இலங்கை அரசின் கிறிஸ்தவ அமைச்சும், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஒவ்வொரு வருடமும் நடாத்தும் அரச நத்தார் கொண்டாட்டம் கிறிஸ்துவின் பிறப்பும், நத்தாரின் சிறப்பும் என்னும் தொனிப் பொருளில் இவ்வாண்டு மன்னார் நகரில் நடைபெற்றது.16.12.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு மன்னார் நகர சபை விளையாட்டுத் திடலில் இவ்விழா ஆரம்பமாகி நடைபெற்றது. மன்னார் மாவட்டச் செயலர் உயர்திரு மோகன் றாஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இவ் விழாவிற்கு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜானாதிபதி மேன்மை தங்கிய மைத்திரிபால சிறிசேன அவர்கள் முதன்மை விருந்தினராகவும், இலங்கைக்கான திருத்தந்தையின் வத்திக்கான் பிரதிநிதி அதி மேன்மைமிகு பியர் நோவன் வான் ரொட் ஆண்டகையும், இலங்கை ஆயர் பேரவையின் தலைவர் பேரருட்கலாநிதி வின்ஸ்ரன் பெனாண்டோ ஆண்டகை அவர்களும், மன்னார் மறைமாவட்ட ஆயர்
பேரருட்கலாநிதி.பி.ல.இம்மானுவேல் பொனாண்டோ ஆண்டகை அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகவும் பிரசன்னமாகியிருந்தனர்.இவர்களோடு மன்னார் மாவட்டத்திலுள்ள இந்து, முஸ்லிம்,பௌத்த சமயத் தலைவர்களும் வருகை தந்திருந்தனர்.
மேலும் இவ் விழாவில் வடமாகாண ஆழுனர் உயர்திரு றெஜினோல்ட் கூறே, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினாகள்; திரு.செல்வம் அடைக்கலநாதன், காதர், மஸ்தான் வடமாகாண பிரதம செயலர் திரு.பத்திநாதன் மற்றும் அரச பணித்தளங்களின் உயர் நிலைத் தலைவர்கள், அருட்பணியாளர்கள், துறவிகள் எனப் பலர் வருகைதந்திருந்தனர். சுமார் 3500ம் மேற்பட்ட மக்கள் இவ் விழாவில் கலந்து கொண்டனர்.
கிறிஸ்து பிறப்பு விழாவினை மையப்படுத்திய சிறப்பான பல கலைநிகழ்வுகளை மன்னார் மறைமாவட்ட சமூக அருட்பணி மையம் கலையருவி மன்னார் மறைமாவட்டப் பங்குகளின் அனுசரணையோடு ஒழுங்குபடுத்தி வழங்கியது. அனைத்துப் பணிகளையும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் இயக்குனர் திருமதி. சத்துரி பின்ரோ அவர்கள் இணைத்து நெறிப்படுத்தினார்.






















































































































































































































