருகைக்கால இரண்டாம்; ஞாயிறு திருப்பலியைக்  கொண்டாடுகின்றோம்.

இறைவனுடைய இரக்கம் எவ்வாறானது என்பதையும், சமத்துவம் நிறைந்த ஒரு அன்புச் சமூகம் அவரால் உருவாக்கப்படும் என்பதையும் இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு உறுதியாக எடுத்துரைக்கின்றன. கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார். காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார். நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார். நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்: என்னும் வார்த்தைகள் இறைவனின் தூய அன்பை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

எனவே இந்நாட்களில், ஞானத்தோடு அனைத்தையும் செய்யவும், மனம் மாறியவர்களாய், அந்த மனமாற்றத்தைச் செயலில் காட்டுபவர்களாய் இருந்து,  புதுப்பித்தலுக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியவர்களாய்,  அன்புச் சமூகமாய் வாழவும், அருள் வரம் கேட்டுத்; தொடரும் பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்.

நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்.

இறைவாக்கினர் எசாயா  நூலிருந்து வாசகம். 11:1-10

ஆண்டவருக்குரிய நாளில்

ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும். அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும். ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு – இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார்.

கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார். காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார். நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார். நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார். வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார். உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். நேர்மை அவருக்கு அரைக்கச்சை. உண்மை அவருக்கு இடைக்கச்சை.

அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும். அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும். பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும். அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும். சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையா டும். பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை. கேடு விளைப்பார் யாருமில்லை. ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும். அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிற இனத்தார் தேடி வருவார்கள். அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்தகாக இருக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 72: 1-2, 7-8, 12-13, 17

பல்லவி: ஆண்டவர் காலத்தில் நீதி தழைத்தோங்கும்.

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும். அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி:

அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக. நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. ஒரு கடலிலிருந்து அடுத்த கடல் வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார். பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.பல்லவி:

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார். ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.பல்லவி:

அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக!பல்லவி:

இரண்டாம் வாசகம்.

மக்கள் அனைவரையும் கிறிஸ்து மீட்கிறார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 15:4-9

சகோதரர் சகோதரிகளே,

முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! இவ்வாறு நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள்.

ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டதுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே. கடவுள் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுமாறு கிறிஸ்து விருத்தசேதனம் செய்து கொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார். மூதாதையருக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தவும், பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார். ஆகவே, ‘பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன். உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்” என இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி;. லூக்.3:4,6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள். அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

‘மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது”;.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  3:1-12

அக்காலத்தில்

அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து,  ‘மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்று பறைசாற்றி வந்தார்.

இவரைக் குறித்தே, ‘பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள். அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார். தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார். வெட்டுக் கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தார்கள்.

பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, ‘விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?  நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை. என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்.

நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர்  என்னை விட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார். ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி ஆகியவற்றை வழங்கும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி ஆகியவற்றைப் பெற்று திருச்சபையை வழிநடாத்திடத் தேவையான வல்லமையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் விடுவிக்கும் தந்தையே இறைவா!  எங்கள் அனைவரை யும் தீமையிலிருந்து விடுவித்து, நாம் மனம் மாறி அதற்கேற்ற செயல்களைச் செய்து அன்புச் சமூகமாக வாழ  எமக்கு அருள்; தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. நீதியின் தந்தையே தந்தையே இறைவா! நாடுகளை ஆழ்வோருக்கும், மற்றும் பல்வேறு பொறுப்புக்களிலுள்ள அனைவருக்கும் நீதியோடும், உண்மையோடும் செயற்படும் ஆற்றலை அளியும். அவர்களிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர்கள் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக வாழ  அருள் அளித்திட  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்ய வல்லவரான தந்தையே இறைவா! குழந்தைகளின்றி வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி அவர்களுடைய ஏக்கத்தை நீக்கி குழந்தை என்னும் ஆசீர்வாதத்தை அவர்களுக்கு அளித்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்  2nd Sunday of Advent 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *