ஜீன்:06 புனித நார்பெட்

ஜீன்:06
புனித நார்பெட்
ஆயர் – (கி.பி. 1080-1134)

இவர் அரசகுலத்தில் தோன்றியவர். ஆழமான அறிவுத்திறமையுடையவர். ஆழ்ந்த தெய்வபக்தியின் காரணமாக இளமையிலே குருத்துவத்தை இவர் விரும்பினார். ஆனால் இளைஞரானதும் அரண்மனையில் பிரபுக்கள் போன்ற உயர்ந்த குலத்தாரோடு சேர்ந்து உலக இன்பங்களை நாடியதால் குருவாகும் ஆசை குலைந்துவிட்டது. ஒருமுறை இவர் குதிரையின் மீது ஏறி வேறு ஊருக்குச் செல்கையில் எதிர்பாராமால் புயல்காற்று அடித்து இடி மின்னல் உண்டானது. இவருக்கு முன் இடிவிழவே குதிரை மிரண்டு அவரைக் கீழே தள்ளியது. ஆண்டவரே நான் என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்? என்று இவர் அலறினார். உடனே விடை கிடைத்தது. தீமையை நீக்கு. நன்மை செய்யப் புறப்படு. அமைதியைத் தேடி கண்டுபிடி என்ற குரல் கேட்டது. அதன்பின் புனித பவுலைப்போல் இவரும் மனந்திரும்பினார். தம்முடைய வாழ்நாள்களை தேவ ஊழியத்தில் செலவழிக்க உறுதி பூண்டார்.

இறையியல் கற்று குருப்பட்டம் பெற்றார். தமக்குரிய செல்வங்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு அரண்மனையை விட்டு வெளியேறினார். கடுந்தவம் புரிந்து நாள்தோறும் ஒருமுறை மட்டும் உணவருந்தி புனிதராய் வாழ்ந்தார். இறை ஏவதலின்படி ஒரு புதுத்துறவற சபையை நிறுவினார். புனித நார்பர்ட் ஆன்ட்வெர்ப் நகரின் அப்போஸ்தலர் என அழைக்கப்படுகிறார். ஏனெனில் இந்த நகர மக்கள் பலர் ஒரு தவறான கொள்கையை கடைப்பிடித்து வருவதைக் கண்ட இவர் தமது அரும்பெரும் முயற்சியால் அவர்களை நல்வழிப்படுத்தினார். அதன்பின் இவர் மாக்டபர்க் நகரின் பேராயராக நியமனம் பெற்றார். அங்கே தோன்றியிருந்த பல ஊழல்களை நீக்கினார்.

ஜேர்மன் நாட்டு அரசரான லோத்தேர் என்பவருக்கு ஆலோசகராக பணியாற்றினார். மாக்டபர்க் நகருக்கு பேராயராக நியமிக்கப்பட்ட அவர் அந்நகருக்குள் முதன்முறையாக வந்தபொழுது தாழ்ச்சியின் பொருட்டு மிதியடியின்றி பேராலயத்திற்குள் நுழைந்தார். பின்னர் பேராயரின் இல்லத்திற்குள் நுழைய வந்த பொழுது வாயிற்காப்போன் இவர் யாரென்று புரிந்து கொள்ளாத காரணத்தால் இசைவுதர மறுத்தான். ஏனெனில் ஓர் ஏழையைப் போல் இவர் தோற்றமளித்தார். அப்போது வாயிற்காப்போனை நோக்கி உண்மையில் நீ தான் என்னைப் புரிந்து கொண்டாய். எனது நிலையை அறிந்து கொள்ளாதவர்கள்தான் என்னை பேராயர் பதவிக்கு உயர்த்தி இந்த இல்லத்திற்கு வர கட்டாயப்படுத்துகிறார்கள். நானோ தகுதியற்றவன். வறியவன். இப்பதவிக்கு சிறிதும் தகுதியற்றவன் என்றார். வாயிற்காப்போன் புனிதரிடம் மன்னிப்புக் கேட்டான். செக்கோஸ்லோவாக்கியா நாட்டினர் இவரை தங்கள் நாட்டின் பாதுகாவலராகத் தெரிந்துகொண்டுள்ளனர். இவர் ஏற்படுத்திய துறவறசபை நார்பெர்டைன் என்று அழைக்கப்படுகிறது. இவர்களின் தனிப்பெரும் பக்தி திவ்விய நற்கருணை நாதருக்கே உரியது. இப்பக்தியை இத்துறவற சபையை நிறுவிய புனிதரே கற்றுத் தந்துள்ளார். இவர் இறந்த மறு நூற்றாண்டில் இவரது சபையைச் சார்ந்த மடங்கள் 500 ஆக காட்சியளித்தன. பெண்களுக்கும் நார்பெர்டைன் சபை தோன்றியுள்ளது. 3ம் சபையினரும் உள்ளனர். 53 வயதில் காலஞ்சென்றார்.