பொதுக்காலம் பன்னிரெண்டாம் ஞாயிறு.
2026.06.21
திருப்பலி முன்னுரை.
ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.
இறை இயேசுவில் அன்புமிக்க இறை உறவுகளே! வலிமை வாய்ந்த வீரரைப் போல நம்மோடு இருக்கின்றவரும், நேர்மையாளரைச் சோதித்து அறிபவரும், உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவருமான நம் இறைத் தந்தையின் வலிமைமிகு திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி, ஆண்டின் பொதுக்காலம் 12ம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடனும், மகிழ்வுடனும் வவேற்று நிற்கின்றோம்.
ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். என்னும் இன்றைய நாளின் இறைவார்த்தைகள் வழியாக எதிரொலிக்கும் இறைவனின் குரல், இறைமக்களாகிய நாம் இறையச்சத்தோடு, இறைவனில் முழுமையான நம்பிக்கை கொண்டு வாழவேண்டும் என்ற உன்னதமான ஒரு செய்தியை நமக்குத் தந்து நிற்கின்றது.
கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. என்னும் இறைவார்த்தைகள், இறைவனை நம்புவோர் ஒருபொழுதும் தோல்வி அடைவதும் இல்லை ஏமாற்றம் அடைவதும் இல்லை என்ற மாபெரும் உண்மையை இங்கு தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
எனவே, இறைவன் மீது ஆழமாக நம்பிக்கைகொண்டு வாழும் மனப் பக்குவம் நமக்குக் கிடைக்கத் தொடரும் திருப்பலியில் பக்தியோடு பங்கேற்று மன்றாடுவோம்.
முதல் வாசகம்
கடவுள் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13
எரேமியா கூறியது:
‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்; ‘பழி சுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்’ என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; ‘ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றிகொண்டு அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம்’ என்கிறார்கள்.
ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது.
படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரைச் சோதித்து அறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே. நீர் என் எதிரிகளைப் பழி வாங்குவதை நான் காணவேண்டும்; ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.
ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 69: 7-9. 13,16. 32-34
பல்லவி: கடவுளே! உமது பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும்.
உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. – பல்லவி:
ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது. உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். – பல்லவி:
எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். – பல்லவி:
இரண்டாம் வாசகம்
குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 12-15
சகோதரர் சகோதரிகளே,
ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது. அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.
திருச்சட்டம் தரப்படும் முன்பும் உலகில் பாவம் இருந்தது. ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும், சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று. இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.
ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 15: 26-27
அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.
மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 26-33
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது:“உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை. அறிய முடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல் தளத்திலிருந்து அறிவியுங்கள்.
ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பது இல்லையா? எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடி எல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.
மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக் கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.
1.வலிமை வாய்ந்த வீரரைப் போல எம்மோடு இருக்கின்றவரான தந்தையே இறைவா!
எமது திருத்தந்தை ஆயர்கள்,குருக்கள், துறவிகள் அனைவரும், நல்ல மேய்ப்பர்களாகவும், வழிகாட்டிகளாகவும் வாழத் தடையாக இருக்கும்: பயம், விரக்தி, நம்பிக்கையின்மை, உலக ஆசைகள் என்னும் அழுக்குகளைக் கழுவி அவர்களை நம்பிக்கையின் வாழ்வுக்குள் அழைத்து, அன்புறவு வாழ்வில் அவர்கள் ஆர்வமுடையோராய் வாழ்வதற்கு வேண்டிய ஆற்றலை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2.உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரான தந்தையே இறைவா!
உமது மக்களாகிய நாங்கள் அனைவரும் சோம்பல், நம்பிக்கையற்ற தன்மை முதலியவற்றை ஒழத்துவிட்டு, போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாது, உம்முடைய இரக்கத்தில் மாத்திரம் நம்பிக்கை கொண்டு இறையச்சம் உடையவர்களாய் வாழுவதற்கு வேண்டிய சக்தியை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3.ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க் கின்ற தந்தையே இறைவா!
அலகையின் தந்திர வலையில் சிக்கிப் போதைப் பொருள் பாவனையினாலும், கலாச்சாரச் சீர்கேடுகளி னாலும், ஒழுக்க வாழ்விற்கு மாறான செயற்படுகளி னாலும், தவறான இலத்திரனியல் பொருட்களின் பாவனையினாலும் சிதைவடைந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து, இந்தத் தீமையின் பிடியிலிருநது அவர்களை விடுவித்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4.வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவிக்கின்றவரான தந்தையே இறைவா!
உலக நாடுகள் முழுவதிலும் விதைக்கப்பட்டுள்ள அநீதி. சுயநலம், பேரின்மீது பெருவிருப்பம், அடக்குமுறை போன்ற தீமைகளை வேரறுத்து அமைதி, விடுதலை, பிறர்நலம், உண்மை என்னும் விதைகளை விதைத்திட வேண்டுமென்றும், தற்போதைய காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அத்தனை தாக்கங்களிலிருந்தும் அனைத்து மக்களையும் பாதுகாத்திட் வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் 12th Ordinary Sunday 2026

