திருமுழுக்கு

திருச்சபை உறுப்பினரின் நுழை வாயிலாக அமையும் திருமுழுக்கு அருட்சாதனம், அதனோடு இணைந்த ஏனைய செயற்பாடுகள் பற்றி திருச்சபையின் ஒழுக்கக்கோவை அல்லது திருச் சபைச் சட்டம் என்ன சொல்கின்றது.

திருவருட்சாதனங்கள் – திருமுழுக்கு

திருவருட்ச்சாதனங்கள் பற்றி திருச்சபை சட்டநூலின் படிப்பினைகள்

நூல் – 4

பகுதி 1

தலைப்பு 1

திருமுழுக்கு

திருச்சபை சட்டம் 849 அருளடையாளங்களின் நுழைவு வாயிலாகிய திருமுழுக்கு மீட்பிற்கு இன்றியமையாதது; இதை உண்மையாகவோ, குறைந்த அளவு விருப்பத்தின் மூலமாகவோ பெறவேண்டும். இதனால் மனிதர் பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்; இறைவனின் பிள்ளைகளாக மீண்டும் பிறக்கின்றனர்; அழியா முத்திரையால் கிறிஸ்துவின் சாயலைப் பெற்றுத் திருச்சபையில் ஓருடலாக இணைக்கப்படுகின்றனர். இத்திருமுழுக்கு உரிய வார்த்தைகளின் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி உண்மையான தண்ணீரில் கழுவப்படுவதால் மட்டுமே செல்லத்தக்க விதத்தில் அளிக்கப்படுகிறது.

இயல் 1

திருமுழுக்குக் கொண்டாட்டம்

தி.ச. 850 திருமுழுக்கு அவசரத் தேவை நீங்கலாக, அங்கீகரிக்கப்பட்ட திருவழிபாட்டு நூல்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குமுறைக்கேற்ப அளிக்கப்படவேண்டும். ஓர் அவசரத் தேவையில் அருளடையாளத்தின் செல்லத்தக்க நிலைக்குத் தேவையானவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்;

தி.ச. 851. திருமுழுக்குக் கொண்டாட்டத்தை தக்க விதத்தில் தயாரிக்கவேண்டும். எனவே,

1. திருமுழுக்கு பெற விரும்பும் வயது வந்தோரைக் கிறிஸ்தவப் புகுமுகநிலையில் சேர்க்கவேண்டும். அவர் ஆயர் பேரவையால் தழுவி அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவப் புகுமுகச் சடங்குமுறைக்கும் மற்றும் அதே பேரவை வெளியிட்டுள்ள சிறப்பு விதிமுறைகளுக்கும் ஏற்ப, இயன்றவரை, பல்வேறு படிநிலைகள் வழியாக அருளடையாளப்புகுமுக நிலைக்கு இட்டுச் செல்லப் படவேண்டும்.

2. திருமுழுக்குப் பெறவேண்டிய குழந்தையின் பெற்றோருக்கும், அவ்வாறே ஞானப் பெற்றோரின் பணியை மேற்கொள்ள வேண்டியவர்களுக்கும் இந்த அருளடையாளத்தின் பொருள், அத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடமைகள் பற்றித் தக்க முறையில் பயிற்றுவிக்கவேண்டும். பங்குக்குரு, தாமாகவோ மற்றவர்கள் வழியாகவோ, மேய்ப்புப்பணி சார்ந்த அறிவுரைகளாலும் பொது இறைவேண்டலாலும் பெற்றோர்கள் தக்க முறையில் தயாரிக்கப்படும்படி கவனித்துக் கொள்ளவேண்டும். இந்நோக்கத்திற்காகப் பலகுடும்பங்களை ஒன்று சேர்க்கவேண்டும்; எங்கு இயலுமோ அங்கு அக்குடும்பங்களைச் சந்திக்கவேண்டும்.

தி.ச. 852 வயதுவந்தோர் திருமுழுக்குப்பற்றிய திருச்சபைச் சட்ட விதியமைப்புகள் குழந்தைப் பருவத்தைக் கடந்து, அறிவுப் பயன்பாட்டை அடைந்துள்ள அனைவருக்கும் பொருந்தும்.

2) திருமுழுக்கைப் பொறுத்தவரை தற்பொறுப்பு ஏற்க இயலாத ஒருவர் ஒரு குழந்தையாகக் கருதப்படுவார்.

தி.ச. 853. திருமுழுக்கு அளிக்கப் பயன்படுத்த வேண்டிய தண்ணீரை, ஓர் அவசரத் தேவைக்குத் தவிர, திருவழிபாட்டு நூல்களின் விதியமைப்புகளுக்கேற்ப ஆசீர்வதிக்க வேண்டும்.

தி.ச. 854 ஆயர் பேரவையின் விதியமைப்புகளைக் கடைபிடித்து, திருமுழுக்கை முழுக்கு முறையிலோ ஊற்றுதல் முறையிலோ அளிக்கவேண்டும்.

தி.ச. 855.. கிறிஸ்தவ மனநிலைக்குப் புறம்பான ஒருபெயரைச் சூட்டாதவாறு பெற்றோர், ஞானப்பெற்றோர் மற்றும் பங்குக்குரு கவனித்துக் கொள்ள வேண்டும்.

தி.ச. 856. திருமுழுக்கு எந்தவொரு நாளிலும் கொண்டாடலாம் என்றாலும், சாதாரணமாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில், அல்லது இயன்றவரை, பாஸ்காத் திருவிழிப்பின்போது கொண்டாடுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.

தி.ச. 857. ஓர் அவசரத் தேவைக்குத் தவிர, திருமுழுக்கிற்குரிய இடம் ஓர் ஆலயம் அல்லது செபக்கூடமாகும்.

2) நியாயமான ஒரு காரணம் வேறுவிதமாகத் தூண்டினாலன்றி, வழக்கமாக, வயதுவந்த ஒருவர் அவரின் சொந்தப்பங்கு ஆலயத்திலும், ஒரு குழந்தை அதன் பெற்றோர்க்குரிய பங்கு ஆலயத்திலும் திருமுழுக்குப் பெறவேண்டும்.

தி.ச. 858. ஒவ்வொரு பங்கு ஆலயமும் ஒரு திருமுழுக்குத் தொட்டியைக் கொண்டிருக்கவேண்டும். இக்காரியத்தில் மற்ற ஆலயங்கள் ஏற்கெனவே முயன்று பெற்றிருக்கும் அதே உரிமையைக் கருத்தில் கொள்ளவேண்டும்

2) தலத்திருச்சபை ஆளுநர், தலப் பங்குக்குருவைக் கேட்டறிந்தபின், விசுவாசிகளின் வசதிக்காகப் பங்கின் எல்லைக்குள் மற்றோர் ஆலயம் அல்லது செபக்கூடத்திலும் ஒரு திருமுழுக்குத் தொட்டி வைக்கப்படும்படி அனுமதிக்கலாம் அல்லது கட்டளையிடலாம்.

தி.ச. 859. திருமுழுக்குப் பெறவேண்டியவர், தூரம் அல்லது மற்றச் சூழ்நிலைகளின் காரணமாக, பங்கு ஆலயத்திற்கோ, அல்லது தி.ச. 858, 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள செபக்கூடத்திற்கோ மிகவும் சிரமமின்றிச் செல்லவோ கொண்டுவரப்படவோ முடியாதெனில், மிக அருகில் உள்ள மற்றோர் ஆலயம் அல்லது செபக்கூடம் அல்லது மற்றொரு பொருத்தமான இடத்தில்கூடத் திருமுழுக்கு அளிக்கலாம், அளிக்கவும் வேண்டும்.

தி.ச. 860. திருமுழுக்கு, ஓர் அவசரத் தேவைக்குத் தவிர, தலத்திருச்சபை ஆளுநர் கனமான காரணத்திற்காக அனுமதித்திருந்தாலன்றி, தனியார் வீடுகளில் அளிக்கக்கூடாது.

2) மறைமாவட்ட ஆயர் வேறுவிதமாக விதித்திருந்தாலன்றி, ஓர் அவசரத் தேவை அல்லது மேய்ப்புப் பணி சார்ந்த வேறு சில தவிர்க்க முடியாத காரணம் நீங்கலாக, திருமுழுக்கை மருத்துவமனைகளில் கொண்டாடக்கூடாது.

இயல் 2

திருமுழுக்குப் பணியாளர்

தி.ச. 861. திருமுழுக்கின் சாதாரணப் பணியாளர் ஆயர், குரு மற்றும் திருத்தொண்டர் ஆவர். இக்காரியத்தில் தி.ச. 530, 1ல் குறிப்பிடப்பட்டுள்ள விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

2) சாதாரணப் பணியாளர் உடனில்லை அல்லது அவர் செயல்பட இயலவில்லை என்றால், வேதியர் அல்லது தலத்திருச்சபை ஆளுநரால் இப்பணிக்கென நியமிக்கப்பட்டுள்ள மற்றொருவர் சட்டமுறைப்படி திருமுழுக்கு அளிக்கலாம். உண்மையில் ஓர் அவசரத்தேவை எழும்போது எவரும் சரியான எண்ணத்துடன் திருமுழுக்கு அளிக்கலாம். ஆன்ம மேய்ப்பர்கள், சிறப்பாகப் பங்குக்குருக்கள், திருமுழுக்கு அளிக்கும் சரியான முறைபற்றிக் கிறிஸ்தவ விசுவாசிகளைப் பயிற்றுவிக்க அக்கறை செலுத்தவேண்டும்.

தி.ச. 862. ஓர் அவசரத் தேவைக்குத் தவிர, உரிய அனுமதியின்றி, மற்றொருவரின் எல்லைக்குள் தமது ஆளுகைக்கு உட்பட்டவர்களுக்குக்கூட திருமுழுக்கு அளிப்பதற்கு எவருக்கும் அனுமதியில்லை.

தி.ச. 863. குறைந்த அளவு பதினான்கு வயது நிரம்பிய, வயது வந்நவர்களின் திருமுழுக்கு மறைமாவட்ட ஆயரிடம் தெரிவிக்கப்படவேண்டும், பொருத்தமென்று அவர் கருதினால் அவரே திருமுழுக்கு அளிக்கலாம்.

இயல் 3

திருமுழுக்குப் பெறவேண்டியவர்கள்

தி.ச. 864. இன்னும் திருமுழுக்குப் பெறாதவர்கள் மட்டுமே திருமுழுக்குப் பெறத் தகுதியுடையவர்.

தி.ச. 865. வயதுவந்தவர் திருமுழுக்குப் பெறவேண்டுமென்றால், திருமுழுக்குப் பெறுவதற்கான விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கவேண்டும்; விசுவாச உண்மைகளிலும் கிறிஸ்தவ கடமைகளிலும் போதுமான அளவு பயிற்றுவிக்கப்பட்டிருக்கவேண்டும்; கிறிஸ்தவ புகுமுகநிலை வழியாகக் கிறிஸ்தவ வாழ்வைச் சோதித்து அறியவேண்டும்; மேலும் தம்முடைய பாவங்களுக்காக வருந்த அவரை அறிவுறுத்த வேண்டும்.

2) இறக்கும் ஆபத்திலுள்ள வயதுவந்தவர் விசுவாசத்தின் முக்கிய உண்மைகளைப் பற்றி ஓரளவு அறிவு பெற்று, திருமுழுக்குப் பெறுவதற்கான விருப்பத்தை ஏதாவது ஒரு விதத்திpல் வெளிப்படுத்தி, கிறிஸ்தவ சமயக் கட்டளைகளைக் கடைப்பிடிக்கப் போவதாக வாக்குறுதி அளித்தருந்தால், அவருக்குத் திருமுழுக்கு அளிக்கலாம்.

தி.ச. 866. கனமான காரணம் தடுத்தாலன்றி, வயதுவந்த ஒருவர் திருமுழுக்குப் பெறும்போது, திருமுழுக்கிற்குப் பின் உடனே அவருக்கு உறுதிப்பூசுதல அளிக்கவேண்டும். அவர் நற்கருணைக் கொண்டாட்டத்தில் பங்கேற்றுத் திருவிருந்தும் உட்கொள்ளவேண்டும்.

தி.ச. 867. குழந்தைகளுக்கு முதல்சில வாரங்களுக்குள் திருமுழுக்கு அளிக்கப்படுவதைக் கவனித்துக்கொள்ளப் பெற்றோர் கடமைப்பட்டுள்ளனர்; பிறப்பிற்குப்பின், கூடிய விரைவில், ஏன், அதற்கு முன்பே கூட, குழந்தைக்கு அருளடையாளத்தைக் கேட்கவும் அதற்காகத் தக்கமுறையில் தயாரிக்கவும் பெற்றோர் பங்குக்குருவை அணுகவேண்டும்.

2) குழந்தை இறக்கும் ஆபத்தில் இருந்தால், எவ்வித கால தாமதமுமின்றி, அதற்குத் திருமுழுக்கு அளிக்கவேண்டும்.

தி.ச. 868. குழந்தைக்குச் சட்ட முறைப்படி திருமுழுக்கு அளிக்கத் தேவையானவை:

1) பெற்றோர், குறைந்த அளவு அவர்களில் ஒருவர் அல்லது சட்ட முறைப்படி அவர்கள் இடத்தில் இருப்பவர் ஒப்புதல் அளிக்கவேண்டும்.

2) குழந்தை கத்தோலிக்கச் சமயத்தில் வளர்க்கப்படும் என்பதற்குப் போதுமான நம்பிக்கை இருக்கவேண்டும்; அத்தகைய நம்பிக்கை முற்றிலுமாக இல்லையெனில், தனிச்சட்டத்தின் விதியமைப்புகளுக்கு ஏற்பத் திருமுழுக்கைத் தள்ளி வைக்கவேண்டும்; அதற்கான காரணத்தைப் பெற்றோருக்குத் தெரிவிக்கவேண்டும்.

3) கத்தோலிக்கப் பெற்றோரின் குழந்தைக்கு, உண்மையிலே கத்தோலிக்கரல்லாத பெற்றோரின் குழந்தைக்குக்கூட, இறக்கும் ஆபத்தில், பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராகக்கூட, சட்டமுறைப்படி திருமுழுக்கு அளிக்கலாம்.

தி.ச. 869. ஒருவர் திருமுழுக்கு பெற்றுள்ளளாரா அல்லது திருமுழுக்கு செல்லத்தக்க விமுதத்தில் அளிக்கப்பட்டதா என்ற ஐயம் எழுந்து, கவனமான ஆய்வுக்குப்பின் ஐயம் நீடித்தால், அவருக்கு நிபந்தனைகளுக்குட்பட்டுத் திருமுழுக்கு அளிக்கவேண்டும்.2) திருமுழுக்கு அளிக்க பயன்படுத்திய பொருள் மற்றும் வாய்ப்பாட்டை ஆய்வுசெய்து, மேலும் திருமுழுக்குப் பெற்ற வயது வந்த ஆள் மற்றும் திருமுழுக்குப் பணியாளரின் எண்ணத்தைக் கருத்திற்கொண்டு, திருழுக்கின் செல்லத்தக்கநிலை பற்றி ஐயப்படுவதற்குக் கனமான காரணம் இருந்தாலன்றி, கத்தோலிக்கமல்லாத ஒரு திருச்சபைச் சமூகத்தில் திருமுழுக்குப் பெற்றவர்களுக்கு நிபந்தனைகளுக்குட்பட்டுத் திருமுழுக்கு அளிக்கக்கூடாது.

3) 1 மற்றும் 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள காரியங்களில், திருமுழுக்கு அளித்தமை அல்லது அதன் செல்லத்தக்கநிலைபற்றி ஐயம் நீடித்தால், திருமுழுக்கு அளிக்கப்பெற வேண்டியவா வயது வந்தவரெனில், அவருக்குத் திருமுழுக்கு அருளடையாளத்தின் கோட்பாட்டை விளக்கும் வரை திருமுழுக்கு அளிக்கக்கூடாது. மேலும், முந்திய திருமுழுக்கின் செல்லத்தக்கநிலை பற்றி ஐயப்படுவதற்கான காரணங்களை அந்த ஆளுக்கும், ஒரு குழந்தையாக இருந்தால், அதன் பெற்றோர்களுக்கும் விளக்கவேண்டும்.

தி.ச. 870. கைவிடப்பட்ட அல்லது கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு, கவனமான ஆய்வின் மூலம் அது திருமுழுக்குப் பெற்றமை நிலைநாட்டப்பட்டாலன்றி, திருமுழுக்கு அளிக்கவேண்டும்.

தி.ச. 871. சிதைவுற்ற கருக்கள் உயிரோடிருப்பின், இயன்றவரை திருமுழுக்கு அளிக்கவேண்டும்.

இயல் 4

ஞானப்பெற்றோர்.

தி.ச. 872. திருமுழுக்கு அளிக்க வேண்டியவருக்கு, இயன்றவரை, ஒரு ஞானப்பெற்றோரைக் கொடுக்கவேண்டும். இவர் வயது வந்தவரின் திருமுழுக்கில் கிறிஸ்தவப் புகுமுக நிலையில் அவருக்குத் துணைபுரிவார், குழந்தையை அதன் பெற்றோருடன் திருமுழுக்கிற்குக் கையளிப்பார், திருமுழுக்குப் பெற்றவர் திருமுழுக்கிற்கேற்பக் கிறிஸ்தவ வாழ்வு நடத்தவும், திருமுழுக்கில் ஊன்றியுள்ள கடமைகளை உண்மையுடன் நிறைவேற்றவும் உதவி செய்வார்.

தி.ச. 873. ஞானப்பெற்றோர் ஒருவர் மட்டும், ஆண் அல்லது பெண் இருக்கலாம், அல்லது ஒவ்வொரு பாலினத்திலும் ஒருவர் இருக்கலாம்.

தி.ச. 874. 1) ஞானப்பெற்றோர் பணியை மேற்கொள்வதற்கு ஒருவர்:

1) திருமுழுக்குப் பெறவேண்டியவா அல்லது அவரின் பெற்றோர் அல்லது அவர்களின் இடத்தில் இருப்பவர், அல்லது, அவர்கள் இல்லாதிருப்பின், பங்குக்குரு அல்லது பணியாளரால் நியமிக்கப்பட்டிருக்கவேண்டும், இப்பணிக்குத் தகுதியுடையவராகவும் அதை நிறைவேற்றும் எண்ணம் கொண்டவராகவும் இருக்கவேண்டும்.

2) மறைமாவட்ட ஆயர் வேறொரு வயதை நிர்ணயித்திருந்தாலோ அல்லது பங்குக்குருவுக்கோ அல்லது பணியாளருக்கோ நியாயமான ஒரு காரணத்திற்காக விதிவிலக்கு அளிக்கவேண்டுமென்று தோன்றினாலோ அன்றி பதினாறு வயது நிரம்பியவராக இருக்கவேண்டும்.

3) கத்தோலிக்கராகவும், உறுதிப்பூசுதல் பெற்று ஏற்கெனவே புனிதமிகு நற்கருணை அருளடையாளத்தைப் பெற்றவராகவும், விசுவாசத்திற்கும் தாம் மேற்கொள்ளவிருக்கும் பணிக்கும் ஏற்ற வாழ்வு நடத்துபவராகவும் இருக்கவேண்டும்.

4) சட்டமுறைப்படி விதிக்கப்பட்ட அல்லது அறிக்கையிடப்பட்ட எவ்விதத் திருச்சபைத் தண்டனைக்கும் உட்பட்டவராக இருக்கக்கூடாது.

5) திருமுழுக்குப் பெறவேண்டியவரின் தந்தையாகவோ தாயாகவோ இருக்கக்கூடாது.

2) கத்தோலிக்கமல்லாத ஒரு திருச்சபைச் சமூகத்தில் திருமுழுக்குப் பெற்ற ஒருவர், ஒரு கத்தோலிக்க ஞனப் பெற்றோருடன் சேர்ந்து மட்டுமே, அதுவும் ஒரு சாட்சியாக மட்டுமே அனுமதிக்கப்படலாம்.

இயல் 5

அளிக்கப்பட்ட திருமுழுக்கின் சான்றும் பதிவும்.

தி.ச.875. திருமுழுக்கு அளிப்பவர், ஞானப்பெற்றோர் ஒருவர் இருந்தாலன்றி, திருமுழுக்கு அளித்ததை எண்பிக்கக்கூடிய குறைந்த அளவு ஒரு சாட்சியாவது இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

தி.ச.876. திருமுழுக்கு அளித்ததை எண்பிக்க, வேறு எவருக்கும் பாதிப்பு இல்லையெனில், ஐயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சாட்சியின் அறிக்கை அல்லது வயதுவந்த ஒருவர் திருமுழுக்குப் பெற்றிருந்தால், அவரின் சத்திய வாக்குமூலம் போதுமானது.

தி.ச.877. திருமுழுக்கைக் கொண்டாடிய இடத்தின் பங்குக்குரு, திருமுழுக்குப் பெற்றவர்களின் பெயர்கள், பணியாளர், பெற்றோர், ஞானப்பெற்றோர், சாட்சிகள் இருப்பின் அவர்கள், திருமுழுக்கு அளித்த இடம், நாள் ஆகியவற்றை, பிறந்தநாள் மற்றும் இடத்தைக் குறிப்பிட்டுத் திருமுழுக்குப் பதிவேட்டில் கவனத்துடனும் காலதாமதமின்றியும் பதிவு செய்யவேண்டும்.

2) திருமணமாத ஒரு தாயின் குழந்தையாக இருந்தால், தாயின் பெயரை, அவரின் தாய்மை வெளிப்படையாகத் தெரிந்திருந்தால் அல்லது அவர் தாமாகவோ, எழுத்து மூலமாகவோ இரண்டு சாட்சிகளின் முன்னிலையிலோ அதைக் கேட்டுக் கொண்டால், பதிவு செய்யவேண்டும், அவ்வாறே தந்தையின் பெயரை, அவரது தந்தைமை ஏதாவதொரு பொது ஆவணத்தின் மூலம் அல்லது பங்குக்குரு மற்றும் இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் அவரின் சொந்த அறிக்கை மூலம் எண்பிக்கப்பட்டிருந்தால், பதிவு செய்யவேண்டும், மற்ற சூழ்நிலைகளில், திருமுழுக்குப் பெற்றவரின் பெயரை, தந்தை அல்லது பெற்றோரின் பெயரைப் பற்றிய எவ்விதக் குறிப்புமின்றிப் பதிவு செய்யவேண்டும்.

3) தத்தெடுக்கப்பட்ட ஒரு குழந்தையாக இருந்தால், தத்தெடுக்கும் பெற்றோரின் பெயர்களைப் பதிவு செய்யவேண்டும், மேலும், இயல்பான பெற்றோரின் பெயர்களை, குறைந்த அளவு அப்பகுதிக் குடியுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டால், ஆயர் பேரவையின் விதியமைப்புகளைக் கருத்திற்கொண்டு, 1 மற்றும் 2 ன் விதிமுறைக்கேற்ப, பதிவு செய்யவேண்டும்.

தி.ச.878. பங்குக்குருவோ அவரது முன்னிலையிலோ திருமுழுக்கு அளிக்கப்படவில்லையென்றால், திருமுழுக்குப் பணியாளர்- அவர் யாராக இருந்தாலும்- திருமுழுக்கு அளிக்கப்பட்ட பங்கின் பங்குக்குருவுக்கு அளிக்கப்பட்ட திருமுழுக்கைப் பற்றித் தெரிவிக்கவேண்டும். அவர் தி.ச. 877, 1 ன் விதிமுறைக்கேற்பத் திருமுழுக்கைப் பதிவு செய்யவேண்டும்.

 

திருமுழுக்கு அருட்சாதன வழிபாடு

குரு : உங்கள் குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறீர்கள்?
பெற் : …………………………. என்ற பெயரிட விரும்புகிறோம்.

குரு : (பெயர்)க்காக நீங்கள் இறைவனின் திருச்சபையிடம் கேட்பது என்ன?
பெற் : திருமுழுக்கு (அல்லது ஞானஸ்தானம்)

குரு : உங்கள் குழந்தை(களு)க்கு திருமுழுக்குக் கேட்கிறீர்கள். உங்கள் குழந்தை(கள்) கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து, கிறிஸ்து நமக்கு கற்பித்தது போல், இறைவனுக்கும், தங்கள் அயலாருக்கும் அன்பு செய்து வாழ அவர்களை விசுவாசத்தில் வளர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு; இதை உணர்ந்திருக்கிறீர்களா?
பெற் : உணர்ந்திருக்கிறோம்.

குரு : ஞானத்தாய் தந்தையரே, இக்குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற நீங்கள் உதவி புரிவீர்களா?

குரு : (பெயர் ……………….) (அல்லது குழந்தைகளே) கிறிஸ்தவ சமூகம் உங்களைப் பெருமகிழ்வுடன் வரவேற்கின்றது. இந்த சமூகத்தின் பெயரால் நான் உங்கள் மீது சிலுவை அடையாளம் வரைகிறேன். பின்னர் உங்கள் பெற்றோரும், ஞானத்தாய் தந்தையரும் மீட்பராம் கிறிஸ்துவின் அடையாளத்தை உங்கள் மீது வரைவார்கள்.

(குரு மௌனமாக குழந்தையின் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைய, தொடர்ந்து பெற்றோரும், ஞானப் பெற்றோரும் அவ்வாறே செய்கின்றனர்)

விசுவாசிகளின் மன்றாட்டு

குரு : அன்பார்ந்த சகோதரர்களே, திருமுழுக்கின் அருளைப் பெறஇருக்கும் இக்குழந்தை(களு)க்காகவும், இவர்களுடைய பெற்றோர், ஞானத்தாய் தந்தையருக்காகவும் திருமுழுக்குப் பெற்றுள்ள அனைவருக்காகவும், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை இறைஞ்சுவோமாக!

குரு : உம்முடைய இறப்பு, உயிர்ப்பு என்னும் ஒளிவீசும் தெய்வீக மறைபொருளால் திருமுழுக்கின் வழியாக இக்குழந்தைகள் மறுபிறப்பு அடைந்து திருச்சபையில் சேர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு : திருமுழுக்கு, உறுதிப்பூசுதல் வழியாக இவர்கள் விசுவாசமுள்ள சீடர்களாகவும், உமது நற்செய்தியின் சாட்சிகளாகவும், விளங்கச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு : தூய ஆவியின் வழியாக இவர்களை விண்ணரசின் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு  : பெற்றோரும் ஞானப்பெற்றோரும் இக் குழந்தைகளுக்கு விசுவாசத்தின் சிறந்த மாதிரியாய் விளங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
குரு : இவர்களுடைய குடும்பங்களை உமது அன்பில் என்றும் காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு  : எங்கள் அனைவரிடமும் திருமுழுக்கின் அருளைப் புதுப்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

புனிதர்களை நோக்கி மன்றாட்டு

குரு : 1. இறைவனின் அன்னையாம் புனித மரியாயே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
2. புனித சூசையப்பரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
3. புனித ஸ்நானக அருளப்பரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
4. புனித இராயப்பரே, சின்னப்பரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
5. புனித தோமையாரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
6. புனித சவேரியாரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

(கடைசியாக ) இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே.
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ங்கள்

பேய் ஓட்டும் செபம்

குரு : நித்தியரான எல்லாம் வல்ல இறைவா, தீமையின் ஆவியான சாத்தானின் ஆதிக்கத்தை எங்களிடமிருந்து அகற்றவும், இருளிலிருந்து மனிதனை விடுவித்து, உமது ஒளியின் வியத்தகு அரசில் கொண்டுவந்து சேர்க்கவும், உம் திருமகனை இவ்வுலகிற்கு அனுப்பினீர். இக்குழந்தைகளை சென்மப் பாவத்திலிருந்து மீட்டு உமது மாட்சியின் ஆலயமாக்கி, இவர்களில் தூய ஆவி குடிகொள்ளச் செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
எல் : ஆமென்.

ஆயத்த எண்ணெய் பூசுதல்

குரு : உங்கள் மீது கிறிஸ்து இரட்சகரின் அடையாளம் வரைந்து மீட்பின் எண்ணெய் பூசுகின்றோம். நம் ஆண்டவராகிய அதே கிறிஸ்துவின் ஆற்றல் உங்களைத் திடப்படுத்துவதாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் அவரே.

திருமுழுக்கு விழா முன்னுரை

குரு : அன்பார்ந்த சகோதரர்களே, எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர், இக்குழந்தைகளுக்கு நீரினாலும், பரிசுத்த ஆவியினாலும் புதுவாழ்வு அளித்தருளுமாறு செபிப்போமாக.
குரு : அன்பார்ந்த பெற்றோரே, ஞானத்தாய் தந்தையரே, ஞானஸ்நானம் எனும் திருவருட் சாதனம் வழியாக நீங்கள் ஒப்புக்கொடுத்த இக்குழந்தைகள் அன்புள்ள இறைவனிடமிருந்து நீரினாலும், ஆவியினாலும் புதுவாழ்வு பெறப்போகின்றார்கள். இவர்களில் இந்த இறைவாழ்வு பாவநோயிலிருந்து பாதுகாக்கப் பெற்று நாளுக்கு நாள் வளர்ச்சியடையுமாறு இவர்களை நீங்கள் விசுவாசத்தில் வளர்க்க முயல வேண்டும்.

ஆகவே. உங்கள் விசுவாசத்தினால் தூண்டப்பெற்று, இந்தப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் உங்கள் ஞானஸ்நானத்தை நினைவில்கொண்டு பாவத்தை விட்டு விடுங்கள்; இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தை அறிக்கையிடுங்கள். அதுவே திருச்சபையின் விசுவாசம்; அதிலேதான் குழந்தைகள் ஞானஸ்நானம் பெறுகின்றனர்.

குரு : இறைமக்களுக்குரிய சுதந்திரத்துடன் வாழ, நீங்கள் பாவத்தை விட்டுவிடுகிறீர்களா?
எல்: விட்டுவிடுகிறேன்

குரு : பாவம் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமலிருக்க நீங்கள் பாவத்தின் மாயக் கவர்ச்சிகளை விட்டுவிடுகிறீர்களா?
எல்: விட்டுவிடுகிறேன்

குரு : பாவத்திற்குக் காரணனும், தலைவனுமாகிய சாத்தானை விட்டுவிடுகிறீர்களா?
எல்: விட்டுவிடுகிறேன்

விசுவாசப் பிரமாணம்

குரு : வானமும், வையமும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை விசுவசிக்கிறீர்களா?
எல் : விசுவசிக்கிறோம்

குரு : அவருடைய ஒரே மகனும், கன்னிமரியிடமிருந்து பிறந்து, பாடுபட்டு, அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரில் நின்று உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப்பக்கம் விற்றிருப்பவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை விசுவசிக்கிறீர்களா?
எல் : விசுவசிக்கிறேன்

குரு : பரிசுத்த ஆவியையும், பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபையையும், புனிதர்களின் சமூக உறவையும், பாவமன்னிப்பையும் உடலின் உயிர்ப்பையும், நித்திய வாழ்வையும் விசுவசிக்கிறீர்களா?
எல் : விசுவசிக்கிறேன்

குரு : இதுவே நமது விசுவாசம். இதுவே திருச்சபையின் விசுவாசம். இதை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அறிக்கையிடுவதில் பெருமை கொள்கிறோம்.
எல் : ஆமென்.

திருமுழுக்கு அளித்தல்

குரு : ஆகவே உங்களோடு சேர்ந்து இப்பொழுது நாமெல்லாரும் அறிக்கையிட்ட திருச்சபையின்; விசுவாசத்தில் (பெயர் அல்லது இவர்கள்) திருமுழுக்குப் பெறுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?
பெற். ஞானப்.: விரும்புகிறேன்

குரு : (மும்முறை தண்ணீர் ஊற்றி) பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் நான் உன்னைக் கழுவுகிறேன்.

திருத்தைலம் பூசுதல்

குரு : நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாகிய எல்லாம் வல்ல இறைவன் உங்களைப் பாவத்திலிருந்து விடுவித்து, நீரினாலும், பரிசுத்த ஆவியினாலும் உங்களுக்கு மறுபிறப்பு அளித்துள்ளார். இப்பொழுது அதே கிறிஸ்து உங்கள் மீது மீட்பின் தைலம் பூசுகிறார். எனவே, நீங்கள் இறைமக்களோடு இணைக்கப்பெற்று, குருவும், ஆசிரியரும் அரசருமாகிய கிறிஸ்துவின் உறுப்புக்களாய் நிலைத்திருந்தது, நித்திய வாழ்வு பெறுவீர்களாக.

(பிறகு குரு கிறிஸ்மா (Chrisma) எனும் திருத்தலத்தை திருமுழுக்குப்பெற்ற ஒவ்வொருவரின் உச்சந்தலையில் மௌனமாகப் பூசுகிறார்.)

வெண்ணிற ஆடை அணிவித்தல்

குரு : (திருமுழுக்கு வெண்ணிற ஆடையை ஒவ்வொருவருக்கும் கொடுத்து) நீங்கள் புதுப்படையாக மாறி, கிறிஸ்துவை அணிந்திருக்கிறீர்கள். இந்த வெண்ணிற ஆடை உங்களது மேன்மையின் அடையாளமாய் இருப்பதாக. உங்கள் உறவினரின் சொல்லாலும், முன்மாதிரிகையாலும் நீங்கள் உதவிபெற்று, இதை மாசுபடாமல் நித்திய வாழ்வுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பீர்களாக.
எல் : ஆமென்.

எரியும் திரி கொடுத்தல்

குரு : (பாஸ்கா திரியை கையில் தொட்டவாறு) கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
(குழந்தை(களி)ன் தந்தை(யர்) பாஸ்கா திரியிலிருந்து (தத்) தம் குழந்தையின் சார்பில் திரியைப் பற்ற வைக்கின்றனர்)

குரு : பெற்றோர்களே, ஞானத்தாய் தந்தையரே உங்கள் குழந்தைகளின் உள்ளத்தில் அணையாது காக்கும்பொருட்டு உங்களிடம் இந்த ஒளி ஒப்படைக்கப்படுகிறது. கிறிஸ்துவினால் ஒளிபெற்று இக்குழந்தைகள் ஒளியின் மக்களாய் என்றும் வாழ்வார்களாக. விசுவாசத்தில் இவர்கள் நிலைத்திருந்து ஆண்டவர் வரும்போது புனிதர் அனைவரோடும், வான்வீட்டில் அவரை எதிர்கொண்டு செல்லத் தகுதிபெறுவார்களாக.

குரு : எப்பேத்தா (திறக்கப்படு)

குரு : செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும் ஆண்டவர் இயேசு செய்தருளினார், நீ விரைவில் அவரது வார்த்தையை தந்தையாகிய இறைவனின் புகழும், மகிமையும் விளங்கக் காதல் கேட்கவும், அவ்விசுவாசத்தை நாவால் அறிக்கையிடவும் அவரே செய்தருள்வாராக.
எல் : ஆமென்.

(திருப்பலியில் பெற்றோர், ஞானப்பெற்றோர் காணிக்கைப் பொருட்கள் எடுத்துச்சென்று குருவிடம் அளிக்கலாம்)

கிறிஸ்து கற்பித்த செபம்

குரு : அன்பார்ந்த சகோதரர்களே, திருமுழுக்கினால் மறுபிறப்பு அடைந்து இறைவனின் மக்களாகவே இருக்கும் இக்குழந்தைகள் உறுதிபூசுதலால் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெறுவார்கள். ஆண்டவரின் பீடத்தை அணுகி வந்து, அவரது திருப்பலி விருந்தில் பங்குகொள்வார்கள். திருச்சபையில் இறைவனைத் தந்தையென அழைப்பார்கள். நாம் அனைவரும் பெற்றுக்கொண்ட சுவிகாரப் பிள்ளைகளுக்குரிய உணர்வுடன், ஆண்டவர் நமக்குக் கற்பித்தது போல் இக்குழந்தைகளின் பெயரால் இப்போது ஒன்றாய்ச் சேர்ந்து செபிப்போம்.
எல் : பரலோகத்தில் இருக்கிற ………………..

ஆசியுரை

குரு : எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர் கன்னிமரியிடமிருந்து பிறந்த தம் திருமகன் வழியாக குழந்தைகள் மீது ஒளிரும் நித்திய வாழ்வின் நம்பிக்கையால் கிறிஸ்தவத் தாய்மார்களை மகிழ்விக்கின்றார். அவரே, இக்குழந்தைகளின் தாய்மார்களை ஆசீர்வதிப்பாராக. தாங்கள் பெற்றெடுத்த மக்களுக்காக இப்பொழுது நன்றிசெலுத்தும் இத்தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் எக்காலமும் நன்றி செலுத்துவார்களாக.
எல் : ஆமென்.

குரு : மண்ணக வாழ்வையும், விண்ணக வாழ்வையும் வழங்கும் எல்லாம் எல்ல இறைவனாகிய ஆண்டவர் இக்குழந்தைகளின் தந்தையரை ஆசீர்வதிப்பாராக. இதனால் இவர்கள் தத்தம் மனைவியருடன் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் தம் மக்கள் முன் சொல்லாலும், முன்மாதிரியாலும் விசுவாசத்தின் முதற்சாட்சிகளாய் விளங்குவார்களாக.
எல் : ஆமென்.

குரு : நாம் நித்திய வாழ்வுபெற நீரினாலும், தூய ஆவியினாலும் நமக்கு மறுபிறப்பளித்த எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர் தம் விசுவாசிகளாகிய இந்த ஞானப் பெற்றோர்க்கு (இவர்களுக்கு) நிறை ஆசீர் அளிப்பாராக. இதனால், இறைமக்களிடையே இவர்கள் என்றும் எங்கும் உயிராற்றல்மிக்க உறுப்பினர்களாய்த் திகழ்வார்களாக. இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் இறைவன் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் தமது சமாதானத்தை வழங்குவாராக.
எல் : ஆமென்.

குரு : எல்லாம் வல்ல இறைவன் பிதா சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல் : ஆமென்.