ஜீன்:11 – புனித பர்னபா

ஜீன்:11
புனித பர்னபா
திருத்தூதர், மறைசாட்சி

இவர் 12 திருத்தூதர்களில் ஒருவர் அல்லர். இருப்பினும் தொடக்கத்திருச்சபையின் அருட்தந்தையரும் ஏன் நற்செய்தி லூக்காவும் கூட, இவரது அப்போஸ்தலிக்க ஆர்வம் நிறைந்த பணிகளின் பொருட்டு திருத்தூதர் என இவரை அழைக்கிறார்கள். சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். திருத்தூதர்கள் இவருக்கு ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர் என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயர் கொடுத்திருந்தார்கள். அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு வந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார். (தி.ப.4:36-37).

3 ஆண்டுகளுக்குப் பின்னர் மனந்திரும்பிய பவுல் யெருசலேமுக்கு வருகின்றார். சீடர்கள் அவர் மனந்திரும்பியவர் என ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இவ்வேளையில்தான் பர்னபா அவருக்கு துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார்.(தி.ப.9:27)

பின்னர் அந்தியோக் நகரில் திருத்தூதர் பணியின் மூலம் பலரும் மனந்திரும்பினர் என்பதனால் யெருசலேம் நகரில் இருந்து இந்தப் புதுக்கிறிஸ்தவர்களை ஊக்குவிக்க ஒருவரை அனுப்பத் தீர்மானித்தனர். நல்லவர் தூயஆவியால் நிரம்பப் பெற்றவர். ஆழமான விசுவாசம் கொண்டவர் பர்னபா என்று சொல்லி அவரை அனுப்பினர். அவர் அங்கு போய் நேரில் கண்டதும் ஒரே இன்பமும் மகிழ்ச்சியும் கொண்டவராய் பவுலின் ஒத்துழைப்பைப் பெற தார்சிஸ் நகர் சென்று அவரை அழைத்து வந்தார்.

யூதாவிலும் எருசலேம் எங்கும் கடும் பஞ்சம் உண்டாகவே, அந்தியோக்கியத் திருச்சபையிடம் பொருள் உதவி பெற்று பர்னபா சவுல் மூலம் யெருசலேமுக்கு அனுப்பி வைத்தார். லிஸ்திராவில் ஊனமுள்ள ஒருவரை இவர் இயேசுவின் பெயரால் புதுமையாகக் காலூன்றி நடக்க வைத்தார். இதைக் கண்டு வியப்படைந்த கூட்டத்தினர் இவர்கள் இருவரையும் தெய்வங்களாக நினைத்துப் பலியிட முயன்றனர். இது நடைபெற்று முடிந்தவுடன் யூதர்கள் அதே மனிதர்களை பர்னபா, பவுலுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டிவிடவே அவர்கள் கல்லால் எறியப்பட்டார்கள். (தி.பா.14:18-20)

புpன்னர் நற்செய்தியாளர் மாற்கை அழைத்துக் கொண்டு பர்னபாவும் பவுலும் சைப்ரஸ் சென்றார்கள். அங்கு போதித்த பின் பம்பிலியா நோக்கிப் புறப்படும் போது மாற்கு அவர்களுடன் சேர்ந்து போகவில்லை. பவுல் இதனால் வருத்தமுற்றார். இதன் பின்னர் அந்தியோக்கியாவில் விருத்தசேதனம் பற்றிக் கடுமையான கருத்து மோதல் எழுந்தது. இதைத் தீர்த்து வைக்க யெருசலேம் முதல் பொதுச் சங்கம் கூடியது. பர்னபா கூட யூதர்கள் விரித்த வலையில் விழுந்துவிட்டாரே என்று வருத்தப்பட்டார் பவுல். இதனையடுத்து இன்னொரு கருத்து மோதல் பர்னபாவுக்கும் பவுலுக்குமிடையே எழுந்தது. ஏற்கனவே திருச்சபை தொடங்கப்பட்ட இடங்களுக்கு சென்று அவ்விருவரும் பார்வையிட திட்டம் தீட்டிய பொழுது மாற்கையும் அழைத்துச் செல்வோம் என்று பர்னபா சொல்ல பவுல் இசையவில்லை. விளைவு பவுல் தனியே சென்று விட்டார். பர்னபா மாற்குடன் சைப்பிரஸ் சென்றார். இங்கிருந்து பணியாற்றிய பர்னபாவின் முடிவு என்னவென்று திட்டவட்டமாக கூற இயலாது. கி.பி.61ல் உரோமையில் பவுல் சிறைக் கைதியாக இருக்கும் போது மாற்கை தம்மிடம் அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டார். அவ்வேளையில் பர்னபா கல்லால் எறிந்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவருடைய திருப்பண்டங்கள் சைப்ரஸில் சலாமிசுக்கு அருகில் கிடைத்தன என்றும் அந்தக் கல்லறையில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட மத்தேயுவின் நற்செய்தி கிடைத்ததாகவும் நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *