வரலாற்றுச் சிறப்பு மிக்க தள்ளாடி தூய அந்தோனியார் திருத்தலத் திருவிழா இன்று

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கின் அருட்பணிப் பரப்பெல்லைக்குள் அமைந்துள்ள, வரலாற்றுச் சிறப்பு மிக்க தள்ளாடி தூய அந்தோனியார் திருத்தலத் திருவிழா இன்று 13.06.2018 புதன்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஒன்பது நாட்கள் ஆயத்த வழிபாடுகளின் பின்னர், நேற்று 12.06.2016 செவ்வாயக் கிழமை மாலைப் புகழ் ஆராதனையும், இன்று திருவிழாத் திருப்பலியும் இடம் பெற்றன. மேலும் அறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தள்ளாடி தூய அந்தோனியார் திருத்தலத் திருவிழா இன்று

ஜுன்:13 – புனித பதுவை அந்தோனியார்

ஜுன்:13
புனித பதுவை அந்தோனியார்
மறைவல்லுனர் – (கி.பி.1195-1231)

 

போர்த்துக்கல் நாட்டில் லிஸ்பன் நகரில் பிறந்த இவர் தம் இறுதி நாள்களை இத்தாலி நாட்டில் பதுவை நகரில் செலவழித்ததாலும் இவரது கல்லறை இங்கே இருப்பதாலும் இவர் பதுவை அந்தோனியார் என்று அழைக்கப்படுகின்றார். இவரது திருமுழுக்குப் பெயர் பெர்டினான்ட். இவர் கப்புச்சின் சபையில் சேர்ந்த போது இவருக்கு முன்னோடியாக விளங்கிய தவ முனிவர் (பெரிய) அந்தோனியாரின் பெயராகத் தமது பெயரை மாற்றிக் கொண்டார்.

பிரபு குலத்தில் தோன்றிய இவர் 15 வயதில் அகஸ்டினியன் துறவியானார். 8 ஆண்டுகள் கொயிம்ப்ராவில் தவ முயற்சிகளிலும் மறைக்கல்வி கற்றுக் கொள்வதிலும் செலவழித்தார். கி.பி.1220ல் மொரோக்கோவில் கிறிஸ்துவுக்காக குருதி சிந்தி உயிர் துறந்த பிரான்சிஸ்கன் துறவிகளின் உடல்களை டான்பேட்ரோ கொண்டு வந்ததை புனிதர் பார்த்தார்.

பார்த்த பிறகு அவருக்குள் தாமும் போய் இயேசுவுக்காக குருதி சிந்த வேண்டும் என்ற தணியாத தாகம் ஏற்படவே தற்செயலாக அவரது துறவு மடத்திற்கு வந்த கப்புச்சின் சபையாரிடம் தம்மை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சினார். கி.பி.1221ல் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

மொரோக்கோவுக்கு புறப்படத் தம்மை தயாரித்துக் கொண்டார். புறப்படுமுன் கொடிய நோயினால் தாக்கப்பட்டு ஜரோப்பாவுக்கு திரும்பிவிட முயன்றார். எதிர்மாறாக சிசிலியில் மெசினா நகருக்கு கப்பல் போய்ச்சேர்ந்தது. நேரே அசிசி நகரை அடைந்தார். அப்போது ஃபோர்லி என்ற இடத்தில் ஒரு குருப்பட்டம் நிகழ எல்லாம் தயார் நிலையிலிருந்தது. விழா மறையுரை ஆற்ற ஒப்புக் கொண்டிருந்த டொமினிக்கன் சபைத் துறவி வர இயலாத நிலை ஏற்ப்பட்டது.

மறையுரை ஆற்றும்படி நம் புனிதரைக் கேட்டுக் கொண்டனர். அவர் இசைந்தார். ஆனால் பேசத் தொடங்கியதும் அவரது திறமை ஆழமான மறைநூல் அறிவு, நாவன்மை, மக்களின் நெஞ்சங்களை மேலே எழுப்பும் ஆற்றல் அத்தனையும் கேட்டவர் யாவரையும் ஆழ்ந்த வியப்பில் ஆழ்த்தின.

இதை நேரில் பார்த்த சபைத் தலைவர் லாம்பர்டி பகுதி முழுவதிலும் மறையுரை ஆற்றும் பணிப்பொறுப்பை அவரிடம் அளித்தார். இறையியலும் அவர் துறவிகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியதாயிற்று. பாவிகள் நூற்றுக் கணக்கில் வந்து அவரிடம் அடைக்கலம் அடைந்தனர். பாறை மனம் கொண்ட பாவிகள் ஞான வாழ்வில் அக்கறை காட்டாதவர் யாவரும் அவரை அனுகிய வண்ணம் இருந்தனர்.

