மாணவத் தலைவிகளுக்கான பணி நியமமன நிகழ்வு

மன்னார் தூய சவேரியார் பெண்கள் கல்லூரி ( தேசிய பாடசாலை) புதிய மாணவத் தலைவிகளுக்கான பணி நியமமன நிகழ்வு நேற்று (07.06.2018) வியாழக்கிழமை கல்லூரியின் அதிபர்; அருட்சகோதரி கில்டா சிங்கராயர் அவர்களின் தலைமையின் கீழ் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது. மேலும் அறிய மாணவத் தலைவிகளுக்கான பணி நியமமன நிகழ்வு

ஜீன்:11 – புனித பர்னபா

ஜீன்:11
புனித பர்னபா
திருத்தூதர், மறைசாட்சி

இவர் 12 திருத்தூதர்களில் ஒருவர் அல்லர். இருப்பினும் தொடக்கத்திருச்சபையின் அருட்தந்தையரும் ஏன் நற்செய்தி லூக்காவும் கூட, இவரது அப்போஸ்தலிக்க ஆர்வம் நிறைந்த பணிகளின் பொருட்டு திருத்தூதர் என இவரை அழைக்கிறார்கள். சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். திருத்தூதர்கள் இவருக்கு ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர் என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயர் கொடுத்திருந்தார்கள். அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு வந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார். (தி.ப.4:36-37).

3 ஆண்டுகளுக்குப் பின்னர் மனந்திரும்பிய பவுல் யெருசலேமுக்கு வருகின்றார். சீடர்கள் அவர் மனந்திரும்பியவர் என ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இவ்வேளையில்தான் பர்னபா அவருக்கு துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார்.(தி.ப.9:27)

பின்னர் அந்தியோக் நகரில் திருத்தூதர் பணியின் மூலம் பலரும் மனந்திரும்பினர் என்பதனால் யெருசலேம் நகரில் இருந்து இந்தப் புதுக்கிறிஸ்தவர்களை ஊக்குவிக்க ஒருவரை அனுப்பத் தீர்மானித்தனர். நல்லவர் தூயஆவியால் நிரம்பப் பெற்றவர். ஆழமான விசுவாசம் கொண்டவர் பர்னபா என்று சொல்லி அவரை அனுப்பினர். அவர் அங்கு போய் நேரில் கண்டதும் ஒரே இன்பமும் மகிழ்ச்சியும் கொண்டவராய் பவுலின் ஒத்துழைப்பைப் பெற தார்சிஸ் நகர் சென்று அவரை அழைத்து வந்தார்.

யூதாவிலும் எருசலேம் எங்கும் கடும் பஞ்சம் உண்டாகவே, அந்தியோக்கியத் திருச்சபையிடம் பொருள் உதவி பெற்று பர்னபா சவுல் மூலம் யெருசலேமுக்கு அனுப்பி வைத்தார். லிஸ்திராவில் ஊனமுள்ள ஒருவரை இவர் இயேசுவின் பெயரால் புதுமையாகக் காலூன்றி நடக்க வைத்தார். இதைக் கண்டு வியப்படைந்த கூட்டத்தினர் இவர்கள் இருவரையும் தெய்வங்களாக நினைத்துப் பலியிட முயன்றனர். இது நடைபெற்று முடிந்தவுடன் யூதர்கள் அதே மனிதர்களை பர்னபா, பவுலுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டிவிடவே அவர்கள் கல்லால் எறியப்பட்டார்கள். (தி.பா.14:18-20)

புpன்னர் நற்செய்தியாளர் மாற்கை அழைத்துக் கொண்டு பர்னபாவும் பவுலும் சைப்ரஸ் சென்றார்கள். அங்கு போதித்த பின் பம்பிலியா நோக்கிப் புறப்படும் போது மாற்கு அவர்களுடன் சேர்ந்து போகவில்லை. பவுல் இதனால் வருத்தமுற்றார். இதன் பின்னர் அந்தியோக்கியாவில் விருத்தசேதனம் பற்றிக் கடுமையான கருத்து மோதல் எழுந்தது. இதைத் தீர்த்து வைக்க யெருசலேம் முதல் பொதுச் சங்கம் கூடியது. பர்னபா கூட யூதர்கள் விரித்த வலையில் விழுந்துவிட்டாரே என்று வருத்தப்பட்டார் பவுல். இதனையடுத்து இன்னொரு கருத்து மோதல் பர்னபாவுக்கும் பவுலுக்குமிடையே எழுந்தது. ஏற்கனவே திருச்சபை தொடங்கப்பட்ட இடங்களுக்கு சென்று அவ்விருவரும் பார்வையிட திட்டம் தீட்டிய பொழுது மாற்கையும் அழைத்துச் செல்வோம் என்று பர்னபா சொல்ல பவுல் இசையவில்லை. விளைவு பவுல் தனியே சென்று விட்டார். பர்னபா மாற்குடன் சைப்பிரஸ் சென்றார். இங்கிருந்து பணியாற்றிய பர்னபாவின் முடிவு என்னவென்று திட்டவட்டமாக கூற இயலாது. கி.பி.61ல் உரோமையில் பவுல் சிறைக் கைதியாக இருக்கும் போது மாற்கை தம்மிடம் அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டார். அவ்வேளையில் பர்னபா கல்லால் எறிந்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவருடைய திருப்பண்டங்கள் சைப்ரஸில் சலாமிசுக்கு அருகில் கிடைத்தன என்றும் அந்தக் கல்லறையில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட மத்தேயுவின் நற்செய்தி கிடைத்ததாகவும் நம்பப்படுகிறது.

இயேசுவின் திருஇதயம் பெருவிழா

முதல் வாசகம்

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 11: 1,3-4,8-9

ஆண்டவர் கூறியது: இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன் மேல் அன்புகூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். எப்ராயிமுக்கு நடை பயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள். பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன். என் உள்ளம் அதை வெறுத்து ஒதுக்குகின்றது, என் இரக்கம் பொங்கி வழிகின்றது. என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்; எப்ராயிமை அழிக்கத் திரும்பி வரமாட்டேன்; நான் இறைவன், வெறும் மனிதனல்ல; நானே உங்கள் நடுவில் இருக்கும் தூயவர், ஆதலால், நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : எசா 12: 2-3. 4. 5-6

பல்லவி: மீட்பருளும் ஊற்றினின்று அகமகிழ்வோடு முகந்து கொள்வீர்.

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்;
ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். பல்லவி

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;
மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி

ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்;
அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக. சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்;
இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-12, 14-19

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு அறிவிக்கவும், எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்குள் ஊழிகாலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென யாவருக்கும் தெளிவுபடுத்தவும், இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையனாகிய எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பல வகையில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான் வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு கடவுள் ஊழிகாலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார். கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது. இதன் காரணமாக, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன். அவருடைய அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூய ஆவி வழியாகத் தந்தருள்வாராக! நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! இறை மக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன் மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்திவாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 31-37

அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள். ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்துபோயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன. இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்பவேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார். “எந்த எலும்பும் முறிபடாது” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் “தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்று நோக்குவார்கள்” என்றும் மறைநூல் கூறுகிறது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி