ஜனவரி:22
புனித வின்சென்ட்
தியாக்கோன்-(கி.பி.304)
ஸ்பெயின் இவரது தாய் நாடு. சரகோசாவில் இவர் வேதசாட்சியாகி விண்ணகம் அடைந்த போது இவர் பட்ட பாடுகளைப் பற்றிய குறிப்புக்கள் தம்மிடம் இருந்தன எனப் புனித அகஸ்டின் ஒரு மறையுரையில் குறிப்பிடுகிறார். சரகோசா நகரின் ஆயராக இருந்த வலெரியஸ் என்பவர் வின்சென்டுக்கு தியாக்கோன் பட்டம் அளித்தார். இவர்களிருவரும் 303ம் ஆண்டு சிறையில் வைக்கப்பட்டனர். பட்டினியாக விடப்பட்டதுடன் வேதனைகளுக்கும் உள்ளானார்கள். ஆனால் விசுவாசத்தில் உறுதிப்பட்டனர். ஆயர் இதன் பின்னர் நாடு கடத்தப்பட்டார். தனிமையாக விடப்பட்ட வின்சன் மீது டேசியன் மன்னன் புலியெனெப் பாய்ந்தான். கொலைஞர் அவனை கீழே கிடத்தி அவரது கை, கால்களை பிணைத்திருந்த கயிறுகளுக்கு கம்பிகளை மாட்டி இழுத்தனர். அவரது கை, கால், மூட்டுக்கள் கழன்றன. மிகக் கொடுமையாக அடித்து உடலைக் கிழித்தனர். இரத்தம் தரையில் ஓடியது. இரும்புக் கட்டிலில் கிடத்தி அடியில் நெருப்பு மூட்டினர். வின்சென்ட் எதற்கும் அஞ்சவில்லை. தூய்மையற்ற சிறை அறை ஒன்றில் தூக்கியெறியப்பட்டார். அங்கே அவரது முகத்தில் தோன்றிய அருள் ஒளியைக் கண்ட காவலர் மனந்திரும்பினார். இங்ஙனம் அடைந்த வேதனைகளினால் இவர் மறைசாட்சியாக உயிர் நீத்தார்.