புனித அசிசியாரின் இறப்புக்குப் பின் அந்தோனியார் இத்தாலிக்கு வரவழைக்கப்பட்டார். அது முதல் இறுதி நாள்வரை பதுவையில் அவர் தங்கினார். ஒரு காட்டுப் பகுதியில் தங்கி கி.பி.1231ல் தொடர்ச்சியாக மறையுரை ஆற்றி வந்தார். இதனிடையில் இவர் முற்றிலும் உடல் வலிமையிழந்து காணப்பட்டார். பதுவை நகருக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் அனைத்து அருட்சாதனங்களையும் பெற்றவராக புனிதராக காலஞ் சென்றார். அப்போது இவருக்கு வயது 36. (ஜுன்:13, 1231.)

இறந்த மறு ஆண்டே இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. கி.பி.1946ல் திருத்தந்தை 12ம் பத்திநாதர் மறைவல்லுநர் பட்டமளித்து இவரை பெருமைப்படுத்தினார். இன்று திருச்சபையில் இவரை நினைவு கூர்வதற்கு முதன்மையான காரணம் ஏழைகளின் மீது இவர் கொண்டிருந்த பரிவிரக்கம். இவர் பெயரால் இன்றும் ரொட்டிகள் ஆலய வளாகங்களில் ஏழைகளுக்கு அளிக்கப்படும் வழக்கத்தை நாம் பார்க்கிறோம். இழந்த பொருட்களை கண்டுபிடிக்க இவரின் உதவியை மக்கள் நாடுகின்றதைப் பார்க்கின்றோம். பல புதுமைகள் அன்றும் இன்றும் நடைபெறுவதைக் கானும் போது மிக வியப்பாக இருக்கிறது.

இப்புனிதரின் பெயர் கொண்டுள்ள ஆலயங்களில் சமய பாகுபாடற்ற முறையில் இந்துக்களும், முஸ்லீம்களும் பல்லாயிரக்கணக்கில் வருகின்றனர். திருமணத்தை நல்ல முறையில் நடத்திக் கொடுக்க, பிள்ளை வரம் பெற்றுத்தர, காணாமற்போனதைக் கண்டுபிடிக்க, பேய்பிடித்தவரிடம் பேயின் விலங்குகளை அறுத்தெறிய, இவ்வாறு பல நன்மைகளை எதிர்பார்த்து அவற்றைப் பெற்று மகிழ்ச்சியடைகின்ற ஆயிரக்கணக்கான பக்தர்களை நாம் இன்றும் காணலாம். இதற்கு இறைவனுடன் இணைந்து வாழ்ந்து மேலுலகில் இறைவனிடம் ஆற்றல் பெற்றவர் என்ற காரணம் தவிர வேறு எதையும் சொல்வது முற்றிலும் தவறாகும்.
ஆனால் அதேவேளையில் இப்புனிதர் மட்டில் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்கள் அல்லாதவரும் கொண்டிருக்கும் மூடநம்பிக்கை எதுவாயினும் அதைச் சுட்டிக்காட்டவும் நாம் தயங்கக் கூடாது.

