பிப்ரவரி:08
புனித ஜெரோம் எமிலியானி
குரு-(கி.பி.1481-1537)
இவர் பிரபு குலத்தில் தோன்றியவர். படையில் சேர்ந்து பணியாற்றிய பின் த்ரவிதோ நகரின் ஆளுநராக நியமனம் பெற்றிருந்தார். அங்கு நடந்த போரில் கைதியாக்கப்பட்டு விலங்கிடப்பட்டார். சிறையில் நடந்த இன்னல்களை மிகுந்த பொறுமையுடன் ஏற்றுக் கொண்டார். இவர் தேவ தாயாரின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். சிறையில் நாட்களை செபத் தியானத்தில் செலவழித்தார். சிறையில் மரியன்னை இவருக்கு காட்சியளித்து இவருடைய விலங்குகளை உடைத்து இவரை சிறையில் இருந்து விடுவித்தார். எமிலியான் அந்த விலங்கை அந்தத் தாயின் பீடத்தில் தொங்கவிட்டு தேவ ஊழியத்தில் தம் வாழ்நாட்களை செலவழிக்க முடிவு செய்தார். அக்காலத்தில் ஏற்பட்ட கொள்ளை நோய்களால் வருந்துவோரைச் சந்தித்து தம்மாலியன்ற உதவியளித்தார்.
கொள்ளை நோயினிமித்தம் கைவிடப்பட்ட ஆதரவற்ற பிள்ளைகளைச் சேர்த்து அவர்களுக்கு தொண்டு புரிந்தார். இவர்களைப் பேணுவதற்காகவே ஒரு துறவற சபையை நிறுவினார். பல நகரங்களிலும் இருந்த பிள்ளைகளை ஒன்று சேர்த்து பேணி வருவது இந்த சபையினரின் முதன்மையான குறிக்கோளாயிருந்தது. 1537ம் ஆண்டில் ஒரு முறை புனித தொற்று நோயாளருக்கு பணிவிடை செய்து வருகையில் தாமும் அதே நோயால் தாக்கப்பட்டு மண்ணக வாழ்வை முடித்துக் கொண்டு விண்ணக வாழ்வை பெற்றுக் கொண்டார். 9ம் பத்திநாதர் இவரை ஆதரவற்ற ஏழைகளுக்கு பாதுகாவலராக அறிவித்தார்.