பொதுக்காலம் 10 வாரம் புதன்

முதல் வாசகம்

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 18: 20-39

அந்நாள்களில் ஆகாபு இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் அழைத்தான். பொய் வாக்கினரையும் கர்மேல் மலையில் ஒன்று திரட்டினான். எலியா, மக்கள் அனைவர்முன் சென்று, எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் கடவுள் என்றால், அவரைப் பின்பற்றுங்கள்! பாகால்தான் என்றால், அவன் பின்னே செல்லுங்கள்! அப்பொழுது எலியா மக்களிடம், ஆண்டவரின் திருவாக்கினருள் நான் ஒருவன்தான் எஞ்சியிருக்கிறேன்! பாகாலின் பொய்வாக்கினரோ நானூற்றைம்பது பேர் இருக்கின்றனர். இரண்டு காளைகளை எங்களிடம் கொண்டு வாருங்கள். அவர்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்து, அதைத் துண்டு துண்டாக வெட்டி, விறகின் மேல் வைக்கட்டும்; ஆனால் நெருப்பு வைக்கலாகாது. மற்றக் காளையை நான் தயார் செய்து விறகின் மேல் வைப்பேன்; நானும் நெருப்பு வைக்க மாட்டேன். நீங்கள் உங்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அழையுங்கள். நானோ ஆண்டவரின் பெயரைச் சொல்லி அழைப்பேன். அதற்கு நெருப்பு மூலம் பதிலளிக்கும் கடவுளே உண்மைக் கடவுள் என்றார். மக்கள் அனைவரும் பதில் மொழியாக, நீர் சொல்வது சரியே என்றனர். பிறகு எலியா பாகாலின் பொய்வாக்கினரிடம், நீங்கள் அதிகம் பேராய் இருப்பதால் முதலில் நீங்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யுங்கள்; ஆனால் நெருப்பு மூட்டாதீர்கள் என்றார். அவ்வாறே அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையைக் கொண்டு வந்து தயார் செய்த பின், காலை முதல் நண்பகல் வரை பாகாலின் பெயரைக் கூப்பிட்டு, பாகாலே! பதில் தாரும் என்று கத்தினர். ஆனால் எக்குரலும் கேட்க வில்லை; எப்பதிலும் வரவில்லை. எனவே அவர்கள் தாங்கள் கட்டிய பலிபீடத்தைச் சுற்றி ஆடலாயினர். நண்பகலாயிற்று, எலியா அவர்களைக் கேலி செய்து, இன்னும் உரத்த குரலில் கத்துங்கள். அவன் ஒரு தெய்வம்! ஒரு வேளை அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கலாம்! அல்லது ஒதுக்குப்புறம் போயிருக்கலாம்! அல்லது பயணம் செய்து கொண்டிருக்கலாம்! அல்லது தூங்கிக் கொண்டிருக்கலாம்; அவன் விழித்தெழ வேண்டியிருக்கும்! என்றார். எனவே அவர்கள் இன்னும் உரத்த குரலில் கத்தினர். தங்கள் வழக்கப்படி வாளினாலும் வேலினாலும், இரத்தம் கொட்டும் வரை, தங்களையே கீறிக் கிழித்துக் கொண்டார்கள். பிற்பகல் ஆயிற்று. அவர்கள் மாலைப் பலி செலுத்தும் நேரம்வரை தொடர்ந்து உளறிக் கொண்டிருந்தார்கள். ஆயினும் எக்குரலும் கேட்க வில்லை. எப்பதிலும் வரவில்லை. கவனிப்பார் யாருமில்லை. அப்போது எலியா எல்லா மக்களையும் நோக்கி, என் அருகில் வாருங்கள் என்றார். மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர். உடனே எலியா அங்கே இடிந்து கிடந்த ஆண்டவரது பலிபீடத்தைச் செப்பனிட்டார். உன் பெயர் இஸ்ரயேல் என்று ஆண்டவர் யாக்கோபுக்கு உரைத்திருந்ததன் பொருட்டு, அவர் வழிவந்த குலங்களின் எண்ணிக்கைப்படி எலியா பன்னிரு கற்களை எடுத்தார். அக்கற்களைக் கொண்டு ஆண்டவர் பெயரில் ஒரு பலி பீடத்தைக் கட்டி, அப்பலி பீடத்தைச் சுற்றிலும் இரண்டு உழவுகால் அகலம் உள்ள வாய்க்காலை வெட்டினார். அதன்பின் விறகுக் கட்டைகளை அடுக்கி, காளையைத் துண்டு துண்டாக வெட்டி, அவற்றின் மேல் வைத்தார். நான்கு குடங்கள் நிறைய தண்ணீர் கொண்டு வந்து, எரிபலியின் மேலும் விறகுக் கட்டைகளின் மேலும் ஊற்றுங்கள் என்றார். அவர் இரண்டாம் முறையும் செய்யுங்கள் என்றார். அவர்கள் இரண்டாம் முறையும் அவ்வாறே செய்தனர். அவர் மூன்றாம் முறையும் செய்யுங்கள் என்றார். அவர்கள் மூன்றாம் முறையும் அப்படியே செய்தனர். எனவே தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது. மேலும் வாய்க்காலை அவர் தண்ணீரால் நிரப்பினார். மாலைப் பலி செலுத்தும் நேரமாயிற்று. இறைவாக்கினர் எலியா பலிபீடத்தின் அருகில் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் என்பவர்களின் கடவுளாகிய ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுள் நீரே என்றும், இவற்றையெல்லாம் நான் உம் வாக்கின்படியே செய்தேன் என்றும் இன்று விளங்கச் செய்தருளும். நீரே கடவுளாகிய ஆண்டவர் என்றும் நீரே இம்மக்களின் மனத்தை மீண்டும் மாற்றுவீர் என்றும் இம்மக்கள் அறியும்படி எனக்குப் பதில் தாரும்! ஆண்டவரே! எனக்குப் பதில் தாரும்! என்றார். உடனே ஆண்டவரின் நெருப்பு கீழே இறங்கி அந்த எரிபலியையும் விறகுக் கட்டைகளையும், கற்களையும், மணலையும் சுட்டெரித்து வாய்க்கால் நீரையும் வற்றச் செய்தது. இதைக் கண்டவுடன் மக்கள் அனைவரும் முகங்குப்புற விழுந்து, ஆண்டவரே கடவுள்! ஆண்டவரே கடவுள்! என்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 16: 1-2. 4. 5,8.

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்’ என்று சொன்னேன். பல்லவி

வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர் தங்கள் துன்பங்களைப் பெருக்கிக்கொள்வர்;
அவற்றுக்குச் செலுத்தப்படும் இரத்தப் பலிகளில் நான் கலந்துகொள்ளேன்;
அவற்றின் பெயரைக் கூட நாவினால் உச்சரியேன்.பல்லவி

ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்;
எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்;
அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;
உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு;
உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.